துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

திங்கள், 27 டிசம்பர், 2010

பொருட் சுவை

உன்னவை என்னவை இல்லை என்றேன் நிம்மதி வந்தது

என்னவை உன்னவை இல்லை என்றேன் பகை வந்தது

என்னவை என்னதே என்றேன் தனிமை வந்தது

என்னவை உன்னவை என்றேன் பாசம் வந்தது

எல்லாம் உம்மவை என்றேன் பரிசு வந்தது

உன்னவை உன்னவையே என்றேன் மதிப்பு வந்தது

நம்மவை நம்மவையே என்றேன் ஒற்றுமை வந்தது

எல்லாம் பொதுமை என்றேன் பெருமை வந்தது

உன்னவை என்னவை என்றேன் உரசல் வந்தது

எல்லாம் நம்மவையே என்றேன் போர் வந்தது

எல்லாம் எனக்கே என்றேன் துன்பம் வந்தது

எல்லாம் ஏதுக்கு என்றேன் இன்பம் வந்தது

எல்லாம் இனிமையே என்றேன் இனிமையே வந்தது

மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது ஒழுக்கம் வந்தது

உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன் ஒற்றுமை வந்தது

உடலும் உனதல்ல உலகும் உனதல்ல மருமை வந்தது

எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல ஈமான் வந்தது

இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம் ஞானம் வந்தது

இறத்தல் மட்டும் வந்தால் போதும் இறைவன் பயம் வந்தது

சனி, 25 டிசம்பர், 2010

முட்டாள்களின் கூடாரம்

அறிமுகமில்லாத, முகவரி தெரியாத பல திரைப்பட நடிகை, நடிகர்களின் புகைப்படங்களை இன்றைய இளைஞர்களில் 100-க்கு 75% பேர் தம்முடைய பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டுள்ளனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி அனைவரும் இத்தகைய கேவலத்தை தொடருகின்றனர். யார் அவர்கள்? அவர்களின் சிறப்புத்தகுதிகள் என்ன? அவர்கள் நம்மிடமிருந்து எவ்வித்தில் வேறுபடுகின்றனர்? இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் பதில் "பெரிதாக ஒன்றுமில்லை" . அவர்களும் நம்மைப் போன்றவர்கள் தானே தவிர! ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. ஆம்!!! இத்தகைய கற்பனையில்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கிறது போலும் அவர்களைப்பற்றி!


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைப் போல அவர்களுக்கும் 'நடிப்பு' ஒரு தொழில் அவ்வளவு தான். இதை மறந்து நம்மவர்கள் அவர்களைப் பற்றி ஏதோ பெரிய தலைவர்களைப் போல் கற்பனை செய்துகொண்டு பைத்தியக்காரத்தனமாக அவர்களை பின்பற்றுவது மிகவும் வெட்கத்திற்கு உரியது.அனைத்து ஊர்களிலும் எங்கு காண்கிலும் பல நடிகர்களின் ரசிகர் மன்றப் பலகைகள். இவர்களின் தொழில் என்ன? ஏதேனும், அந்த நடிகரின் புது திரைப்படம் வெளிவந்தால் கட்-அவுட் வைப்பது, பத்திரிகை அடித்து விளம்பரப்படுத்துவது, இல்லையெனில், எப்போதாவது இரத்ததானம், கண்தானம் போன்றவற்றைச் செய்வது(எவருடைய பெயரையோ சொல்லி). அவர்களின் பல நடவடிக்கைகள் தேவையில்லாதவையாகவும், சில (இரத்ததானம், கண்தானம் ) பாராட்டுக்குரியதாகவும் உள்ளன. இருப்பினும் அனைத்து ரசிகர் மன்றங்களும் இத்தகைய இரத்ததானம், கண்தானம் போன்றவற்றில் ஈடுபடுவது கிடையாது. சில மட்டும்தான். மற்றவை அனைத்தும் வேண்டாத வெட்டி விளம்பரத்திற்காகத் செயல்படுகின்றன என்பது மறுத்தற்கியாலாத ஒன்று.

இவர்களின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கின் அத்தனையும் வெறும் விளம்பரத்திற்காக, விளம்பரத்திற்காக மட்டுமே. தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே. அதேசமயம் இவர்களில் சிலர் காட்டுமிராண்டித்தனமாக தமக்குப் பிடித்த நடிகர்களின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த ஒரு சுயமாக சிந்திக்கத் தெரிந்த மனிதனும் இத்தகைய இழிச்செயலை செய்ய மாட்டான். மீறியும் கொண்டாடுபவர்களை சுயபுத்தியில்லாதவர்கள் என்றுதானே சொல்ல வேண்டும்.

உங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்....உங்கள் பெற்றோரிடம் நீங்கள் ஆசையாக பேசியதுண்டா? அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டதுண்டா? உங்களையே நம்பி வந்த மனைவிக்கும், உங்களின் பாசத்தை, அரவணைப்பை என்றும் எதிர்பார்க்கும் குழந்தைகளிடம் நட்பாக நடந்து கொண்டதுண்டா? உங்களில் எத்தனை பேர் மேற்கூறியவற்றுக்கு "ஆம்" என்று பதிலளிக்க முடியும்? அறிமுகமில்லாத ஒருவருக்காக, தொடர்பே இல்லாத ஒருவருக்காக நீங்கள் எதற்காக இவ்வளவு பணத்தை வெட்டியாய் வீண்செலவு செய்கிறீர்கள். அதனால் நீங்கள் அடைந்த லாபம் தான் என்ன? உங்களுக்கு அதனால் சிறிதளவேனும் மகிழ்ச்சி கிடைத்ததா... நிரந்தரமாக எண்ணிப் பார்க்கும் அளவுக்கு! உங்களைப் பற்றி?உங்களைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் வறுமையில் வாடி, வறுமையின் விளிம்பில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக நீங்கள் ஏதேனும் செய்ததுண்டா? அவர்கள் மீது இரக்கப்பட்டதுண்டா?

யார் அந்த நடிகர்கள்? உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு, தொடர்பு? உங்களுக்காக அவர் என்ன செய்துள்ளார்? இதுவரை வந்த நடிகர்களும், இனி வரப்போகும் நடிகர்களும் இந்த மக்களின் முட்டாள்தனத்தை தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டு, அனைவரின் முகத்திலும் கரியைப் பூசிவிடுகின்றனர். இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து இருக்காது என நினைக்கிறேன். காரணம், உண்மை அதுதான்.விளம்பர நோக்கில்லாமல், தன்னலம் கருதாமல், யாரையும் மிகைப் படுத்தாமல் மக்களின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு ரசிகர் மன்றம் செயல்படுகிறதா எனில், இந்தியா ஒன்று கூட கிடையாது. எத்தனை மாமேதைகள், தலைவர்கள் தங்களுடைய சுகதுக்கங்களை துறந்து, தம் பெற்றோர்,மனைவி, மக்கள் என எல்லோரையும் இழந்து, நாட்டிற்காக அரும்பாடுபட்டு, இரத்தம் சிந்தி, தம் இன்னுயிரையும் ஈந்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு இங்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன? ஏன் அவர்களைப் பற்றிய சிறிய செய்திகளாவது தெரியுமா இவர்களுக்கு? சிறுபிள்ளைத் தனமாக இவர்களின் பின்னால் செம்மறியாட்டு மந்தைப் போல தொடருவது எவ்வளவு கேவலத்துக்குரியது.

மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அத்தகையப் பணியை தொடருவர்.திரைப்படம் என்பது என்ன? அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் அவ்வளவுதான். இல்லையெனில் எப்போதாவது அரிதாக ஏதேனும் செய்தியைத் தரும் ஒரு ஊடகம் அவ்வளவுதான். இதனையெல்லாம் மறந்து நம் மக்கள், திரைப்படம் எனும் மாயையை யாரும் செய்யமுடியாத ஏதோ சாகச காட்சிகளைப் போல உணருகின்றனர். அது ஒரு கானல் நீர். அது ஒரு கற்பனை. அது ஒரு பொழுதுபோக்கு. கற்பனையை ,மாயையை , நிழலை நம்பும் மனிதர்களாக இவர்கள்? தன் அபிமான நடிகரின்மீது வெறி பிடித்து திரிகின்றனர். குருட்டுத் தனமாக அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களோ, இவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர்.

இத்தகைய சூழல் தன்னுடைய முன்னேற்றத்திற்கு ஒரு ஆரோக்கியமான சூழலாகாது. நண்பர்களே! கற்பனையிலிருந்து விலகி வாருங்கள். எதார்த்தத்தை நம்புங்கள். உண்மையாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கடமையினை எண்ணிப் பாருங்கள்.திரைப்படங்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் அடிமையாகாதீர்கள். அனைத்தும் அறிந்த, பகுத்தறிவுமிக்க மனிதர்கள் நீங்கள்.

ஒரு நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது பத்திரிக்கைகளே. ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதே பத்திரிகைகள் தான். பத்திரிகைகள் நினைத்தால் நாட்டை எத்திசையிலும் திருப்பலாம். இவ்வளவு பெரிய பொறுப்பில் உள்ள பத்திரிக்கைகள் தங்களுடைய கடமையை மறந்து, சுய விளம்பரத்திற்காக, வணிகத்தையே முதன்மையாகக் கொண்டு நடிகர்களை தேவையில்லாமல் அதிகமாக முன்னிலைப் படுத்துவது மிகுந்த வருத்தத்திற்குரியது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியிலும் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் ஒரே தகவல் தொழில்நுட்ப ஊடகம் பத்திரிகைகள் தான். அத்தகைய பெருமைக்குரிய அவர்கள், தங்கள் கடமையினை உணர்ந்து, மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுடைய பங்கினை உணர்ந்து, செயல்பட்டால் இந்தியா 2020-ல் உறுதியாக வல்லரசாக மாறும். அதில் எவருக்கும் சந்தேகமிருக்காது.ஒரு நாட்டின் முதுகெலும்பே பத்திரிகைகள் தான். அவர்கள் சரியானமுறையில் செயல்படவேண்டும்.

பத்திரிகைகளிடமிருந்து எதிர்பார்ப்பது, இனியும் நடிகர், நடிகைகளைத் தேவையில்லாமல் முன்னிலைப்படுத்தாதீர்கள். அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்கிற நிலையில் மட்டுமே முன்னிலைப்படுத்துங்கள். அவர்கள் தான் இந்தியாவின் விடிவெள்ளி என்று முன்னிலைப்படுத்தாதீர்கள்.எதனையுமே உடனடியாக நம்பி விடும் இந்த மக்கள், பத்திரிகைகளால்(உங்களால்) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு மிகவும் வருத்தமாகஉள்ளது. நீங்கள் முன்னிலைப்படுத்தும் நடிகர்களை நம்பி, இந்த மக்கள் பலமுறை ஏமாற்றமடைந்துள்ளனர். இனியும் தொடர வேண்டாம் இந்த இழிநிலை. .

புதன், 22 டிசம்பர், 2010

அம்மா உன்னை நேசிக்கிறேன்

இந்த உலகில் எத்தனையோ உறவுகள் பேணப்பட்டாலும் , நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் இருப்பது போல் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..
இன்று இந்த அன்பிற்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனை பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..? ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு (Father is a Faith but Mother is a Fact) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விசயம்

நமது தாய் சொன்னால் தான் தந்தை யாரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்க்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது.
எத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்டு எனக்கு விடையளிப்பாள், அப்போது அவளின் ஸ்பரிசம் எனக்கு விளங்கவில்லை.

கடையில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம் பிடிப்பேன், தனக்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு தொகையில் எங்கள் குடும்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக செலவளிப்பாள் எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருள் கிடைத்த மகிழ்ச்சி தான் என்னை சுற்றிக்கொண்டதே தவிர என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை..

தென்மேற்கு பருவ மழையும் தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில் என் தாயோடு பயணித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும் தருவாயில் நான் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்த்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னைக் காத்து நின்று எனக்கு வரவேண்டிய ஜுரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில். தப்பித்த ஆனந்தம் தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்தக் கருணையின் வடிவம் தெரியவில்லை.. .

ஆண்டுகள் கழிந்தன. நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது. ஊர் சுற்றுவது. இரவில் ஊர் சுற்றிவிட்டு இரவு நடுநிசியில் தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காகக் கண்ணுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின் ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத் தான் வந்தததே தவிர என்னை ஒரு போர் வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை..
வந்தது என் கல்லூரி நாட்கள். ஊரைவிட்டு, என் குடும்பத்தைப் பிரிய நேரும் வேளை. இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் அன்னையின் கண்கள் குளமாகியது. அதைக்கூட புரிந்து கொள்ள முடியா வண்ணம் கல்லூரிக் கனவுகள் என் கண்களை மறைத்துவிட்டன.

கல்லூரியில் படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்.. ' தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே.... சாப்பிட்டியா? உடம்பு நல்லா இருக்காமா? ரோட்ல நிறைய வண்டிகள் வரும் பார்த்துப் போ ராஜா.... செலவுக்குப் பணம் இருக்கா? இப்படி கனிவின் முகவரியாய் என் தாய்.. நானோ.. ' இருக்கேம்மா..... எரிச்சல் பட்டுக் கொண்டு..... சரி.. சரி.. பணம் மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க... அப்புறம் பேசுறேன்...' என்று வெடுக்கென்று போனை கட் செய்யும்போது, பணத்தின் வருகைக்காகத் தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை.. .

ஆண்டுகள் கடந்தன... கல்லூரியையும் முடித்தேன்... எல்லோருக்கும் இடமளித்த வளைகுடா.. என்னையும் ஆரத்தழுவி அணைத்தது. அப்போது தான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை வெளிக்கொணர்ந்தது. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை பாசத்துடன் ஊட்டி விட்ட உணவின் சுவை தெரிந்தது.. .

கடும் குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போது தான் என்னை போர்த்தி விட்டு என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவணைப்பின் ஆழம் தெரிந்தது. இப்படிப் பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவணைப்பை இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்....

என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தி, இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலை பேசி அழைப்பு.. அதே நேசிப்பின் வார்த்தைகள் அவளிடத்தில்... நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத் வெளிக்கொணர 'அம்மா உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்ல வார்த்தை வராமல்... கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அணைக்கிறேன் தொலைபேசியை....

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்

புதன், 8 டிசம்பர், 2010

முஹர்ரம்

நபி (ஸல்)அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது இந்நாளில் யாரும் போர் புரிவதில்லை. இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் ஃபிர்அவ்னிடமிருந்து இறைவன் ஈடேற்றம் பெறச்செய்தான், நபி (ஸல்) அவர்களின் சொல்படி முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ம்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்து, இந்நாளில் நோன்பு வைப்பது சென்ற ஆண்டில் செய்துவிட்ட சிறிய பாவங்களை போக்கிவிடும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

முஹர்ரம் நாளில் நிகழ்ந்தவைகள்

இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

1- இப்றாஹீம் (அலை) அவர்கள் நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலைப்பெற்றது இந்நாளில்தான்

2- இப்றாஹீம் (அலை) அவர்கள் பிறந்ததும் இந்நாளில்தான்

3- இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு கலீல் خليل என்னும் பட்டம் இறைவனால் சூட்டப்பட்டதும் இந்நாளில்தான்

4- அய்யூப் (அலை) அவர்கள் நோயில் இருந்து குணம் பெற்றதும் இந்நாளில்தான்

5- ஈஸா (அலை) அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டதும் இந்நாளில்தான்

6-உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதும் இந்நாளில்தான்

7-நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் இருந்து கரை இறங்கியதும் இந்நாளில்தான்

8-யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்நாளில்தான்

9-தாவூத் (அலை) அவர்ளின் பாவமன்னிப்பு இறைவனால் ஏற்கப்பட்டதும் இந்நாளில்தான்

செவ்வாய், 7 டிசம்பர், 2010

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!

விவாகரத்துக்கு காரணமாகும் ஃபேஸ்புக்!
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க திருமண வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், விவாகரத்து வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் 80 விழுக்காட்டினர், விவகாரத்து கோரி தங்களிடம் வரும் தங்களது கட்சிகாரர்களின் எதிர்பாலர் புழங்கும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் கிடக்கும் அவர்களது உண்மை முகங்களையே ஆதாரங்களாக காட்டியே விவாகரத்து வாங்கி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

அதாவது தங்கள் கட்சிகாரருக்கு துரோகம் இழைக்கும்விதமாக வெறொரு பெண் அல்லது ஆணுடன் தொடர்பிலிருக்கும் விவரங்கள் மற்றும் அவர்களது பாலியல் இச்சைகள், வக்கிரங்களை ஃபேஸ்புக்கிலிருந்தே ஆதாரமாக காண்பித்து விவகாரத்து வாங்கிக் கொடுக்கிறார்களாம்

எதிர்காலத்தில் இப்படி ஒரு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது என்ற ஆபத்தை உணராமல், ஃபேஸ்புக்கில் உலா வருபவர்கள், தங்களது மனைவி அல்லது கணவனுக்குக் கூட தெரியாத அந்தரங்கமான விடயங்களை ஏற்றி வைக்க, பின்னாளில் அதுவே விவாகரத்து போன்ற சமயங்களில் வில்லனாக உருவெடுத்துவிடுகிறதாம்!

விவகாரத்து கோரி நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறும் ஆண் அல்லது பெண் தனது மனைவி அல்லது கணவன், சமூக வலைத்தளங்களில் கொட்டி வைத்துள்ள அசிங்கமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையே உதாரணமாக காட்டி, இப்படிப்பட்ட குணமுடையவருடன் சேர்ந்து வாழ முடியாது என கூற, நீதிமன்றமும் இத்தகைய அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் விவாகரத்து வழங்கிவிடுகிறது.

இவ்வாறு விவாகரத்து வாங்கி கொடுக்கும் வழக்கறிஞர்களில் 66 விழுக்காட்டினர், தங்களது விவாகரத்து வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக ஃபேஸ்புக் வலைத்தளங்களில் எதிர்தரப்பினர் கூறிவைத்துள்ளதையே காட்டுகின்றனராம்.

ஃபேஸ்புக்கை தொடர்ந்து 'மை ஸ்பேஸ்' தளம் 15 விழுக்காடும், 'ட்விட்டர்' தளம் 5 விழுக்காடும், இதர தளங்கள் 14 விழுக்காடும் வழக்கறிஞருக்கு ஆதாரம் அளிக்கும் தளங்களாக விளங்குகின்றனவாம்.

அமெரிக்கா கதை இதுவென்றால், பிரிட்டனிலோ 20 விழுக்காடு விவகாரத்துக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணமாக உள்ளதாம்.

" இவ்வாறு விவாகரத்திற்கு ஆளாகுபவர்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு குணம், தங்களால் செய்ய இயலாத முறையற்ற பாலியல் செய்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் உரையாடுவது - "சாட்" செய்வது - தான்" என்று கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த பிரபல விவாகரத்து இணைய தளத்தின் நிர்வாக இயக்குனர் மார் கீனன்!

இதற்கு நல்ல உதாரணம் கூறுவதென்றால் சமீபத்தில் பிரபல பாஸ்கட் பால் விளையாட்டு வீரர் டோனி பார்க்கர், தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததை அவரது ஃபேஸ்புக் தளம் மூலம் அறிந்து, அதனையே ஆதாரமாக காட்டி விவாகரத்து வாங்கியதைக் கூறலாம் என்கிறார் மார்க்.

அமெரிக்கா, பிரிட்டனில் காணப்படும் நிலை கூடிய விரைவில் நமது நாட்டிலும் ஏற்பட சாத்தியமுள்ளது.

எனவே ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் உலா வருபவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. அதுவும் ஒருவகை ஏமாற்றுத் தான் என்பதால் தங்களது திருமண பார்ட்டனருக்கு விசுவாசமாக இருப்பதே நல்லது.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

கல்கி வந்துவிட்டார்


பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின்,

இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல.
இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு,
“பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும்.
இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது.. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும்.

இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது..

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும்.

அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.

உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.தமிழ் மொழி பெயர்ப்பு: சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com

புதன், 3 நவம்பர், 2010

மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்!

ஷாக் ரிப்போர்ட்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு... ""சார்... என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சி யாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங் கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங் கன்னு தெரியல. இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி... அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்க ணும்'' -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.

அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்... அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.

சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க... வெளியில் வந்து காத்திருந்தோம்.


மணி... மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள்... திருமணமாகாத இளம்பெண்கள்... அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய... பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து "பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?' என்று நர்ஸிடம் பேச்சு கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.

அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க... அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள் ""சரிங்க... நீங்க வெளியில் போங்க சார்... பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்'' என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே... எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ... என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்... பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க... அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்... என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே... ஒரு சின்ன "கேப்' கிடைத்தது.

நர்ஸ் மருந்து எடுக்க... வேறு அறைக்குப் போக... பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்... பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து... கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே "க்ளிக் க்ளிக்' என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.

அடிவயிற்றில் ஜிலிருடன்... நாம் அந்த அறையிலிருந்து வெளியேற... நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வெளியேறிய நாம்... க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்... மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.

""எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க'' என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல... நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்... நைஸாக.

""ஹலோ வணக்கம்... டாக்டர் செல்லராணி மேடம்ங்களா?''

""ம்...?''

""ஆஹ்... நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்...''

""சரி...''

""அது... வந்து... இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா மேடம்.''

""அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?''

""கேமரா இருக்குங்களே மேடம்?''

""ப்ச்... கேமரா வைக்கலேங்குறேன்ல'' (டென்ஷனாகிறார்.)

""அதில்ல மேடம்... நானும் வந்து பார்த்தேன் மேடம்... கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா... நீங்க டாக்டர், பார்க்கலாம். ஆனா... வேற யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு''.

""இங்க பாருங்க... கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல...''.

""ஓ... அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா மேடம்?''.

""இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் "கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்' என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே? அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.

கிரேஷ் மருத்துவமனை ஊழியர் ஒருவரோ ""எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால... நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்... அந்தப் பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறதால... டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல... ஆனா... இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்ல... திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க'' என்று வேதனையுடன் சொன்னவர் ""ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ் பிட்டலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க... அந்த இளம்பெண் இறந்துட்டாங்க.... இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை ரசிக்க வைக்கிறாங்களே ச்சே'' என்கிறார் நொந்தபடி.

""கூச்சம், பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்... வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க... அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது... மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லாஹ் தான் நம்மையும் நம் குடும்பத்தார்களையும் பாதுகாக்க போதுமானவன். இதற்கு இன்னுமொரு காரணம் நம் சமூதாயத்தில் மருத்துவர்கள் மிகவும் குறைவாக இருப்பது தான், இதை கவனத்தில் கொண்டு நாம் நமது சமுதாயத்தில் அதிக மருத்துவர்களை உருவாக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ். எந்த மருத்துவரிடம் சென்றாலும் அந்த மருத்துவரைப்பற்றி நன்றாக தெரிந்த பின்னரே குடும்ப பெண்களை அழைத்து செல்லுங்கள். இந்த விஷயத்தில் பெண்களை தனியாக அனுப்ப வேண்டாம். கூடுமானவரை பெண்களை பெண் மருத்துவரிடமே அழைத்து செல்லுங்கள். அல்லாஹ்விடம் அதிகமதிகம் துவா செய்யுங்கள்.

வியாழன், 21 அக்டோபர், 2010

சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பாவத்திற்கு பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

பெற்றோரைப் பேணுவதால்?
'அவன் கேவலப்பட வேண்டும்' என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், 'தமது பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து (அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை இழந்தவன்' எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

கல்வி கற்க புறப்பட்டால்?
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)

இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு பொறுப்பேற்பார்கள்!
'எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரிஇ முஸ்லிம்)

சுவனத்தில் மாளிகை வேண்டுமா?
'எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நோய் விசாரிக்கச் சென்றால்?
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)

நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?
'எவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!
மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது 'இறையச்சமும் நற்குணமும் தான்' எனக் கூறினார்கள்' (திர்மிதீ)

உண்மை பேசுவது?
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)

கோபத்தை அடக்கினால்?
யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல் ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)

நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!
'நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்' (புகாரி)

சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால்?
'ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்(ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுகருக்கு முன் இரண்டு ரக்அத்கள்,லுகருக்கு பின் இரண்டு ரக்அத்கள், மஃரிபிற்கு பின் இரண்டு ரக்அத்கள், இஷாவிற்கு முன் இரண்டு ரக்அத்கள், இஷாவிற்கு பின் இரண்டு ரக்அத்கள்,)

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ஹஜ் செய்வது எப்படி

அல்லாஹ் சொல்கிறான்
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ;
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான் (அல்குர்ஆன் 2:195)
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;.

அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:196)

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:197)

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ''மஷ்அருள் ஹராம்'' என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். (அல்குர்ஆன் 2:198)

பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:199)

ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், ''எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு'' என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. (அல்குர்ஆன் 2:200)

இன்னும் அவர்களில் சிலர், ''ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (அல்குர்ஆன் 2:201)

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:202)

ஹஜ் செய்யும் முறைகள் மூன்று வகைகளாகும்
1-தமத்து
2-கிரான்
3-இஃப்ராத்

1-தமத்து: என்பது உம்ரா செய்துவிட்டு பின் துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ்ஜீக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது

2-கிரான் : என்பது உம்ரா செய்து அந்த இஹ்ராமிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது

3-இஃப்ராத் : என்பது ஹஜ்ஜீக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவது

தல்பியா (வாசகம்) கூறும் முறை:
அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக' இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.: ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)
(புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.)

ஹஜ் தமத்து செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்கை;க உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல் ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்
2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்

3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

4-தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்

5-இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ம் நாள் வரை காத்திருக்க வேண்டும் 8ஆம் நாள் அன்று ஹஜ்ஜீக்காக இஹ்ராம் அணியவேண்டும்.

ஹஜ் கிரான் செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்யவேண்டும்

2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்

3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

4-தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்

ஹஜ் இஃப்ராத் செய்யும் முறையும் நிய்யத்தும்
1- மீக்காத்தில் இஹ்ராம அணிந்து லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்

2- மக்காவாசிகளும் (மக்காவில்) அங்கு தங்கியிருப்போரும் மீக்காத்திற்கு
வரவேண்டியதில்லை தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம்

3- தவாஃபுல் குதூம் செய்யவேண்டும்

4- ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

5- தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்;

நாள் : துல் ஹஜ் பிறை 8 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்

மினாவுக்குச் செல்ல வேண்டும் அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்மு (சேர்த்து) செய்யாமல் அந்தந்த வேளைகளில் நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும்

நாள் : துல் ஹஜ் பிறை 9 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்

1- சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கி செல்ல வேண்டும் அங்கு ளுஹரையும் அஸரையும் சேர்த்து ளுஹர் நேரத்திலேயே முற்படுத்தி ஓரு பாங்கு இரண்டு இகாமத்களுடன் இரண்டு இரண்டு ரக்அத்களாக சுருக்கி தொழ வேண்டும், அரஃபாதினத்தில் இறைவனை தியானித்தல், குர்ஆனை ஓதுதல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்துவது சுன்னத்தாகும் துஆ செய்யும்போது கிப்லாவை முன்னோக்குவது நபி (ஸல்) அவர்களைப்போல கைகளை உயர்த்துவதும் சுன்னத்தாகும், அரஃபாதினத்தில் ஹாஜிகள் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல.

2- சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்கு செல்லவேண்டும், முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு பாங்கு இரு இகாமத்துடன் மக்ரிப் மூன்று ரக்அத்தும் இஷாவை இரண்டு ரக்அத்தாகவும் தொழவேண்டும்

3- மினாவில் பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கு ஏழு பொடிக்கற்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அவற்றை மினாவிலும் எடுத்துக்கொள்ளலாம்

4- முஸ்தலிஃபாவில் இரவு தங்கிவிட்டு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு பிறகு திக்ரு மற்றும் துஆக்களை அதிகப்படுத்த வேண்டும், சூரியன் உதிக்கும் முன்பு வரை அல் மஷ்அருல் ஹராமில் நின்று துஆசெய்வது விரும்பத்தக்கது, பலவீனமானவர்கள் நடு இரவுக்குப்பின்பு – சந்திரன் மறைந்ததன் பின் புறப்பட்டு மினாவந்துவிடலம்.

5- சூரியன் உதயமாகுமுன் மினாவைநோக்கிப் புரப்படவேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு
ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட இரண்டு செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

3-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

4-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது) குறிப்பு: நிங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும்.

- (இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக
(பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு
ஹஜ் கிரான்; செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

-(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய) விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது) குறிப்பு: நீங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும்.

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு
ஹஜ் தமத்து செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்)
முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

-(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் கல்லெறிவதற்கு முன்பே தலையை மழிந்து விட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) : புகார், முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) விரைவுபடுத்தினார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா) அடையும் வழியில் புறப்பட்டார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா)அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள் ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள் சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள் பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள் : ஜாபிர் (ரலி) : முஸ்லிம் - சுருக்கம்.

நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன் அங்கே அடிதடி இல்லை விரட்டுதல் இல்லை வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என்பது போன்ற கூச்சால் குலப்பபம் இல்லை : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி) : நஸயீ, திர்மதி, இப்னுமாஜா

நாள் : துல்ஹஜ் பிறை 11 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-11 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 12 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-12 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும், விரும்பினால் சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து மக்கா சென்று தவாஃபுல் விதாஃவை செய்து விட்டு ஊருக்கு பயணமாகலாம் அப்படி சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து செல்லமுடியவில்லையென்றால் அடுத்தநாள் அங்கு தங்கவேண்டும்

குறிப்பிடப்பட்ட (11,12,13)நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் : அல் குர்ஆன் 2:203.

நாள் : துல்ஹஜ் பிறை 13 அன்று
ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-13 ஆம் நாள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

2-மினாவிலிருந்து மக்கா செல்லுதல்

3-தவாஃபுல் விதா செய்தல் இது வாஜிபாகும் இதை விட்டால் பலி கொடுக்கவேண்டும் ஆனால் மாதவிடாய் மற்றும் பேற்றுத் தொடக்குள்ள பெண்களுக்கு இது வாஜிபல்ல பிறகு மக்காவிலிருந்து பயணமாகலாம்.

குறிப்பு: ஹஜ்ஜின் நாட்களில் குர்ஆன் ஓதுதல் துஆ செய்தல் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பமான சூல் நிலை ஆகவே வீணான பேச்சுக்கள் தர்க்கங்கள் இவைகளிலிருந்து விடுபட்டு நல்லறங்களில் ஈடுபட வேண்டும் (அல் குர்ஆன் : 2:197)

ஹஜ்ஜின் ருக்னுகள் நான்கு (முதல் நிலைக்கடமைகள்)
1-இஹ்ராம் அணிதல் ( நிய்யத் செய்தல் ) இது ஹஜ்ஜின் காரியங்களில் நுழைவதற்கான நிய்யத்து

2-அரஃபாவில் தங்குவது

3-தவாஃபுல் இஃபாளா

4-ஸஃபா மர்வாவில் (ஓடுதல்) ஸயி செய்வது
மேற்கூறப்பட்ட ருக்னுகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் அதைநிறைவேற்றும் வரை ஹஜ் நிறைவேறாது.

ஹஜ்ஜின் வாஜிபுகள் ஏழு ( இரண்டாம் நிலைக்கடமைகள்)
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிதல்
2-அரஃபாவில் சூரின் அஸ்தமிக்கும் வரை தங்குதல்
3-முஸ்தலிபாவில் இரவு தங்குதல்
4-முpனாவில் இரவு தங்குதல்
5-பிறை 11, 12, 13, ஆம் நாள்களில் கல்லெறிதல்
6-தவாஃபுல் விதா செய்தல்
7-தலை மடியை மழித்தல் அல்லது குறைத்தல்
மேற்கூறப்பட்ட வாஜிபுகளளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் ஒரு பிராணியைப் பலியிட்டு (ஹரமிற்குள்) ஏழைகளுக்கு வழங்கவேண்டும் அவன் அதை சாப்பிடக்கூடாது

ஹஜ்ஜின் சுன்னத்துகள்
1-இஹ்ராமின் போது குளித்தல்

2-ஆண்கள் வெண்ணிறத்தில் இஹ்ராம் அணிதல்

3-தல்பியாவை உரத்து சொல்லுதல்

4-அரஃபா தின இரவில் மினாவில் தங்குதல்

5-ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்

6-இள்திபா செய்தல் (ஆண்கள் (தவாஃப்செய்யும்போது) உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போடுவது)

7-உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் மூன்று சுற்றுக்களில் சற்று விரைந்து செல்லல்.

8-ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் செய்தல்

மேற்கூறப்பட்ட சுன்னத்துகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் எந்த குற்றமுமில்லை


இஹ்ராமில் தடுக்கப்பட்டவைகள் பதினொன்று
1-முடியை வெட்டுவது

2-நகங்களைக் களைதல்

3-ஆண்கள் தலையை மறைத்தல்

4-ஆண்கள் தையாலடையை அணிதல்

5-வாசளைத் திரவியங்களை உபயோகித்தல்

6-பெண்கள் கையுறைகள் அணிதல்

7-பெண்கள் முகமூடி அணிதல்
- இந்த ஏழு காரியங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவன் மறந்தோ அறியாமலோ செய்தால் எந்தகுற்றமுமில்லை அல்லது வேண்டமென்றே செய்தல் அதற்கு பரிகாரம் கொடுக்கவேண்டும்,

8-தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவுதல் அதை விரட்டுதல் இன்னம் கொலை செய்தல் இதை செய்தல் அதற்கு பரிராகரம் கொடுக்கவேண்டும்

9- மனைவியை இச்சையுடன் கட்டியணைத்தல் மருமஸ்த்தானம் அல்லாத பகுதிகளில்
தொடுவது, முத்தமிடுவதைப்போல இதனால் விந்து வெளிப்பட்டால் ஹஜ்ஜிற்கு
பாதகமில்லை ஆனால் ஓர் ஒட்டகத்தை அறுத்து பலியிட்டு பரிகாரம் செய்யவேண்டும்

10-தனக்காகவோ பிறருக்காகவோ திருமண ஒப்பந்தம் செய்தல் இதை செய்தால் பரிகரம்
ஒன்றும் இல்லை

11- உடலுரவு கொள்ளல் இது முதல் விடுபடுதலுக்கு முன்பு நிகழிந்தால் ஹஜ் நிறைவேறாது
மற்ற காரியங்களை முழுமைப்படுத்தி விட்டு அதற்குப் பகரமாக வரும் ஆண்டில் கட்டாயமாக ஹஜ்ஜை களா செய்ய வேண்டும் மேலும் ஓர் ஒட்டகத்தை பலியிடவேண்டும், உடலுரவு கொள்ளல் முதல் விடுபடுதலுக்குப் பின்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறிவிடும் ஆனால் ஓர் ஆட்டைப் பலியிடவேண்டும்

இஹ்ராம் கட்டவேண்டிய காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும்இ அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.

'ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.' (அல்குர்ஆன் 2:197)

எனவே ஷவ்வால் மாதத்திலோஇ துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான் துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, அபுதாவுத்)

கஃபாவின் ஒரு மூலையில் 'ஹஜ்ருல் அஸ்வத்' எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது
ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாபிவு. நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத், இப்னுமாஜா

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.

'நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டுருக்க மாட்டேன்' என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது கூறினார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும்
கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்.

ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாப் செய்வது அவசியம்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். 'ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீஇ அபுதாவுத்இ நஸயீ



ருக்னுல் யமானியை முத்தமிடுதல்
கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு மூன்றாவது மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள்இ நான்கு மூலைகளில் 'யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா

தவாஃப் செய்யும்போது 'உலூ' அவசியம்
தொழுவதற்கு எப்படி உலூ அவசியமோ அதுபோல் தவாஃப் செய்வதற்கும் உலூ அவசியமாகும். தூய்மையற்ற நிலையில் தவாஃப் செய்யக்கூடாது.

'நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை உலூ செய்துவிட்டு கஃபாவை தவாஃப் செய்ததுதான்'
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃப் தவிர மற்ற ஹஜ் கிரியைகள் அனைத்தையும் செய்யுமாறு நபி (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்) மாதவிலக்கு நிற்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதிலிருந்து தூய்மையின் அவசியத்தை உணரலாம்.

தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை
தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.
ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸாயீப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, ஹாகீம்

'கஃபாவை தவாஃப் செய்வது ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ

இறைவனை நினைவு கூறும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். 'அல்லாஹ் அக்பர்' போன்ற வார்த்தைகளைக் கூறிக்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்
தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும். நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மூ ஸலமா (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்பட விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில்இ எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்தமாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்துவிட்டு 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தை அடைந்தபோது 'மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற வசனத்தை ஓதினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அல்ஹம்து சூராவையும்இ குல்யாஅய்யுஹல் காபிரூன் சூராவையும்இ குல்ஹுவல்லாஹ் அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்டு (முத்தமிட்டார்கள்) பிறகு ஸபாவுக்குச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஒவ்வொரு தவாஃப்க்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஸுஹ்ரீ நூல் : புகாரி

ஸயி செய்யும் முறைஸஃபா மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது
ஸஃபா மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை நிறைவேற்றிஇ இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு 'ஸஃபா'வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்

ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் 'ஸஃபா'வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் 'நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்' என்ற வசனத்தை ஓதினார்கள். 'அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக' என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி 'லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதிர்இ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தாஇ அன்ஜஸ வஃதாஇ வநஸா அப்தாஇ லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா' என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள்.
பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) 'பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (தற்போது பச்சை(டியூப்) விளக்கு போடப்பட்டுள்ளது அந்த பச்சைவிளக்கு இடம் வந்ததும் ஓடவேண்டும் பச்சைவிளக்கு முடிந்ததும் நடந்துசெல்லவேண்டும்) (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.

ஸபாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபாஇ மர்வாவுக்கிடையே ஓடுவது 'ஸஃயு' என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும்இ நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும்இ நான்கு தடவை நடந்தும் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ

ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும். ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்றுஎன்பதாகும்.

'நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.' அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

செவ்வாய், 12 அக்டோபர், 2010

இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதி

இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதியை கட்ட வேண்டும் - தில்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் சூளுரை!
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதி கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று தில்லி ஜாமா மஸ்ஜித் தலைமை இமாம் மெüலானா சையத் அகமது புகாரி திட்டவட்டமாக அறிவித்தார்.

தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மத அறிஞர்கள் தில்லியில் வியாழக்கிழமை கூடி அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தார்கள்.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

"அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர்பாக தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

மசூதிக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபர் மசூதி பிரச்னை தொடங்கியது முதல் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத்துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவைதான்.

முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக்கொண்டு, வகுப்புவாத சக்திகளுக்குத்தான் காங்கிரஸ் துணைபோய்க்கொண்டிருக்கிறது.இன்றைய கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் தனிச்சட்ட வாரிய உறுப்பினர்கள் சிலர் தாங்களாகவே சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு புறக்கடை வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரியான சமரசத் தீர்வை அவர்கள் காணப் போகிறார்கள்? இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதியை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது.இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைக்கு தில்லியில் கூடிய நாங்கள் எங்களுடைய அமைப்பு வாயிலாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்' என்றார் சையத் அகமது புகாரி.

நன்றி : தினமணி.

தகவல் : முகவை அப்பாஸ்

செவ்வாய், 5 அக்டோபர், 2010

நிலையை உயர்த்து..நினைப்பை உயர்த்தாதே..!

1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.

2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (LOOSE TALKS).

3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY), விட்டுக் கொடுங்கள் (COMPROMISE).

4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (TOLERANCE).

5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் (NARROW MINDEDNESS).

6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (CARRYING TALES).

7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (SUPERIORITY COMPLEX).

8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (OVER EXPECTATION).

9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBILITY).

12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (MIS-UNDERSTANDING).

14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).

15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

19) நிலையை உயர்த்து; நினைப்பை உயர்த்தாதே.

20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ
”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02
என்னுடைய ஈமைலுக்கு வந்தது

சனி, 2 அக்டோபர், 2010

புதிய வைரஸ் எச்சரிக்கை

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. “Here You Have” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது' என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல. .scr. என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.
இது CSRSS.EXE என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு) மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது. தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.
இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இதிலிருந்து எப்படி தப்பிப்பது?
நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும். இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have” அல்லது “Just For You” என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும். இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது.
இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.
நன்றி : தினமலர்

திங்கள், 27 செப்டம்பர், 2010

விசுவாசியான சிறுவனும் சூனியக்காரனும்

நவநாகரீக உலகில், உலகில் தனக்கு வாய்த்த பொன்னான நேரங்களை வீணாகக் கழிப்பதற்குறிய வழிகளே மனிதனுக்கு ஏராளம். சிலர் விளையாட்டில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதின் மூலமும், இன்னும் சிலர் ஆபாசமான, அருவருக்கத்தக்க காட்சிகளை வெண்திரையில் பார்ப்பதின் மூலமும் மற்றும் சிலரோ நாவல்கள் என்ற பெயரால் கற்பனைக் கெட்டாதவைகளை யெல்லாம் படிப்பதன் மூலமும் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்றார்கள். இதனால் இவர்கள் அடைந்த பயன் என்ன? தரங்கெட்ட மனிதர்களாகவும் வக்கிரபுத்தி படைத்த, கொடூர இதயம் கொண்ட கொடுமைக்காரர்களாகவும், ஒழுக்கங்கெட்டவர்களாகவும் உருவானதைத் தவிர வெறொன்றுமில்லை.

நல்லவைகளைப் புகழ்ந்து, அல்லவைகளை புறம் தள்ளி வாழ வேண்டிய - வளர வேண்டிய இளைய சமுதாயம் அழிவு நோக்கி நடை பயின்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

வண்ணத்திரையில் காணும் காட்சி எந்த அளவுக்கு இவர்களைப் பாதித்துள்ளது என்பதற்கு நாவரசு கொலை ஓர் எடுத்துக் காட்டாகும். முஸ்தபா முஸ்தபா டோன்வொரி முஸ்தபா என்ற பாடலை பாடி வருகின்ற கதாநாயகர் 'ராக்கிங்' செய்து காண்பிக்கிறார். இதைப் பார்க்கின்ற இளையவர்கள் மன நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்..!?

மனிதர்களில் பெரும்பாலோர் குறிப்பாக இளையவர்கள் கற்பனைக் கதைகளை அதிகமதிகம் விரும்பிப் படிப்பதைப் பார்க்கிறோம். இதனால் இவர்களது உள்ளத்தில் ஒரு வகையான மாற்றமும் ஏற்படுகிறது. இத்தகைய வெள்ளை உள்ளங்களைக் கருத்தில் கொண்டு கற்பனைகளற்ற நூற்றுக்கு நூறு சதம் உண்மையான கதைகளை இத்தொடரில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பண்பற்ற உள்ளங்கள் பண்படவும், வாழ வேண்டிய வயதில் வரையறையோடு வாழவும் இது அவசியம் என்று கருதுகிறேன்.

இதைப் படிக்கிறன்றவர்கள் ஒன்றைத் தெளிவாகத் தங்களது இதயங்களில் ஆழமாகப் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை வரலாற்று நாயகரும் மனிதர்களில் சிறந்தவரும் அனைத்து மக்களின் வழிகாட்டியுமான முஹம்மது (ஸல்) அவர்களே, அவர்கள் சொன்ன, அவர்கள் முன்னிலையில் நடந்த வரலாறுகள். அனைத்தும் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தவையே.

'அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை' (அல்குர்ஆன் 53:3,4)

1.விசுவாசியான சிறுவனும், சூனியக்காரனும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சூனியக்காரனும் உண்டு. அவனு(சூனிய)க்கு வயதான போது, 'நான் வயதானவனாகி விட்டேன். சூனியத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு சிறுவனை என்னிடம் அனுப்பி வை' என்று அரசனிடம் கூறினான். அதைக் கற்றுக் கொடுப்பதற்காக சிறுவனை அவனிடம் அரசன் அனுப்பி வைத்தான். சிறுவன் நடந்து செல்லும் வழியில் ஒரு நல்லறிஞர் இருந்தார். உடனே அவரிடம் உட்கார்ந்து அவர் பேச்சைக் கேட்டான். அது அவனுக்கு மகிழ்வைக் கொடுத்தது. (ஆதலால்) அவன் சூனியக்காரனிடம் வரும் போதெல்லாம் நல்லறிஞரிடம் வந்து உட்கார்ந்து செல்பவனாக இருந்தான். (ஒரு நாள் தாமதமாக) சூனியக்காரனிடம் அவன் வந்ததால் இவனை அவன் அடித்து விட்டான். இதை நல்லறிஞரிடம் அவன் முறையிட்டான். அதற்கு 'சூனியக்காரனை (உன்னை அடித்து விடுவான் என்று) நீ பயந்தால் என்னை எனது குடும்பத்தினர் (தாமதப்படுத்தி) விட்டனர் என்று சொல். உனது குடும்பத்தினரை நீ பயந்தால் என்னை சூனியக்காரன் தடுத்து (தாமதப்படுத்தி) விட்டான் என்று சொல்' என்று அவர் கூறினார்.

இவற்றுக்கு மத்தியில் ஒருநாள் அவன் சென்று கொண்டிருந்தான். அப்போது மக்களை (நகரவிடாமல்) தடுத்த மிகப் பெரிய விலங்கைப் பார்த்தான். 'சூனியக்காரன் சிறந்தவனா? அல்லது நல்லறிஞர் சிறந்தவரா? என்று இன்றைக்கு நான் அறிந்து கொள்ளப் போகிறேன்' என தனக்குள் அவன் கூறிக் கொண்டான். உடனே கல்லொன்றைக் கையிலெடுத்து, 'அல்லாஹ்வே! சூனியக்காரனின் செயலை விட நல்லறிஞரின் செயலே உனக்கு விருப்பமானதாக இருக்குமானால், மக்கள் போவதற்காக இந்த விலங்கை கொன்று விடுவாயாக!' என்ற கூறினான். கல்லை எறிந்து அதைக் கொன்றும் விட்டான். மக்களும் செல்ல ஆரம்பித்து விட்டனர். நடந்ததை நல்லறிஞரிடம் கூறினான். அதற்கு அவர் 'மகனே! என்னை விட நீ சிறந்தவனாகி விட்டாய் நான் எதிர்பார்த்த பக்குவம் உனக்கு ஏற்பட்டுவிட்டது. நீ நிச்சயமாக சோதிக்கப்படுவாய். நீ சோதனைக் குள்ளாக்கப்பட்டால் என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே!' என்று கூறினார்.

சிறுவன் பார்வை தெரியாதவர்களுக்கும் வெண்குஷ்டக் காரர்களுக்கும் நிவாரணம் அளிப்பவனாகவும் மற்றய வியாதிகளிலிருந்தும் மக்களுக்கு மருத்துவம் செய்பவனாகவும் இருந்து வந்தான். பார்வை இழந்த அமைச்சர் (இதை) செவியேற்றார். உடனே அதிகமான நன்கொடைகளுடன் அவனிடம் வந்தார். என்னை நீ குணப்படுத்தினால் நான் இங்கு சேர்த்து வைத்துள்ள எல்லாம் உனக்கே என்று கூறினார். அவனோ, நான் எவரையும் குணப்படுத்த வில்லை. அல்லாஹ் தஆலா தான் குணப்படுத்துகிறான். ஆனால் நீ அல்லாஹ்வை (நம்பி) ஏற்றுக் கொண்டால், அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறேன். அவன் உன்னைக் குணப்படுத்துவான் என்று கூறினான். உடனே அல்லாஹ்வை அவர் நம்பினார். அல்லாஹ் தஆலா அவனைக் குணப்படுத்தினான். பிறகு அரசனிடம் வந்து முன்பு போல் அவனருகில் உட்கார்ந்தார். உடனே அரசன், 'உனக்குப் பார்வையை திருப்பித் தந்தது யார்?' என்று கேட்டான். என்னுடைய ரப்பு என்று கூறினான். என்னைத் தவிர ரப்பு உனக்கு உண்டோ? ஆம், எனக்கும் உனக்கும் ரப்பு அல்லாஹ்தான் என்றான். உடனே சிறுவனைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவரைத் துன்புறுத்தினான. உடனே சிறுவன் (அவைக்கு) கொண்டு வரப்பட்டான். 'சிறுவனே! உன்னுடைய சூனியத்தால் பார்வை தெரியாதோரையும் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துகிறாயாமே? இன்னும் ஏதேதோ செய்கிறாயாமே என்று அசரன் அவனிடம் கேட்டான். அதற்கு, 'நான் யாரையும் குணப்படுத்தவில்லை. அல்லாஹ்தான் குணப்படுத்துகிறான் என்றான்.

உடனே நல்லறிஞரைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவனையும் துன்புறுத்தினான். 'உடனே நல்லறிஞரும் (அரசவைக்குக்) கொண்டுவரப் பட்டார். நீ உனது மார்க்கத்தை விட்டுத் திரும்பி விடு என்று அரசன் கூறினான். (அதற்கு) முடியாது என்றார். உடனே ரம்பத்தால் அவரை இருகூறாக அறுக்கும்படி உத்தரவிட்டான். பிறகு அமைச்சரை (அரசவைக்கு) இழுத்து வரச் செய்து நீயும் உனது மார்க்கத்தை விட்டுத் திரும்பி விடு என்றான். அதற்கு முடியாது என்று மறுத்து விட்டார். உடனே ரம்பத்தால் அவரை இரு கூறாக அறுக்கும்படி உத்தரவிட்டான்.

பிறகு சிறுவனை இழுத்து வரச் செய்து நீயும் உனது மார்க்கத்தை விட்டுவிடு எனக் கூறினான். அதற்கு அவன் மறுத்து விட்டான். உடனே தனது சகாக்களில் சிலரிடம் அவனை ஒப்படைத்தான். அதோ மலைக்கு இவனைக் கொண்டு போய் மலை உச்சியை அடைந்ததும் அவன் தனது மார்க்கத்தை விட்டுத் திரும்பி விட்டால் விட்டு விடுங்கள். இல்லையெனில் அவனை எறிந்து விடுங்கள் என்று (அரசன்) கூறினான். (அவ்வாறே) அவனைக் கொண்டு போனார்கள்.

உடனே அவன், 'அல்லாஹ்வே! இவர்கள் விஷயத்தில் நீ என்ன நாடுகிறாயோ அதற்கு நீயே எனக்குப் போதும்' என்றான். உடனே மலை அவர்களை உலுக்கியது. அவர்கள் கீழே விழுந்து (இறந்து) விட்டார்கள். அவன் அரசனிடம் நடந்து வந்தான். அரசனோ உன்னை இழுத்துச் சென்றவர்களெல்லாம் என்ன ஆனார்கள்? என்றான். அதற்கு அவன், 'அல்லாஹ் அவர்களைக் கவனித்துக் கொண்டான்' என்று கூறினான். இன்னும் சில சகாக்களிடம் இவனை ஒப்படைத்து இவனை கப்பலில் கொண்டு சென்று நடுக்கடலுக்குப் போங்கள். அவன் தனது மார்க்கத்தை விட்டுத் திரும்பி விட்டால் விட்டு விடுங்கள். இல்லையெனில் அதி(கடலி)ல் போட்டு விடுங்கள் என்றான் அரசன். (அவ்வாறே) அவனைக் கொண்டு போனார்கள். அவன், 'அல்லாஹ்வே! இவர்கள் விஷயத்தில் நீ என்ன நாடுகிறாயோ அதற்கு நீயே எனக்குப் போதும்' என்றான். உடனே கப்பல் அவர்களுடன் புரண்டதும் அவர்கள் மூழ்கி (செத்து) விட்டார்கள். பிறகு அவன் அரசனிடம் நடந்து வந்தான். அரசனோ உன்னை இழுத்துச் சென்றவர்களெல்லாம் என்ன ஆனார்கள் என்று கேட்டான். அதற்கு அவன், அல்லாஹ் அவர்களைக் கவனித்துக் கொண்டான்' என்று கூறினான்.

நான் சொல்வது போன்று நீ நடக்காதது வரை என்னை நீ கொல்ல முடியாது என்று அரசனிடம் கூறினான். அது என்ன வழி? என்று கேட்டான். அதற்கு நீ மக்கள் அனைவரையும் பரந்த வெளியில் ஒன்று கூட்ட வேண்டும். என்னைப் பேரீத்தம் குச்சியில் சிலுவையில் அறைய வேண்டும். பிறகு எனது அம்புக் கூண்டிலிருந்து அம்பை எடுக்க வேண்டும். வில்லின் நடுப்பகுதியில் வைக்க வேண்டும். பின்பு, 'சிறுவனின் ரப்பாகிய அல்லாஹ்வின் பெயரால் எனக்கூறி என்னை நோக்கி எறிய வேண்டும். அவ்வாறு செய்தால் என்னைக் கொன்று விடுவாய் என்று கூறினான். மக்களை பரந்த வெளியில் ஒன்று கூட்டினான். அவனைப் பேரீத்தங்குச்சியில் சிலுவை அறைந்தான். பிறகு அம்பை வில்லின் நடுப்பகுதியில் வைத்தான். பின்பு சிறுவனுடைய ரப்பின் பெயரால் எய்கிறேன் என்று எய்தான். அம்பு அவனது (நெற்றிப்) பொட்டில் பட்டது. உடனே அவன் தனது கையை பொட்டில் வைத்தவாறே இறந்து விட்டான்.

(இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மக்கள் 'சிறுவனின் ரப்பை நாங்கள் விசுவாசம் கொண்டு விட்டோம்' என்று கூறினார்கள். உடனே நீ எதைப் பற்றி அஞ்சுபவனாக இருந்தாயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக அது ஏற்பட்டு விட்டது. மக்கள் ஈமான் கொண்டு விட்டார்கள்' என்று அரசனிடம் சொல்லப்பட்டது. உடனே அவன் தெருக்களின் கோடியில் நெருப்புக் குண்டத்தை ஏற்படுத்தும்படி உத்தரவிட்டான். அது ஏற்படுத்தப்பட்டது. நெருப்பு மூட்டப்பட்டது. யாரெல்லாம் தனது மார்க்கத்தை விட்டுத் திரும்பவில்லையோ அவர்களை அதில் போட்டு விடுங்கள் என்றான். அவ்வாறே செய்(ஒவ்வொரு மனிதராக அதில் போட்டு எரித்)தார்கள். முடிவில் பெண்ணொருத்தி தனது சிறு பையனுடன் வந்தாள். நெருப்பில் விழுவதற்குத் தயங்கினாள். உடனே, 'என் தாயே! பொறுமையாக இருங்கள். நீங்கள் சத்தியத்திலேயே இருக்கிறீர்கள்' என்று சிறுவன் அவளிடம் கூறினான்.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம்.

உயிரோட்டமுள்ள இக்கதையை ஆழமாக மீண்டும் ஒருமுறை நாம் படித்துப் பார்த்தால் சில உண்மைகளை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

1. எல்லாக் குழந்தைகளும் இயற்கையான இஸ்லாமிய மார்க்கத்தில் பிறக்கின்றன. உண்மையுடனும், நன்மையுடனுமே என்றென்றும் அண்டியிருக்கவும் தீமையை விட்டு அகன்றிருக்கவும் அது விரும்புகின்றது. இப்படித்தான் அந்தச் சிறுவனும் நல்லறிஞரிடம் உண்மையைக் கேட்ட மாத்திரத்தில் பொய்மையை - நிராகரிக்கின்ற சூனியக்காரனை உதறித் தள்ளினான்.

2. உண்மை யாரிடத்தில் இருக்கிறது என்று தெரிந்த பின்னரும் அதற்கான ஆதாரத்தை நிலை நாட்டுவதற்காக அச்சிறுவன் முயற்சிக்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் ஒருவன் தான் என்று தான் உளப்பூர்வமாக நம்பிய பின்னரும் தன்னுடைய கூட்டத்தினருக்கும் அதற்கான ஆதாரத்தை ஆக்கப்பூர்வமாக அறிவுப்பூர்வமான வழிகளில் உணர்த்த முயற்சிக்கிறார்கள்.

3. உண்மையை வெளிஉலகுக்கு வெளிப்படுத்தவும், சரியான வழிமுறையை விவரித்திடவும், உறுதியான வழியில் சந்தேகத்தை நீக்கிடவும் அல்லாஹ் தஆலாவிடமே பிரார்த்திக்க வேண்டும். தனக்கு ஏற்பட்டிருக்கிற கஷ்டங்களை நீக்குவதற்கான வழியை ஒரு முஃமின் எப்போதும் அல்லாஹ்விடமே கேட்டுப் பெற வேண்டும்.

4. மக்கள் செல்கின்ற பாதையில் அவர்களுக்கு இடையூறாக உள்ளவற்றை நீக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவத்தையும் நாம் பெற்றாக வேண்டும். இதற்கு நிச்சயமாக அல்லாஹ்விடம் கூலியுள்ளது. காரணம் இது ஒரு தர்மம் என்றே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

5. ஒரு உண்மையான முஃமின் தனக்கு ஏற்படுகின்ற அனைத்து அற்புதங்களுக்கும் அல்லாஹ் தான் காரணம் என்று கூற வேண்டும் அதைத்தான் அச்சிறுவன் மேற்கொண்டான்.

6. திறமை யாரிடத்திலிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனப்பான்மை வேண்டும். நான் பெரியவன், என்னை விட உனக்கு என்ன திறமை இருக்கிறது என்று இறுமாப்புக் கொள்ளக் கூடாது. அல்லாஹுத்தஆலா திறமையை வெளிப்படுத்தும் போது பெரியவர், சிறியவர் பார்ப்பதில்லை. அப்படித் தான் நல்லறிஞர் நடந்து கொண்டதைப் பார்க்கிறோம்.

சிறுவனே! இன்றைய தினம் நீ என்னை விடச் சிறந்தவனாவாய்! என்று அந்த அறிஞர் கூறியுள்ளார்.

7. நன்மையை ஏவுகின்றவனும், தீமையைத் தடுக்கின்றவனும் நிச்சயமாகச் சோதிக்கப்படுவான். நபிமார்களே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அந்நேரத்தில் பொறுமை அவசியமாகும். பொறுமையாளர்களுக்கு இறைவனின் பரிசு கிடைக்கும்.

'மகனே! தொழுகையை கடைபிடி. நன்மையை ஏவு. தீமையை தடு, உனக்கு ஏற்படும் சோதனையைத் தாங்கிக் கொள். இது உறுதிவாய்ந்த காரியங்களைச் சார்ந்ததாகும்'. (31:17)

8. மார்க்க அடிப்படையில் ஒருவருடைய முடிவு - கணிப்பு தவறாக இருக்குமானால், அவர் தவறிலேயே விடப்படாமல் உண்மை அவருக்கு உணர்த்தப்பட்டாக வேண்டும். குறிப்பாக ஓரிறைக் கொள்கை விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அவ்வாறுதான் சிறுவன் அமைச்சருக்கு உண்மையை எடுத்துக் கூறியுள்ளான்.

'நான் யாரையும் குணப்படுத்தவில்லை, அல்லாஹ்தான் குணப்படுத்தினான்' என்று இதைத்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.

'நான் நோயுற்றால் அல்லாஹ்தான் என்னைக் குணப்படுத்துகிறான்' (அல்குர்ஆன் 26:80)

9. அல்லாஹ்வுக்கு நம்பிக்கையில் உறுதியானவர்களும் இருக்கின்றனர். எப்படி துன்பப்படுத்தப் பட்டாலும் அவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இறை நிராகரிப்புக்குரிய எந்த ஒரு வார்த்தையையும் உச்சரிக்கப் பொறுக்காதவர்கள். தீயிலிட்டு எரிக்கப்பட்டாலும் கீறிக்கிழிக்கப்பட்டாலும் நீரில் மூழ்கடிக்கப்பட்டாலும் நம்பிக்கைத் தளராதவர்கள்.

'எத்தனையோ நபிமார்கள் அவர்களுடன் இறையடியார்கள் பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர். எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவில்லை, (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கிறான்'. (அல்குர்ஆன் 3:146)

நிர்பந்தமான நேரத்தில் இறை நிராகரிப்புக்குரிய வார்த்தையை உச்சரிப்பதால் எந்தத் தவறுமில்லை. அதை அல்லாஹ்வும் பாராட்டுகின்றான்.

'எவர் நம்பிக்கை கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்ட அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப் படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) (நிர்பந்தமின்றி) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இன்னும் அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு'. (அல்குர்ஆன் 16:106)

என்றாலும் அந்த நிர்ப்பந்தமான நேரத்தில் அல்லாஹ்வைத் தவிர்த்து எந்த வார்த்தையையும் மொழிய மாட்டோம் என்று ஆழமான நம்பிக்கையில் இருந்தார்களே இவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

10. உண்மை என்றைக்கும் வெல்லக் கூடியதே! அவ்வுண்மையை உயிர்வாழச் செய்வது உண்மையாளனாகிய அல்லாஹ்வின் நீங்காக் கடமையாகும். அதனால்தான் அசத்தியவானாகிய அரசன் சிறுவனுடைய கொள்கையைச் சாகடிக்க எந்த வழியிலும் முடியவில்லை. ஆனால் மக்கள் அனைவரும் ஈமான் என்ற பேரொளியை ஏற்றுக் கொள்கின்றனர். அரசனோ அச்சுறுகிறான். உண்மை உதித்தது. பொய்மை மறைந்தது.

'அல்லாஹ் நிராகரிப்போரின் வாக்கை - வார்த்தையை கீழாக்கினான், அல்லாஹ்வின் வார்த்தையையோ அது மேலானது - உயர்ந்தது, அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்' (அல்குர்ஆன் 9:40)

11. அல்லாஹ்வை நம்பிய சிறுவன் மற்றைய மக்களும் அல்லாஹ்வை நம்ப வேண்டும் என்பதற்காகவே தன்னையே அர்ப்பணிக்கிறான். இதுவே உண்மையான உளப்பூர்வமான நம்பிக்கையுடையவரின் செயலாகும். தாம் பலியாக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஏனைய மக்கள் இந்தச் சத்தியத்தை உணர வேண்டும் என்ற தியாக உள்ளம் கொண்டவர்கள் தான் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லத் தகுதியானவர்கள்.

'அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள். தம் ரப்பிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப் படுகிறார்கள்'. (அல்குர்ஆன் 3.169)

12. அல்லாஹுத் தஆலா தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அவனை ஏற்றுக் கொண்டவர்களையும் சில அற்புதங்களினால் அவனது மார்க்கத்தையும் ஸ்திரப்படுத்துகிறான். மிகச் சிறிய குழந்தையைப் பேச வைக்கிறான்.

'என் தாயே! நீ பொறுமையாய் இரு! நீ சத்திய வழியிலேயே இருக்கிறாய்!' என்று அந்தக் குழந்தை பேசியது.

உடனே அந்தத் தாய் அவ்வுண்மையை எற்று தன்னைத் தன் மகனுடன் தீயிக்கு இறையாக்குகின்றாள். இதுவல்லவோ வீரதீரச் செயல். இதுவல்லவோ தியாகம்.

13. உண்மை விசுவாசிகள் எப்படி இறந்தாலும் அவர்கள் போய்ச் சேருமிடம் சுவர்க்கம். நிராகரிப்பவர்கள் எப்படிச் செத்தாலும் அவர்கள் போய்ச் சேருமிடம் நரகமே!
நன்றி : இஸ்லாமிய தமிழ் தஃவா

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஆறு நோன்புகள்

ரமளான் மாதத்தைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் பெருநாளைக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்கள் அல்லது ஷவ்வால் மாதம் முடியும் முன்னர் இந்த நோன்பு நோற்பது நபி (ஸல்)அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும் இன்னும் வலியுறுத்தப்பட்டதுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "யார் ஒருவர் ரமளான் மாதத்திள் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கிறாரோ (அவர்) வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்". அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி): முஸ்லிம்

ரமளானில் நாம் பெற்ற இறையச்சம் தொடரும் விதமாக இந்த ஷவ்வால் நோன்பு அமைந்திருக்கிறது.

இவற்றை நாம் நோற்பதின் மூலம் தொடர்ந்து மற்ற சுன்னத்தான நோன்புகளான திங்கள், வெள்ளி, மாதம் மூன்று நோன்புகள் மற்றும் இதர நோன்புகள் நோற்கும் ஆர்வமும் நமக்கு ஏற்படலாம்.

ரமளான் மாதத்தில் நோன்புவைத்ததின் மூலம் நாம் பெற்ற இறையச்சம் மிகுந்த விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

வியாழன், 9 செப்டம்பர், 2010

நம் பெருநாள்

இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி (ஸல்)அவர்கள் காட்டிச் சென்றபெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.

நபி
(ஸல்)அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோதுமதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதில் வருடாந்திரவிளையாட்டு. இதனை செவியுற்ற நபி (ஸல்)நீங்கள் ஆக்கிக்கொண்டஇந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்குதேர்வு செய்துள்ளான், அதில் ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத்திருநாள் என்றார்கள். இந்த நபி மொழியை மாலிக்(ரலி) அறிவிக்கிரார்ள்- அபூதாவூத், பைஹகீ, நஸயீ.

பசி
தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாலைக்கு முன் தான தர்மத்தைக்கொண்டு ஆரம்பிக்க வேண்டும். பெருநாள் அன்று எவரும் பசி பட்டினியுடன்இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபிஸல்)அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

நபி (ஸல்)அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பிதெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி


பெருநாள் தொழுகையின் நேரம்
ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்துவெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப்பொழிகிறான். அனஸ்பின் மாலிக்(ரலி) இப்னு அஸாகிர்

இரண்டு
ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள்தொழுகையை நபி (ஸல்)அவர்கள் தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பதுஏறத்தாள மூன்று மீட்டர்களாகும். ஜுன்துப்(ரலி) அஹ்மது இப்னுஹஸன்

நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.
நபி
(ஸல்)அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ணமாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.திர்மிதீ

சில
பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்)அவர்கள் புறப்பட மாட்டார்கள். அனஸ்(ரலி) புகாரி மற்றோர்அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்றுகூறப்பட்டுள்ளது.

தக்பீர்
ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும்அழகு படுத்துங்கள். அனஸ்பின் மாலிக்(ரலி) நயீம்

ஈதுல்
ஃபித்ர் பெருநாள் தொழுகைக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது தக்பீர்சொன்னவர்களாகப் புறப்படுவார்கள். தொழும் இடம் வரும் வரை தக்பீர்சொல்வார்கள். இப்னு உமர்(ரலி) (ஹாகிம் சுனன்பைஹகீ, இப்னு அஸாகீர்).

பெருநாள்
வந்துவிட்டால் நபி (ஸல்)அவர்கள் தொழுகைக்குப் போவதற்கும்வருவதற்கும் பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி

நபி
(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப்புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத்தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபிதொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி

திடலில் பெருநாள் தொழுகை
பெரும்பாலும் நபி (ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொதுமைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையைபள்ளியில் நடத்தினார்கள். அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

நபி
அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில்தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில்தொழுகையை துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களைமுன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியேஅமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்தவேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்பவேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிடவேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூஸயீத்(ரலி), புகாரி

பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை
ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப்பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி

நபி
(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத்துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி அவர்கள் (உரைநிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடையகை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

பிலால்
(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில்போடலானார்கள். நான், நபி (ஸல்)அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாகஇருந்தனர். புகாரி

நபி
அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும்உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), புகாரி


பெருநாள்
தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை

நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள்தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி

நபி
அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்குமுன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்குவந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம்குறித்து அவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும்வளையல்களையும் போடலானார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

தொழுகையில் தக்பீர்கள்
முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்
நபி
(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும்இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ்இப்னு அம்ரு(ரலி) அஹ்மத், இப்னுமாஜா

நோன்புப்
பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவதுரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத்குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என நபி அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னுஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். புகாரி, திர்மிதீ

பெருநாள் தொழுகையில் பெண்கள்
நபி அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்குமுன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்துஅவர்களுக்கு நபி விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும்வளையல்களையும் போடலானார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி

வீட்டில்
தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இருபெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில்கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்கபணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில்எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்குநபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கிஉடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். உம்மு அதிய்யா(ரலி) புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா

ஓதிய வசனங்கள்
நபி அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும்ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்கஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களைஇரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னுபஷீர், - முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

பிரார்த்தனை
பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்குவெளியே அனுப்புமாறு நபி அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்குபெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின்ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) புகாரி, முஸ்லிம்

பெருநாளில்
நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமென்றும்கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ளபெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும்கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன்அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும்அவர்கள் எதிர்பார்ப்பார்கள். உம்மு அத்திய்யா (ரலி) -புகாரீ, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் செய்வானாக! ஆமீன்.