துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 25 மே, 2011

சுயபரிசோதனை

உங்களது நிலையை என்னவென்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் :


கணவனைத் திருப்தி செய்வதில் நான் என்னுடைய மிகச் சிறந்த பங்களிப்பை வழங்குகின்றேன்.


என்னுடைய குடும்பத்திற்கு இஸ்லாமிய வழிமுறைகளைக் கொண்டு வழி நடத்துகின்றேன்.


குர்ஆனையும், நபிமொழிகள் (ஹதீஸ்களையும்) நான் விரும்பி வாசிக்கின்றேன்.


என்னுடைய குழந்தைகளுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் போதிக்கின்றேன்.


என்னுடைய கணவனுக்கு என்னுடைய அழகைப் பராமரித்து வருகின்றேன்.


இஸ்லாத்தைப் பற்றிய கேள்விகளுக்குரிய விடைகளை வழங்குவதில் என்னுடைய குழந்தைகளுக்கு உதவுகின்றேன்


இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள இடைவிடாது முயற்சித்துக் கொண்டிருக்கின்ற அதே வேளையில், நான் கற்றவற்றை என்னுடைய வாழ்க்கையில் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றேன்.


என்னுடைய தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுகின்றேன்.
நான் என்னுடைய கணவனை அதிகம் நேசிப்பதாகக் கூறுகின்றேன்


தேவைப்படும்பொழுது என்னுடைய கணவருக்கு அறிவுரைகளை வழங்குகின்றேன்


என்னுடைய கணவனுடைய குறிக்கோள்களை அடைவதற்கு உற்சாகத்தையும், ஒத்துழைப்பையும் வழங்குகின்றேன்.


என் கணவரது முயற்சிகளை நான் மதிக்கின்றேன், பாரட்டுகின்றேன் என்பதை அவருக்கு நான் உணர்த்தி வருகின்றேன்.


என்னுடைய நாணத்தை பொது மக்கள் மத்தியில் பாதுகாத்து வருகின்றேன்.


சுன்னத்தான தொழுகைகளைப் பேணி வருகின்றேன்.


ரமளான் மாதத்து நோன்புகளை நோற்று வருகின்றேன். அதில் தவறிய நோன்புகளையும் நான் பின்பு களாவாக நோற்கின்றேன்.


ரமளான் தவிர்த்து விரும்பத்தகுந்த நோன்புகளையும் (சுன்னத்தான, நபிலான) நோற்று வருகின்றேன்.


பிறர் தூங்கக் கூடிய நேரத்தில் நான் எழுந்து தொழுகின்றேன்.

புதன், 18 மே, 2011

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கிய பொருளாதாரப் பொறுப்புகளும் கடமைகளும்

இஸ்லாம் பெண்களுக்கு பொருளாதார ரீதியான உரிமைகளை வழங்கயது போலவே அவளுக்க பொருளாதார ரீதியிலான பொறுப்புக்களையும், கடமைகளையும் விதித்துள்ளதைக் காண்கிறோம். இந்த பொறுப்புக்களையும், கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றும்போது தான் இஸ்லாமிய சமூகம் அதன் மூலம் மகத்தான பயன்களை பெறுகிறது என்பதில் சந்தேகமில்லை. இதனையே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

ஒரு பெண் தனது கணவனின் வீட்டு விவகாரங்களை கண்காணிப்பவளாகவும், அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி வினவப்படுபவனாகவும் உள்ளாள்.அந்த வகையில் இஸ்லாம் பெண்களுக்கு விதித்துள்ள அடிப்படையான சில பொருளாதார பொறுப்புக்களை நோக்குவோம்.

1. வீட்டில் பண ரீதியான திட்டமிடல் ஒரு பெண் தனது வீட்டில் தன் மீதுள்ள பொறுப்புக்களை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். அதில் ஒன்றாக பண ரீதியான பொறுப்பு காணப்படுகிறது. அவள் தனது வீட்டின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, தங்குமிட வசதி போன்றவற்றுக்கான செலவீனங்களை நுணுக்கமாக திட்டமிட வேண்டும். உணவு தயாரித்தல், தேவையான உடைகளை வாங்குதல், வீட்டுக்குத் தேவைப்படும் உபயோகமான பொருட்களை வாங்குல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு செலவிடும் போது தனது குடும்பம் பெறுகின்ற வருமானத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவள் வருமானத்திற்கு மேலதிகமான செலவினங்களை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது

ஒரு பெண் தனது வீட்டுத் தேவையான உணவுப் பொருட்களுக்கு விரயமின்றி செலவு செய்யும் போது அவளுக்கு அதற்கான கூலி கிடைக்கிறது. மேலும், அதனை சம்பாதித்த அவளது கணவனும் அதன் கூலியைப் பெற்றுக் கொள்கிறான். (தபரானீ)

மேலும் தனது வீட்டில் உள்ள வளங்களை வளப்படுத்தி வீட்டைத் தன்னிறைவு கொண்டதாக, மாற்ற முயல வேண்டும். வீட்டு வளங்கள் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் போது வீட்டுத் தேவைகளுக்காக வெளியிலிருந்து வாங்க வேண்டிய தேவை குறைந்து போகும். அவ்வாறே அவள் தனது கணவனுடன் கலந்தாலோசித்து வருமானத்திற்கேற்ப செலவுகளை வரையறுத்து ஒரு வரவு செலவு திட்டத்தை தயார்படுத்த வேண்டும். அதனால் வீட்டு நிர்வாகத்திலும், பொருளாதார வாழ்விலும் இருவருக்கும் புரிந்துணர்வோடு செயல்பட முடியுமாக இருக்கும்.

2. ஹலாலான வழியில் சம்பாதிப்பதில் கணவனோடு ஒத்துழைப்பு வழங்கல் அவள் ஹலாலான சம்பாத்தியங்களை மட்டும் விரும்பக் கூடியவளாக இருப்பதோடு கணவனை நல்ல தொழிலை செய்வதற்கும் நல்ல வழியில் சம்பாதிப்பதற்கும் அடிக்கடி தூண்டுபவளாகவும் இருக்க வேண்டும். இதுபற்றி அல்குர்ஆன் :

ஈமான் கொண்டவர்களே நாம் உங்களுக்கு அளித்ததில் நல்லவற்றை உண்ணுங்கள் என்று குறிப்பிடுகிறது.

அவள் இந்தப் பொறுப்புணர்ச்சியோடு செய்ய வேண்டும். கணவனை எந்நேரமும் நல்ல வழியில் சம்பாதிக்குமாறு ஏவுவதோடு அவனுக்கு பக்கபலமாக இருந்து உபதேசம் செய்ய வேண்டும். அவனது வியாபார நடவடிக்கைகளில் ஒரு நெருங்கிய பங்காளியாக இருக்க வேண்டும். ஏனெனில், இன்றைய உலகம் ஜாஹிலிய்யத்தின் முழு வடிவத்தையும் கொண்டு காந்தம் போன்று இழுத்தடிக்கிறது. எனவே தனத கணவனை இந்த ஜாஹிலிய்ய சேற்றில் தனியாக விடாமல் அவளும் பக்கபலமாக இருந்து அவனை நேர்வழிப்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பைச் சுமக்க வேண்டியிருக்கிறாள்.

ஹராமான உணவால் வளர்ந்த உடம்புக்கு பொருத்தமான இடம் நரகமே என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இதனால் தான் ஆரம்பகால சாலிஹான பெண்கள் தனது கணவன் வியாபாரத்திற்காக வெளிக்கிளம்பும் போது கீழ்வருமாறு உபதேசித்துள்ளார்கள்.

உங்களை ஹராமான வழியில் சம்பாதிப்பதை விட்டும் எச்சரிக்கிறேன். ஏனெனில் நாம் பசியைத் தாங்கிக் கொள்வோம். ஆனால் எம்மால் நரக நெருப்பைத் தாங்க முடியாது.

3. செலவினங்களில் நடுநிலைமையை கையாளல்இஸ்லாம் தனது அனைத்துப் போதனைகளிலும் நடுநிலையை போதிக்கிறது. அந்த வகையில் செலவு செய்கிற போது வீண் விரயம், கருமித்தனம் என்ற இரண்டு தீவிர நிலைகளுக்கு அப்பால் நின்று நடுநிலையாக செலவிடுமாறு ஏவுகிறது. அல்லாஹ் தனது அடியார்களின் பண்புகளுள் ஒன்றாக இதனைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றான் :

அவர்கள் செலவு செய்தால் வீண்விரயம் செய்ய மாட்டார்கள். அவ்வாறே கருமித்தனம் காட்டவும் மாட்டார்கள். மாறாக இரண்டுக்கும் மத்தியில் இருப்பார்கள்.

இந்த வகையில் பெண் வீண் செலவுகளையும், ஆடம்பர மோகத்தையும் விட்டு விட வேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்.

யார் நடுநிலையாக செலவு செய்கிறானோ அவன் வறுமையை காண மாட்டான். மேலும்,

யார் இஸ்லாத்தை ஏற்று தனது செலவீனங்களின் சாதாரணமாக நடந்து கொள்கிறானோ அவன் வெற்றி பெற்றவன் ஆவான். மேலும், அல்லாஹ் அவனுக்கு கொடுத்தவற்றில் திருப்தியை கொடுப்பான். என்று கூறினார்கள்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு செலவு, சட ரீதியான அல்லது உளரீதியான பயனைத் தராத போது அதனை அவள் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செலவு செய்தால் அல்லாஹ்வின் கோபத்திற்கு உட்பட்டவனாக மாறுவாள். ஒரு பெண் எந்தவொரு செலவினத்தையும் செய்யு முன்னர் அது இஸ்லாமிய ஷரீஆவோடு உட்படுகிறதா? அல்லது முரண்படுகிறதா? என்பதைக் கருத்திற் கொண்டு செலவு செய்ய வேண்டும்.

இஸ்லாம் மனிதத் தேவைகளை மூன்றாக வகுத்துள்ளது. அதனை ஒவ்வொரு பெண்ணும் விளங்கி இந்த ஒழுங்கு முறைப்படி செலவினங்களை மேற்கொள்ள முயல வேண்டும்.

அடிப்படைத் தேவைகள் :மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அடிக்கடி தேவையான உணவு, உடை, வீடு, ஆரோக்கியம், திருமணம், அறிவு, பாதுகாப்பு போன்றவற்றின் மீது கட்டாயமாக செலவு செய்ய வேண்டியுள்ளான்.

சாதாரண தேவைகள் :மனிதன் தனது வாழ்க்கையை கஷ்டங்கள் அசௌகரியங்களிலிருந்து இலகுபடுத்தி வசதியாக வாழ்வதற்கு செலவு செய்வதை இது குறிக்கும். இது அடிப்படைத் தேவைகளின் செலவீனங்களுக்கு அடுத்ததாகவே கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஆடம்பரத் தேவைகள் :மனிதன் தனது வாழ்க்கையை அதிவசதி கொண்டதாகவும், மேலதிக தேவைகளைப் பெற்ற வாழ்க்கையாகவும் மாற்றுவதற்கு செய்யப்படும் செலவினங்களாகும்.

இந்த ஒழுங்கிற்கேற்ப ஒரு பெண் செலவினங்களை மேற்கொள்ளும் போது தான் அவளது குடும்ப வாழ்வு நிம்மதி கொண்டதாக மாறும். இந்த படித்தரங்களுக்கு முரணாக பணத்தை செலவிடும் போது குடும்பத்தில் நாம் இன்று காண்பது போன்று அழகிய இல்லங்கள் நரகத்தின் படுகுழிகளாக மாறியுள்ளதை காண்கிறோம்.

4. உழைப்புக்கும் செலவுக்குமிடையில் சமநிலையைப் பேணல்ஒரு பெண் தனது கணவனை அவளது சக்திக்கும் முயற்சிக்கும் அப்பாற்பட்ட வகையில் சம்பாதிக்குமாறு, செல்வம் தேடுமாறு நிர்ப்பந்திக்கக் கூடாது. மாறாக தனது கணவன் அவனது முயற்சியால் பெறுகின்ற வருமானத்திற்கேற்ப செலவினங்களை வரையறுத்து திட்டமிடல் வேண்டும். ஏனெனில் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது :

அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை.

இந்த வகையில் தான் ஆரம்பகால பெண் ஒருவர் தனது மகளைப் பார்த்து கீழ்வருமாறு சொன்னான் :

நிர்ப்பந்த நிலைகளைத் தவிர நீ உனது கணவனை சம்பாதிக்குமாறு கஷ்டப்படுத்தாதே. மேலும் கஷ்டமான வேளைகளில் அவருக்கு உதவி செய். ஏனெனில், கடன்களை சுமப்பதை விட பாறாங்கற்களை சுமப்பது இலேசாகும்.

பல நாட்களுக்கு பயன்படும் செல்வத்தை ஒரு நாளிலேயே செலவு செய்கின்ற குடும்பத்தை நான் வெறுக்கிறேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

5. எதிர்காலத்திற்காக சேமித்து வைத்தல்பெண் தனது எதிர்வரும் பரம்பரைக்கு சேமித்து வைக்க வேண்டிய பொறுப்பை பெற்றுள்ளாள். தற்போது வாழுகின்ற பரம்பரையின் சொத்தில் பின்வருகின்ற பரம்பரையினருக்கும் பங்குள்ளது என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.

இஸ்லாம் தனது பொருளாதார கொள்கையிலிருந்து இரண்டு அடிப்படைகளை எதிர்கால சந்ததியினருக்கு சேமித்து வைப்பதற்காக முன்வைக்கிறது. முதலாவது, ஹலாலான வழியில் சம்பாதிப்பதோடு அதனை விருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்தல், இரண்டாவதாக, செலவினங்கள் போக வீண் விரயமின்றி நடுநிலையைக் கையாளுதல்.

ஹலாலாக சம்பாதித்து நடுநிலையாகச் செலவு செய்து அதில் ஒரு பகுதியை எதிர்கால தேவைகளுக்கு வைப்பு செய்பவனுக்கு அல்லாஹ் அருள்பாலிக்கட்டும் என்று ஒரு கூற்று ஸஹாபாக்களால் சொல்லப்படுகிறது.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களைப் பார்த்து கீழ்வருமாறு சொன்னார்கள் :

நீர் உனது பரம்பரையை மக்களிடம் கையேந்தபவர்களாக, - மக்கள் அவர்களுக்கு கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் கூட - விட்டுச் செல்வதை விட அவர்களை, தேவைகள் நிறைவேறியவர்களாக, கையேந்தாத நிலையில் விட்டுச் செல்வதே சிறந்ததாகும்.

முக்கியமாக, ஒரு பெண் எப்போதும் மனதில் ஆழமாக பதிக்க வேண்டியது என்னவெனில் தனது குடும்பம் சில நாட்கள் அழகாக பிரச்னைகள் இன்றி மகிழ்ச்சியோடு இருப்பது போலவே ஏனைய காலங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடிகள், இதர பிரச்னைகளுக்கு உட்பட வேண்டிவரும். அதனால் வசதியான காலங்களில் அடுத்துவரும் கஷ்டமான காலங்களுக்கு தேவையானவற்றை சேமித்து வைக்க வேண்டிய கடமையை உணர வேண்டும். ஏனெனில் ஒருவன் விடிந்தால் என்ன சம்பாதிப்பான்? எவ்வளவு வருமானத்தைப் பெறுவான்? நாளைக்கு உயிரோடு இருப்பானா? மரணிப்பானா? என்பதை தீர்மானிக்க முடியாது. இது பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது.

எந்த ஆத்மாவும் நாளைக்கு எதனை சம்பாதிக்கும் என அறியாது. மேலும் எந்த பூமியில் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிந்தவனும் நன்குணர்ந்தவனுமாவான், என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

எனவே மேற்கூறிய அடிப்படையில் ஒரு பெண் தனது வீட்டின் பொருளாதார பொறுப்புக்களை விளங்கி நடைமுறைப்படுத்தும்போது அவ்வீட்டில் அன்பும், பாசமும், நேசமும், பரஸ்பர புரிந்துணர்வும் வெளிப்படும். அதற்கு மாற்றமாக நடக்கும் போது இன்று நாம் உலகில் காண்பது போன்று குடும்ப உறவுகள் சின்னாபின்னப்பட்டு சிதைந்து போவதைத் தடுக்க முடியாது.

சனி, 14 மே, 2011

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்

மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆலு இம்ரான் : 104)




இங்கே நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் - நல்லதைக் கொண்டு ஏவுபவர்கள், அழைப்பாளர்கள் பற்றியும், தீயவற்றிலிருந்து தடுப்பவர்கள் பற்றியும் ஒரு முஃமினுடைய மூன்று குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.



நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எந்த நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றோமோ, அந்த நன்மையைப் பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உள்ள நபிமார்களுக்கு சீடர்கள் இருந்தார்கள். அந்த சீடர்கள் தங்களது நபிமார்கள் மறைந்தவுடன் அந்த நபிமார்கள் எதை எதைக் காட்டித் தரவில்லையோ, அவற்றை எல்லாம் செய்து கொண்டும், அதன் மூலம் எழுந்த தீமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் வரலாறு நெடுகிலும் அழிக்கப்பட்டு வந்திருப்பதை திருமறை வாயிலாக, ஆது, ஸமூது, மத்யன், ஹுது என பல்வேறு கூட்டத்தார்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.



இதற்கு முன் வந்த அனைத்து நபிமார்களும் கண்ட அனைத்துத் தீமைகளும் இன்றைக்கும் நம் முன்னே பவனி வந்து கொண்டிருக்கும் பொழுதும், இஸ்லாத்தை வேரடி மண்ணாக அழித்து விடுவதற்கு கிறிஸ்தவ, யூத, காஃபிர்கள் என அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் பொழுது, இஸ்லாத்திற்கு எதிராக ஜாஹிலிய்ய சக்திகளை ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் பொழுது, நன்மையைக் கொண்டு ஏவி தீயவற்றைத் தடுப்பவர்கள், அந்தப் பணியைச் செய்யாமல் உதாசினத்துடன் நடந்தோமென்றால், எந்தப் பணியை இந்த முஸ்லிம் சமுதாயத்திடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டு விட்டுச் சென்றுள்ளார்களோ அந்தப் பணியை யார் நிறைவேற்றுவது என்ற கேள்வி எழும்.



இந்தக் கேள்விக்குப் பதில் வைத்திருப்பவர்கள் யார்? என்பதையும், அவற்றை அறிய வேண்டிய பொறுப்பு யார் மீது உள்ளது? என்பதையும் நாம் சிந்தித்தாக வேண்டும்.



இங்கே நம்மைச் சுற்றி தீமைகள் நிறைந்திருக்கின்ற இந்த வேளையில் நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இங்கே தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
இன்றைக்கு இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.



தொழுகையில் எப்படி நிற்பது, கைகளை எங்கே கட்டுவது, எவ்வாறு குனிவது, எவ்வாறு சுஜுது செய்வது உள்ளிட்ட அனைத்தையும் நாம் கற்று வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த இஸ்லாம் மார்க்கம், இத்துடன் நின்று விட்டதா? மேற்கண்ட முறைப்படி குனிந்து நிமிர்ந்து விட்டால், ஒரு முஸ்லிமினுடைய கடமை முடிந்து விட்டதா? என்று கேட்டால் இல்லை என்ற பதிலையே நீங்கள் தருவீர்கள். ஏனெனில், இறைவன் தன்னுடைய திருமறையிலே மேலே கூறியுள்ளதை இங்கே மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள்.



நன்மையை ஏவ வேண்டும்! தீமையைத் தடுக்க வேண்டும்! இதற்கென ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.



இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்கவும், அடுத்து நாவால் தடுக்கவும், இவை இரண்டும் இயலா விட்டால் மனதளவில் வெறுத்து விடும்படியும், இது ஈமானின் பலஹீனமான நிலை என்றும் கூறியுள்ளார்கள்.



இன்றைக்கு மனதால் வெறுக்கக் கூடிய அளவுக்கு தீமைகள் குறைந்து காணப்படவில்லை. மாறாக, கை கொண்டு தடுத்தால் கூட இயலாத அளவில் தீமைகள் இந்த உலகில் மலிந்து கிடப்பதை நாம் காண்கின்றோம்.



இந்த நிலையில் முஸ்லிம்களின் அழிவையும் சற்று இங்கு சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இதற்கு முன் வாழ்ந்த நபிமார்களின் சீடர்கள், தீமை புரிந்ததோடல்லாமல், தீமை புரிந்தவர்களைத் தடுக்காததன் காரணத்தினால், அவர்களும் அந்தத் தீயவர்களுடன் அழிக்கப்பட்டதை இறைமறை நெடுகிலும் நாம் கண்டு வரும் பொழுது, இந்த தீனை மிகைத்து நிற்கும் தீமைகளைக் களைவது யார் பொறுப்பு என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.



நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றவர் முதலில் தான் ஜாஹிலிய்ய சக்திகளிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும்.



அடுத்ததாக, தனக்கு எந்தளவு நன்மையான விசயங்கள் தெரிந்திருக்கின்றதோ, அதனைக் கொண்டு மக்களை நன்மையின் பால் அழைக்க வேண்டும். ஏனெனில் நாம் மௌலவிகள் அல்லவே, அதற்கென படித்தவர்கள் தானே அதனைச் செய்ய வேண்டும் என்றில்லாமல், தனக்குத் தெரிந்தவரை மக்களை நன்மையின் பால் அழைக்க வேண்டும். ஏனெனில், இன்றைக்கு உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அழைப்புப் பணிக் களத்தில் இறங்கினால் கூட, இன்றைக்கு இருக்கின்ற ஜாஹிலிய்ய சக்திகளை எதிர்க்க முடியாத அளவுக்குச் சென்றுள்ள காரணத்தினால், முடிந்தவரை நாம் அழைப்புப் பணியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் வளர்ந்து வரும் ஜாஹிலிய்ய சக்திகளுக்கு எதிரான நம்முடைய தாக்குதல் காரணமாக, தீமைகள் மட்டுப்படலாம்.



அடுத்ததாக, நாம் செய்யும் இந்த அமல்கள் யாவும் நம்முடைய மறுமைக்குத் தான் என்ற எண்ணம் மேலோங்க வேண்டுமே ஒழிய, இதனால் இறைவனுக்கு ஏதோ நன்மை செய்து விட்டதாகக் கருதக் கூடாது.



இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கின்றாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கின்றார். (அல் அன்கபூத் : 06)



மேலும், எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறாரோ அவர்கள் தங்களுக்கு நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கின்றார்கள்.(அர் ரூம் : 44)



மேலும், நாம் இறைவுணர்வுடனும், தூய உள்ளத்துடனும், நன்மையை எதிர்பார்த்தும் செய்கின்ற நல்ல பல அமல்களைக் கொண்டு பயனடைவது நாம் என்பதை விளங்க வேண்டும்.



இன்று உலகில் கிடைக்கும் சில சில்லறை இலாபங்களுக்காக நமது உலகாதாய நடவடிக்கைகளை நாம் மிகவும் கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றோம். ஆனால்,



நாளை மறுமையில் நமக்கு பெரும் உதவியாக அமையப் போதுமான நல்லறங்களைச் செய்யும் விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்?
நமது நிலையை உணர்ந்து நமது நன்மைக்காகவே செய்கின்ற நல்லறங்களை கவனமாகச் செய்ய முற்படுவோமாக!



வல்ல நாயம் அதற்குப் பேரருள் புரிவானாக! ஆமீன்!!

புதன், 4 மே, 2011

அந்த நாள்

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
''அதற்கு என்ன நேர்ந்தது?'' என்று மனிதன் கேட்கும் போது-
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
(அத்தியாயம் : 99)



சூராவைப் பற்றி ..!
இந்த சூரா அளவிலே சிறியதாக இருந்தாலும் அது உள்ளத்திலே ஏற்படுத்தும் தாக்கத்திலும் கருத்தாழத்திலும் மனித மனதை உசுப்பி சிந்தனையைத் உண்மையை உணரச் செய்வதிலும் அளவு கடந்தது.



இந்த பூமிக்கு என்ன நேர்ந்து விட்டது? அதனை நடுங்க வைத்துப் பெயர்த்து விட்டவன் யார்? என்று மூச்சுத் திணறிக் கொண்டு மனிதன் கேட்டுக் கொண்டிருப்பான். அவனுடைய கேள்விக்கு பதிலை பூமியே சொல்லும்.



அந்நாளில் அது தன் விஷயங்களை (எல்லாம்) அறிவிக்கும். ஏனென்றால் (இவ்வாறே) உனதிறைவன் வஹீ மூலம் தனக்குக் கட்டளையிட்டான் (என்று கூறும்).



ஆம்! மேற்குறிப்பிட்டவாறு அதிர்ந்த நடுங்கி வெடித்துச் சிதறி தன்னத்தே கொண்டிருந்தவைகளையெல்லாம் வெளியில் சிதறி விடுமாறு உம்முடைய இறைவன் தான் தனக்கு அறிவித்தான். அந்தக் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு சரணடைந்து விட்டதாகவே அது கூறும். அடக்கஸ்தலங்களை விட்டு வெளியேறும் காட்சியை குர்ஆன் இவ்வாறு வர்ணிக்கிறது.



அந்த நாளில் மனிதர்கள் (நன்மையோ, தீமையோ) தங்கள் வினைகளைக் காணும் பொருட்டு (பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.



மேற்படி பயங்கர நிகழ்வுகள் நடந்து முடிவதற்குள் நீதி விசாரணை நாள் வந்து விடும். அப்போது மனிதர்கள் கப்றுகளிலிருந்து வெளிப்படுவார்கள். பூமியை எங்கு நோக்கினும் இதே காட்சி தான் தென்படும். மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் வெளிப்படும் நாள் அது. வெளிப்பட்டவர்கள் எங்கும் பார்க்காமல், எதனையும் நோக்காமல் தலைகுனிந்து பார்வை தாழ்த்தி அழைப்பாளனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பார்கள். எங்கும் மயான அமைதி நிலவும். அன்றைய தினம் யாரும் யாரையும் பார்க்க முடியாது. பேச முடியாது. அங்கு எதுவுமே பயனளிக்கப் போவதில்லை.



அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களைக் கவனிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டு விடும் (81:37)



ஒரு பயங்கரமான பேரதிர்ச்சி.. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழக் கூடிய சில மகத்தான மறுமைக் காட்சிகள்.. இவற்றைப் பார்த்த மனிதன் ஏற்படக் கூடிய அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.. இதோ மனிதர்கள் எழுப்பப்படும் நாள்.. .. நீதி விசாரணை நடத்தப்படும் நாள்.. .. கூலி கொடுக்கப்படும் நாள்.. கண்ணெதிரே தோன்றுகிறது. இவ்வளவையும் அதாவது மறுமையின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரத்தினச் சுருக்கமாக சின்னச் சின்ன வசனங்களினூடாக ஒரு சிறிய சூராவில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளமை அல்குர்ஆனுக்குரிய அற்புதத் தன்மையாகும்.



அழிவு நாள் பேரதிர்ச்சி
இப்பொழுதெல்லாம் நாம் பல்வேறு அதிர்ச்சிகள் சூழப்பட்டு ஓர் உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமியதிர்ச்சித் தாக்குதல்கள், குண்டு அதிர்ச்சிகள், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இப்படியாக உளரீதியாகவும், சடரீதியாகவும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிகள் மலிந்த சூழலிது. ஆனால் பரிச்சயமான இத்தகைய அதிர்ச்சிகளைப் போன்றதல்ல அந்த அழிவு நாளின் பேரதிர்ச்சி.



பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், பூமி தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில்) எறிந்து விடும் சமயத்தில் அந்த அதிர்ச்சியையும் அதன் விளைவுகளையும் இங்கே சுட்டிக் காட்டுகின்றன.



ஆம்! அப்போது அகன்று விரிந்த, ஆழ அகலம் காண முடியாத பிரம்மாண்டமான மலைகளை முளைகளாகக் கொண்டிருக்கக் கூடிய, வானுயர்ந்த கட்டடத் தொகுதிகளையும், கோடான கோடி உயிரினங்களையும் உயிரற்றவைகளையும், தாவரங்களையும் இன்னும் பலவற்றையும் தன்னத்தே கொண்டு சிறிதும் அசைந்து கொடுக்காது உறுதியாகவும் நிலையாகவும் காணப்படுகின்ற இந்தப் பூமி ஓர் அதிர்வு அதிர்ந்து நடுநடுங்கி வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகும். அந்த நடுக்கம் சாதாரண நடுக்கமல்ல. அது பயங்கரமானது அந்த நாளின் அதிர்ச்சியைப் பற்றி அல்குர்ஆனில் மற்றுமொரு இடத்தில் குறிப்பிடும் போது,



மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர். எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல் ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (22:1-2)



இத்தகைய பேரதிர்ச்சி ஏற்பட்டால் பூமிக்குள் புதையுண்டு கிடப்பவற்றையெல்லாம் அது வெளியே துப்பி விடும். அது நீண்ட காலமாக தனக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருந்த மனித உடல்களாக இருக்கலாம். கனிப் பொருட்களாக இருக்கலாம். அல்லது வேறு சடப் பொருட்களாக இருக்கக் கூடும். அத்தகைய சுமைகளின் அழுத்தத்திலிருந்து இப்பொழுது பூமி மீட்சி பெறப் போவது போல அந்தக் காட்சி இருக்கும்.



கேள்வியும் பதிலும்
திடுகூறாக இவ்வளவும் நடந்து விட்டால் அவன் ஏற்கனவே நிலநடுக்கங்களையும் கனல் கக்கும் எரிமலை வெடிப்புக்களையும் சந்தித்திருந்தாலும் கூட.. இந்த அதிர்ச்சியானது வித்தியாசமான விசித்திரமான பரிச்சயமே இல்லாத வியப்பூட்டக் கூடிய அதிர்ச்சியாகும். ஒரேயொரு அதிர்ச்சி.. .. அவ்வளவுதான் பூமியின் மீதுள்ள அனைத்தும் குடை சரிய ஆரம்பித்து விடும். மனிதன் தனக்கு எட்டக் கூடியதைப் பிடித்துத் தாங்கி நிமிர்ந்து நிற்க முயற்சிப்பான். முடியவே முடியாது. இப்பொழுது என்னவோ ஏதோ நடக்கப் போகிறது என மனிதன் வியந்து போய் கேட்பான்.



மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது? (ஏன் இவ்வாறு அதிர்ந்தது) என்று கேட்பான்.
அந்தக் கணத்தின் பயங்கரத்தை வர்ணிக்க வார்த்தைகளால் முடியாது.
எங்கு செல்கிறார்கள்?
தன்னுடைய வினைகளை காணும் பொருட்டு.. ..!



கண்குப் பார்த்தறிவதற்காக செல்கிறார்கள். அன்றைய தினம் அவனுடைய கணக்குகள் முடிக்கப்படும். அவனுடைய வினைச்சீட்டு அவனுக்குக் காண்பிக்கப்படும். குற்றவாளிகளைப் பொறுத்தமட்டில் படைத்த ரப்புக்கு முன்னால் தனது பாவச் செயல்கள் அம்பலத்துக்கு வரும் வேளை வெட்கித் தலைகுனிந்து தன்னுடைய விரல்களைக் கடித்துக் கொண்டு அழுது பிரலாபிப்பதை தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்?



எவன் தன்னுடைய இடக்கையில் வினைச்சீட்டு கொடுக்கப் பெறுவானோ அவன், என்னுடைய வினைச்சீட்டு கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா? என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டாமா? என்னுடைய பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே! என்னுடைய செல்வாக்கும் என்னை விட்டு அழிந்து விட்டதே! என்று பிரலாபிப்பான்.



அணுவுக்கும் திணிவுண்டு



இனி அமல் மீஸான் என்ற தராசில் நிறுக்கப்படும்.



ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (அங்கு) அதனையும் கண்டு கொள்வார். (அவ்வாறே) எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாரோ அதனையும் (அங்கு) கண்டு கொள்வார்.



வாழ்க்கைக் களத்திலே மனிதன் பிரம்மாண்டமான, மலையளவு பாவகாரியமாக இருந்தாலும்சரி. ஒரு அணுவளவு நன்மையான காரியமாக இருந்தாலும் சரி. இரண்டையும் அவன் அலட்டிக் கொள்வதில்லை. அலட்சியம் செய்து விட்டு மனம் போன போக்கில் செயல்படுகிறான்.



ஆனால் மறுமை நாளிலோ இறைவனுடைய தராசுத் தட்டிலே மனிதனுடைய பார்வையிலே எத்தகைய கணிப்பீடும் பெறுமதியும் அற்ற அணுவளவு செயலுக்குக் கூட, அது நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும்சரி. பெறுமதி உண்டு. அதனை அவன் கண்டு கொள்வான். எந்த ஒன்றையும் அத்தராசு விட்டு வைக்காது. உடலையும், உள்ளத்தையும் சிலிர்க்கச் செய்யும் அத்தராசுக்கு நிகர் அதுவே. அப்போது தான் மனிதன் உணர்ந்து கொள்ளப் போகிறான். ஆனால் அது காலம் கடந்த ஞானமல்லவா?



சூரா ஏற்படுத்தும் தாக்கம்



இப்படியாக இந்த சூரா வர்ணிக்கும் மறுமைக்காட்சிகளை கவனத்துடன் உணர்வுப்பூர்வமான உள்வாங்கலில் மனிதன் தன்னுடைய பாதங்களுக்குக் கீழால் இருப்பவைகளையெல்லாம் அதிர்ந்து நடுங்கி அசைவது போல் உணர்வான். இந்தப் பூமி அப்படியே அசைந்து நகர்ந்து பெயர்க்கப்படுவது போல் அவனுக்குத் தோன்றும். இந்த உணர்வு அவனை மறுமைக்கே அழைத்துச் செல்லும். மறுமை உணர்வுகள் அவனது உள்ளத்தில் அலை மோதும். உலகியல் சிந்தனைகளும், மனோஇச்சைகளும், தணிந்து விடும். இந்த உலகில் அவன் நிலையானவைகள் எனக் கருதிக் கொண்டிருந்தவையெல்லாம் அழிந்து விடக் கூடியவை என அவனுக்குப் புரியும். அப்போது அவனுடையஈமான் அதிகரிக்கும். உள்ளத்திலே ஊற்றெடுக்கும் அந்த ஈமான் அவனுடைய உறுப்புக்களுக்கும் பாய்ச்சப்பட்டு செயல்பாடுகளாக வெளிப்பட ஆரம்பிக்கும். இதுவே சூராவின் எதிர்பார்ப்பும் கூட. சிந்திப்போம். செயல்படுவோம்.