துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 29 ஜூன், 2011

தூய எண்ணம்

அறிவிப்பாளர் : உமர் பின் கத்தாப் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:
சீர்திருத்தத்திற்கும், ஒழுக்கப் பயிற்சிக்கும் மிகத் தேவையான, முக்கியமானதொரு நபிமொழியாகும் இது. நபியவர்களின் இந்தப் பொன்மொழிக்குப் பொருள் இதுதான். நற்செயல்களின் விளைவுகள், எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எண்ணம் சரியானதாக இருப்பின், அந்க நற்செயலுக்கான கூலி கிடைக்கும். இல்லையெனில் கிடைக்காது அச்செயல் பார்ப்பதற்கு எவ்வளவு நல்லதாகாத் தோன்றினாலும் சரியே.

அச்செயல் இறைவனின் திருப்திக்காகச் செய்யப்பட்டு இருந்தால்தான் மறு உலகில் அதற்கான நற்கூலி கிடைக்கும். அந்தச்செயலை அவன் செய்வதற்கு உலக ஆசை தூண்டுகோலாய் இருக்குமானால், உலகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவன் அதனைச் செய்திருந்தால். மறுஉலகில் அச்செயல் விலை போகாது; அதற்கு மதிப்பு இருக்காது. ஆவனுடைய இந்தச் செயல் அங்கு செல்லாக்காசாகத்தான் கருதப்படும்.

இந்த உண்மையைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தை எடுத்துக்காட்டாகக் கூறி தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஹிஜ்ரத் என்பது எவ்வளவு பெரிய நற்செயல்! இருப்பினும் எவராவது இந்த நற்செயலை இறைவனுக்காகவும், இறைத்தூதருக்காகவும் புரிந்திடாமல் தம் உலகாதாய நோக்கங்களைப் பெற்றிட இதனைச்செய்வாராயின் வெளிப்படையாகப் பார்த்தால், அது மிகப் பெரிய நற்செயலாகத் தென்படும். ஆனால், இந்தச் செயலால் மறுஉலகில் எவ்விதப் பலனும் கிட்டாது. இதற்கு நேர்மாறாக அச்செயல் புரிந்தவர் போலித்தனம், மோசடி ஆகிய குற்றங்களுக்குத்தான் ஆளாவார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்:

நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?
அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறைநீதிமன்றத்தில்; நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள்நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்:
இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?
இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருற்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில்; நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான்.

அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருற்தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன்

இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப் புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசிவிடுங்;கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். (முஸ்லிம்)

விளக்கம்:
மேற்சொன்ன மூன்று அறிவிப்புகளும் தெளிவுபடுத்தும் உண்மை இதுதான்: மறுமை வாழ்வில் ஒரு நற்செயலின் புறத்தோற்றத்தைக் கொண்டு எந்த வெகுமதியும் கிடைத்துவிடாது. அங்கு இறைவனின் திருப்திக்காகவும் உவப்புக்காகவும் செய்யப்படும் நற்செயலே நற் கூலிக்கு உரியதாய் கணிக்கப்படும். ஏக இறைவனை விடுத்து மற்றவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவோ மக்களிடம் உயர் மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ ஒரு செயல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு இறைவனின் பார்வையில் எள்ளளவும் மதிப்பில்லை, அது எவ்வளவு பெரிய நற்செயலாகத் தென்பட்டாலும் சரியே! மறுஉலகில் அச்செயலுக்கு எந்த மதிப்பும் இருக்காது. இறைவனின் துலாக்கோலில் அது செல்லாக் காசாகத்தான் கணிக்கப்படும்.
மேற்சென்ன தன்மைகள் கொண்ட இறைநம்பிக்கை அங்கு ஒருவனுக்கு எந்தப் பலனையும் தராது. அத்தகைய வணக்கங்கள் எந்த புண்ணியமும் ஈட்டித் தராது.

யதார்த்த நிலை இதுதான். இதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. நிலைமை இவ்வாறிருக்க வெளிப்பகட்டுக்காகவும், புகழாசைகளுக்காகவும் செயல்படும் உணர்வுகள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவை பெரும் நாசத்தை விளைவிக்கக்கூடாது. இல்லையெனில் நம் உழைப்பு, முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். நம்முடைய இந்த முதலீடு வீணாகிவிட்டதே என்று நாம் மறுமையில் கை பிசைந்து நிற்போம். சின்னஞ்சிறு நற்செயலும் நமக்கு துணை செய்யாதா என்று தவித்து நிற்கும் அந்த மறுமைநாளில், நம்முடைய வாழ்வின் முதலீடு முழவதும் முற்றிலும் வீணாகிவிட்டிருப்பது தெரியவரும்.

திங்கள், 27 ஜூன், 2011

இஸ்ராவும் மிஃராஜும்

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையானது ஓர் அதிசய நிகழ்வாகும். ஓர் அற்புதமாகவும் மாத்திரமின்றி பல தத்துவங்களையும், தாத்பரியங்களையும் தன்னகத்தே பொதிந்ததாகவும், அடிப்படையான பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. நபியவர்களின் இவ்விண்ணுலக யாத்திரை இரு கட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணம் அதன் முதற் கட்டமாகும். அதனை அல் இஸ்ரா என வழங்குகிறோம். இப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நபியவர்கள் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டமை அமைந்தது. இதுவே மிஃராஜ் எனப்படுகிறது. இந்த யாத்திரையின் முதற் கட்டத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது.

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும். பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

நபியவர்களின் இப்புனித யாத்திரை முஸ்லிம்களின் இரு முக்கிய தலங்களுடன் தொடர்புற்று இருப்பதைக் காண முடிகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமும், அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமே இவ்விரு புனித ஸ்தலங்களாகும்.

இஸ்ராவும் இஸ்லாத்தின் பூர்வீகமும்
நபிகளாரின் விண்ணுலக யாத்திரை இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோருக்கு இறை வழிகாட்டலும், வஹியும் இறங்கிய தலமான அல்மஸ்ஜிதுல் ஹராமுடன், மூஸா (அலை), ஈஸா (அலை) போன்றோருக்கும் இறைத்தூது கிட்டிய இடமான மஸ்ஜிதுல் அக்ஸாவுடனும் தொடர்புற்றுள்ளது. இது உணர்த்தி நிற்கும் உண்மை என்ன, இவ்விண்ணுலக யாத்திரையில் இவ்விரு இடங்களும் தொடர்புபட்டுள்ளதன் தத்துவம் யாது என்பன நோக்கத்தக்கவை. உண்மையில் இந்த யாத்திரை, குறித் இரு தலங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டதன் மூலம் உணர்த்தப்படும் ஒரு பேருண்மை இருக்கிறது. அவ்வுண்மை யாதெனில், நபி (ஸல்) அவர்கள் நூதனமாகத் தோன்றி ஒரு நபியல்ல. அவர் கொண்டு வந்துள்ள மார்க்கமும் புதியதொன்றல்ல. மாறாக, எந்த அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து நபி (ஸல்) அவர்கள் தனது விண்ணுலக யாத்திரையைத் துவங்கினார்களோ அதே இடத்தில் தமக்குரிய இறைத்தூதைப் பெற்ற முன்னைய தூதர்களான இப்றாஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரும் நபியவர்கள் எந்த அல்மஸ்ஜிதுல் அக்ஸாவை தனது பயணத்தில் கடந்து சென்றார்களோ அதில் வைத்து, அதன் சூழலில் இறை வழிகாட்டலைப் பெற்ற மூஸா (அலை), ஈஸா (அலை) உட்பட இன்னும் பல இறைத் தூதர்களும் போதித்த அதே மார்க்கத்தையே முஹம்மத் (ஸல்) அவர்களும் போதித்தார்கள் என்ற உண்மையே இங்கு போதிக்கப்படுகிறது. இந்த வகையில் அல் இஸ்ராவை நினைவுகூறும்போதெல்லாம் மதம், இறை வழிகாட்டல் பற்றிய இந்தப் பேருண்மையை நினைத்துப் பார்க்க வேண்டும். இஸ்ராவின் மூலம் செய்முறையாகக் காட்டப்பட்ட இவ் உண்மை அல்குர்ஆனில் சித்தாந்த ரீதியில் மிக விரிவாக விளக்கப்பட்டிருப்பதனை அவதானிக்கிறோம்.

உலகில் தோன்றிய அனைத்து இறை தூதர்களும் ஒரே வரிசையில் வந்தவர்கள். ஒரு கட்டடத்தின் கற்கள். அவர்கள் போதித்த மார்க்கம் ஒன்றே. அது இஸ்லாமாகும். அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருந்தனர் என அல்குர்ஆன் கூறும் ஓர் அடிப்படை உண்மையைச் சுட்டிக் காட்டுவதாக அல் இஸ்ரா அமைந்தது.

இப்ராஹீம் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மாறாக தூய்மையான முஸ்லிமாகவே இருந்தார். (3:67)

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால். ''நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)

இது இஸ்ரா உணர்த்தி நிற்கும் ஒரு பேருண்மையாகும். இந்த வகையில் இஸ்ரா நிகழ்ச்சியை நினைவுகூறும் பொழுது எமது ஞாபகத்திற்கு வருவது அல் மஸ்ஜிதுல் ஹராமும், அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமாகும்.

விடுதலையைத் தேடும் குத்ஸ்
இஸ்ரா கூறும் மேலும் ஓர் உண்மையும் இருக்கிறது. இஸ்ராவுடனும், தவ்ஹீதை நிலைநாட்ட வந்த இறைத்தூதர்களுடனும் குறித்த இரு தலங்களும் தொடர்புடையவனாக இருப்பதன் காரணமாகக அவ்விரண்டு புனிதஸ்தலங்களையும் அனைத்து வகையான ஷிர்க்குகள், அநியாயங்கள், அக்கிரமங்கள், குழப்பங்கள் ஆகியவற்றில் இருந்தும் தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அங்கே தவ்ஹீதினதும் ஈமானினதும் கொடியே பறக்க வேண்டும் என்ற உணர்வை எமக்குத் தருகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமை தூய்மைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு முஸ்லிம்களுக்கு இருப்பது போலவே அல் மஸ்ஜிதுல் அக்ஸாவை தூய்மைப்படுத்தும் பொறுப்பும் முஸ்லிம்களைச் சார்ந்ததாக உள்ளது. நபியவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையை உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூறுகின்ற நாம் அவ்விண்ணுலக யாத்திரையின் மையமாகவும், உலகில் தவ்ஹீதை நிலைநாட்ட வந்த பல நபிமார்களும் இறைத்தூதர்களும் இறைத்தூதைப் பெற்ற இடமாகவும் முஸ்லிம்களின் முதற்கிப்லாவாகவும் விளங்கும் பலஸ்தீனில் அமைந்துள்ள பைதுல் மக்திஸை இச்சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். அது மீண்டும் அந்தச் சண்டாளர்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பிறக்க வேண்டும்.

நபிகளாரின் இஸ்ரா நிகழ்வைப் பற்றி விளக்கும் அல்குர்ஆன் அத்தியாயம் ஸுரதுல் இஸ்ரா என வழங்கப்படுகிறது. அவ்வத்தியாயத்தின் முதல் வசனம் இஸ்ராவைப் பற்றிக் கூறுகிறது. தொடர்ந்து வரும் வசனங்கள் மூஸா (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் பற்றியும், யூதர்களின் அட்டகாசங்கள், வேதத்திற்கு முரணான அவர்கள் நடந்து கொண்ட விதம் பற்றியும் விளக்குகிறது. இவ்வாறு இஸ்ராவைத் தொடர்ந்து யூத சமூகத்தைப் பற்றிக் கூறுவதானது, அவர்களின் ஆதிக்கத்திலிருந்து என்றும், எப்போதும் மஸ்ஜிதுல் அக்ஸா விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதை சூசகமாக உணர்த்துவதாகும்.

நபிகளார் பெற்ற நன்மைகள்
இஸ்ராவும் மிஃராஜும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கௌரவமாகவும் அமைந்தது. அண்ணாரை அல்லாஹ் இக்குறுகிய உலகத்திலிருந்து பரந்து விரிந்த வானுலகம் நோக்கி உயர்த்தி தன் சன்னிதானம் வரை வரவழைத்து கௌரவித்தான். பல அற்புதக் காட்சிகளையும் அன்னாருக்கு காண்பித்து கௌரவித்தான்.

அனைத்துக்கும் மேலாக நபியவர்கள் மேற்கொண்ட இவ்விண்ணுலகப் பயணம் அவர்களுக்கு இறைவனால் வழஙகப்பட்ட ஒரு பெரும் பயிற்சியாக அமைந்தது. அல்லாஹுத்தஆலா அன்னாரை இந்த யாத்திரையின் மூலமாக உடல், உள, சிந்தனா ரீதியாக பலப்படுத்தினான். தனது தூதின் பளுவை சுமப்பதற்கும், தொடர்ந்து இடம்பெறவிருக்கம் ஹிஜ்ரத்தின் சிரமங்களைச் சகிப்பதற்கும், இனி வரும் அறப்போராட்டங்களின் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்வதற்கும் தேவையான மனோவலிமையையும் ஆன்மீகப் பலத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். இந்த வகையில் இஸ்ராவும், மிஃராஜும் நபியவர்களுக்கு முழு அளவில் வழங்கப்பட்ட பயிற்சியாக அமைந்தன.

நபியவர்கள் மிஃராஜ் பயணம் மேற்கொண்ட அன்றைய சூழ்நிலையை நோக்கும் போது இப்பயணமானது அவர்களுக்கு மன ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கக் கூடியதாக அமைந்தது. ஏனெனில் நபியவர்களது அழைப்புப் பணிக்கு பக்க பலமாக, துணையாக, ஆறுதலாக, உற்சாகமூட்டுபவராக இருந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களும், பாதுகாப்பு அரணாக இருந்த சிறிய தந்தை அபூதாலிப் அவர்களும் ஒரே ஆண்டில் மரணமடைந்தார்கள். இவ்விருவரது இழப்பு நபியவர்களை கடுமையாகப் பாதித்தது. காபிர்களின் தொந்தரவும், துன்புறுத்தலும் அதிகரிக்கத் தொடங்கின. இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் மனமுருகி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள் :

இறைவா! எனது பலவீனத்தையும், வழியறியா நிலையையும், மக்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்டுள்ள இழிநிலையையும் உன்னிடமே முறையிடுகிறேன். அருளாளனுக்கெல்லாம் அருளாளனே! ரஹ்மானே! நீ தான் பாதிக்கப்பட்டோரின் ரப்பாக இருக்கிறாய். உனக்கு என்மீது கோபம் இல்லையெனில் நான் எதனையும் பொருட்படுத்துவதற்கில்லை. உனது திருப்தியே எனக்குப் பெரிது. (தபகாது இப்னு ஸஃத்)

இந்நிலையில் தான் அல்லாஹ் தன் சிறப்புக்குரிய அடியாருக்கு உதவிக்கரம் நீட்டினான். தன்பால் அன்னாரை வரவழைத்தான். அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான். நபியவர்களை வதைத்துக் கொண்டிருந்த இப்பூவுலகத்தின் கருமேகங்களைப் போக்கக் கூடிய, எதிர்கால வெற்றிக்குக் சாச்சியம் கூறும் அத்தாட்சிகளைக் காண்பித்தான். அவற்றின் மூலம் அண்ணலாரின் ஈமானுக்கு மேலும் வலுவூட்டினான். பூமியையும், பூமியிலுள்ளோரையும் துச்சமாக மதிக்கும் மனோநிலையை அளித்தான். தான் காணும் அம்மாபெரும் அதிசயங்களினதும் அற்புதப் படைப்புகளினதும் இறைவன் தனக்குத் துணை நிற்கிறான் என்ற உணர்வை இறைவன் அண்ணலாருக்கு கொடுத்தான். இந்த வகையில் இஸ்ராவும், மிஃராஜும் நபியவர்களுக்கு புத்துணர்ச்சியையும், புதுத் தெம்பையும் வழங்கியது என்றால் அது மிகையாகாது. இவ்வுண்மையையே அல்லாஹ் தன் அருள்மறையில் இவ்வாறு கூறுகிறான்:

உம்மை நாம் ஸ்திரப்படுத்தி (உறுதிப்படுத்தி) வைக்காதிருப்பின் நீர் ஓரளவாயினம் அவர்கள்பால் சாய்ந்து விடக் கூடுமாய் இருந்தது. (17:74)

மிஃராஜ் ஒரு பரிட்சை
மிஃராஜ் சம்பவமானது அன்றிருந்த உண்மை முஃமின்களை பிரித்தறிவதற்கும், போலிகளை இனங்காண்பதற்கும், உறுதியான ஈமானைப் பெற்றிருந்தோரையும் ஈமானில் பலவீனர்களாக இருந்தோரையும் நபிகளார் அறிந்து கொள்ளவும் துணை புரிந்தது. இவ்வுண்மையை அல்லாஹ் அல்குர்ஆனில் கீழ்வருமாறு கூறுகிறான் :


நபியே! நாம் (இஸ்ரா, மிஃராஜின் போது) உமக்குக் காட்டிய காட்சிகளை மக்களுக்கு (அவர்களின் ஈமானை அறிய) ஒரு பரீட்சையாகவே அமைத்தோம். (17:60)

உண்மையில் ஹிஜ்ரத்துக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற இஸ்ராவும், மிஃராஜும் தொடர்ந்து வர இருக்கும் நிலைமைகளுக்கு முகங் கொடுக்க தன்னுடன் இருப்பவர்கள் தயானவர்களாக இருக்கிறார்களா? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நபிகளாருக்கு துணை புரிந்தது.

இஸ்ராவையும், மிஃராஜையும் முடித்துக் கொண்டு திரும்பிய நபி (ஸல்) அவர்கள் அதனை அடுத்த நாள் காலையில் மக்கள் மத்தியில கூறவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நபியவர்கள், தான் நேற்றிரவு மக்காவில் இருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வானுலகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் நேற்றிரவே மீண்டும் திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களை பொய்ப்பிப்பதற்கு தங்களுக்கு நல்லதோர் ஆதாரம் கிடைத்து விட்டதாக கருதியமையே காபிர்களது ஆனந்தத்திற்குக் காரணமாக அமைந்தது. இச்சம்பவத்தை வைத்தே முஹம்மதின் தோழர்களையும் அவரின் வலையில் விழ இருப்போரையும் இலகுவில் பலவீனப்படுத்தி முஹம்மதை விட்டும் அவர்களைப் பிரித்து தூரமாக்கி விட முடியும் என அவர்கள் மனப்பால் குடித்தனர். நபியவர்கள் மிஃராஜ் சென்றதைக் கூறிய மாத்திரத்தில் சிலர் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் சென்றனர்.

உமது நபி நேற்று இரவோடிரவாக விண்ணுலகம் போய் வந்ததாகப் பிதற்குகிறாரே? இதனையும் நீர் நம்புவீரோ! என ஏளனமாகக் கேட்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அளித்த பதில் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதைவிடப் பாரதூரமான செய்தியை அவர் கூறிய போது நான் அவரை நம்பவில்லையா? இறைவனிடம் இருந்து தனக்கு வஹி வருவதாக அவர் கூறினாரே! அதனையே நம்பிய நான் ஏன் இதனை நம்பக் கூடாது? அன்னார் இதனைக் கூறியிருந்தால் நான் இதனை எத்தகைய சந்தேகத்துக்குமிடமின்றி நம்புபவனாகவே இருப்பேன், என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்பட ஏனைய முஃமின்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது நபிகளாருக்கு பெரும் திருப்தியைக் கொடுத்தது. தம் முன்னே காத்திருக்கும் பணிகளைச் செவ்வனே மேற்கொள்வதற்கும் இந்தப் பாதையில் தாம் எதிர்நோக்கவிருக்கும் சோதனைகளை எதிர்நோக்குவதற்கும் உரிய வலிமையைப் பெற்ற மனிதர்கள் பலர் தம்முடன் இருப்பதை நபியவர்கள் இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

மிஃராஜின் பரிசு
மிஃராஜின் இரவிலே தான் ஐங்காலத் தொழுகை கடமையாக்கப்பட்டது. இறைவனது சந்நிதானத்திற்குச் சென்ற இறைத்தூதருக்கு அவன் அளித்த சன்மானமாக தொழுகை அமைந்தது. அல்லாஹ் அதனை ஏனைய சன்மார்க்கக் கடமைகள் போன்று இப்பூவுலகில் வைத்து விதியாக்காது உயர்ந்த மலக்குகள் மத்தியில் வானுலகில் வைத்து கடமையாக்கினான். அந்தப் பரிசை தன் தூதருக்கும் தனது அடியார்கள் அனைவருக்குமான நிரந்தர நிலையான மிஃராஜாகவும் ஆக்கி வைத்தான். தன்னோடு தனது நபியவர்கள் விரும்பும்போதெல்லாம் உரையாடுவதற்கான ஊடகமாகவும் தொழுகையை அமைத்து வைத்தான்.


தொழுகையை நிலைநாட்டுங்கள். அதனை விட்ட முஷ்ரிக்குகளாக ஆகி விடாதீர்கள். (30:31)

என அல்குர்ஆன் தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் :

ஈமானுக்கம் குப்ருக்கும் இடையிலுள்ள தடை தொழுகையாகும். (முஸ்லிம்)

மிஃராஜ் வழங்கிய சொத்தான தொழுகை நபிகளாருக்கு அனைத்திலும் பிரியமான ஒன்றாக அமைந்திருந்தது.

தொழுகையில் தான் எனக்குக் கண்குளிர்ச்சி உள்ளது (நஸயீ) என நபியவர்கள் கூறினார்கள்.

புனித மிஃராஜ் நினைவுகூரும் போதெல்லாம் மிஃராஜின் பரிசாக அமைந்த தொழுகையின் முக்கியத்துவம் உணரப்படல் வேண்டும். அதனை சீர் செய்து கொள்ள வேண்டும் என உறுதி கொள்ள வேண்டும்.

மிஃராஜ் சித்தரிக்கும் இஸ்லாம்.
நபிகளார் மேற்கொண்ட மிஃராஜை மேலுமொரு கோணத்தில் பார்க்க முடிகிறது. அதாவது இஸ்லாத்தை, அதன் பாதையை படம் பிடித்துக் காட்டுவதாகவும், வேறு வார்த்தையில் சொல்வதாயின் இறைவனை அடைவதற்கான, அவன் திருப்தியை பெறுவதற்கான பாதையை, அப்பாதையின் மைற்கற்களை ஆரம்பம் முதல் இறுதி வரை சித்தரித்துக் காட்டுவதாகவும் மிஃராஜ் அமைந்துள்ளது. மேலும் கீழ்க்கண்ட அம்சங்களையும் இந்த மிஃராஜ் பயணம் நமக்குத் தொட்டுக் காட்டுகின்றது.
1. தௌபா
2. ஜிஹாத்
3. தொழுகை
4. ஸகாத்
5. பெரும்பாவம் வட்டி
6. நாவின் விபரீதங்கள்
7. பாவங்களின் பயங்கரம்

புதன், 22 ஜூன், 2011

பள்ளிவாசலுக்கு வரும் குழந்தைகளின் பராமரிப்பிற்குச் சில யோசனைகள்

இடைவிடாத வேலைகளின் காரணமாக அலுத்துப் போயிருந்த அப்துல்லாஹ்வுக்கு இப்பொழுது தான் சற்று நேரம் கிடைத்தது. கிடைத்த இந்த நேரத்தை பள்ளிவாசலில் அமர்ந்து சிறிது தொழுகை மற்றும் திருக்குர்ஆன் வாசித்தலில் ஈடுபடலாம் எனச் சென்று பள்ளியில் அமர்ந்த பொழுது, துரதிருஷ்டவசமாக அவரால் கவனம் சிதறாமல் தொழவோ, ஓதவோ முடியவில்லை. காரணம், பள்ளிவாசலுக்கு வந்த சிறுவர்கள் ஒன்று திரண்டு பள்ளிவாசலுக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

உங்களது நேரங்களை பள்ளியில் அமர்ந்து கழிக்கலாம் என்று செல்வீர்களானால், இது போன்ற சம்பவங்களை நீங்கள் அடிக்கடி சந்திக்க முடியும்.

அல்ஹம்துலில்லாஹ்!

இது போன்ற சம்பவங்கள் உலகின் அனைத்து பள்ளிவாசல்களிலும் பொதுவான ஒன்று. இருப்பினும் மேலைநாடுகளில் இப்பொழுது அதிகமான குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றன. இதன் காரணமாக சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்காக பள்ளிவாசலுக்கு குடும்பத்துடன் வரக் கூடியவர்கள், அவர்களுடன் இணைந்து வரும் குழந்தைகளுக்கென ஒரு சிறப்பு தர்பியத், அதாவது பயிற்சிப் பாசறை அமைக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளின் சங்கமம் உணர்த்துகின்றது, மட்டுமல்லாமல் அவர்கள் இவ்வாறு பள்ளிவாசலினுள் கட்டுப்பாடில்லாமல் விளையாடிக் கொண்டிருப்பது கூட, அவர்களது அந்த நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுதத் தெரியாத, அந்த பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களின் கவனக் குறைவையே இது காட்டுகின்றது. இஸ்லாத்தின் வருங்காலத் தூண்களாகிய இவர்களது இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவர்களை எவ்வாறு பயிற்றுவிக்கலாம் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

சிறப்பு நிகழ்ச்சிகள்
பள்ளிவாசலில் பெரியவர்களுக்கென சிறப்புரை மற்றும் சமுதாய ஒன்று கூடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளைச் செய்யும் பொழுது, சிறியவர்களையும் கவனத்தில் கொண்டு இவர்களுக்கென தனியானதொரு விளையாட்டு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் வேண்டும். இதற்கு ஏற்படும் செலவினங்களைச் சரி செய்து கொள்வதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வளவு என ஒரு குறைந்த தொகையை நிர்ணியிக்கலாம்.இதன் மூலம் பள்ளி நிர்வாகத்தின் கையைப் பிடிக்காத அளவுக்கு நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.

இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சிறார்களால் ஏற்படும் சப்தம் குறைக்கப்படுவதோடு, பெரியர்களது கவனம் சிதறாமல் ஆற்றப்படும் உரை மீது கவனம் செலுத்த வழி பிறக்கும். அத்தோடு, குழந்தைகளும் கூட சிறந்த இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொள்ளவும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அவர்களது பழக்க வழக்கம், நடத்தைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றைச் சீர் திருத்துவதற்கும் இது பயன்படும்.

விளையாடுவதற்கென தனி இடம்
இயலுமானால் குழந்தைகளுக்கென்று தனியான விளையாட்டுத் திடல் ஒன்றை பள்ளிவாசலை ஒட்டி ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. அந்த விளையாட்டு மைதானங்கள் புற்களால் அமைக்கப்பட்டிருப்பதும் மிகவும் நல்லது.

பொம்மைகள்
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ற தனியான அறையை ஒதுக்கி அந்த அறையில் குழந்தைகளுக்கென அதிகமான பொம்மைகளை விளையாடத் தருவதும் நல்லது. இந்த பொம்மைகளை அந்தப் பள்ளிவாசலுக்கு வரும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் இனாமாகப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்த பொம்மை விளையாட்டு அரங்கத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவர்களது தாய்மார்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆண்களுக்கான நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்யலாம். இதன் மூலம் சிறு குழந்தைகளை தாய்மார்கள் கவனித்துக் கொள்வதோடு, அவர்களும் உரையை செவிமடுத்துக் கொள்ள இயலும்.

தயாரிப்புகளுடம் வருவது
பள்ளிவாசல்களில் மேற்கண்ட வசதிகள் இல்லை எனில், குழந்தைகளின் கவனத்தை விளையாட்டில் செலுத்துவதற்காக பள்ளிவாசலுக்கு வரும் பொழுதே அவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்களையும் உடன் எடுத்து வருவது நல்லது. அதன் மூலம் குழந்தைகள் ஒரு இறுக்கான சூழ்நிலையில் இல்லாமல் அவர்கள் தாராளமாக மகிழ்ச்சியுடன் தங்களது நேரத்தைக் கழிக்க ஏதுவாக இருக்கும்.

படத்திற்கு வண்ணம் தீட்டுதல், க்ராயான்ஸ் போன்ற விளையாட்டுச் சாதனங்கள் ஆகியவற்றுடன் குழந்தைகளுக்கான திட உணவு, ஜுஸ் போன்றவற்றையும் கொண்டு வருவதும் நல்லது.
அறிவுரைகள்

பள்ளிவாசலுக்குக் கிளம்பு முன் தங்களது குழந்தைகளின் குணநலன்களை நன்கு அறிந்திருக்கும் பெற்றோர்கள் நாம் எங்கு போகின்றோம். அங்கு என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன என்பதையும், அந்த நிகழ்ச்சிகளின் நாம் அடையக் கூடிய பயன்கள் என்ன என்பதையும் அவர்களுக்குப் புரியும் விதத்தில் விளக்கி, அந்த இடங்களில் நடந்து கொள்ளக் கூடிய முறைகள் பற்றியும் அவர்களுக்கு சிறு விளக்கமளிப்பது நல்லது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் உரைகள் நடக்கக் கூடிய அறைகளில் ஓடி விளையாடுவதையும், இன்னும் தொந்தரவுகள் கொடுப்பதையும் தடுத்துக் கொள்ள முடியும்.

மேலும், அந்தக் குழந்தைகளின் வயது, அறிவு வளர்ச்சி போன்ற அம்சங்களைக் கவனித்து, அதற்குத் தகுந்த அறிவுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

கண்காணிப்பு
பள்ளிவாசல் என்பது குழந்தைகளுக்குச் சேவை செய்யக் கூடிய இடம் அல்ல என்பதையும், அங்கு குழந்தைகள் தங்கள் இஷ்டப் பிரகாரம் சுற்றித் திரியவோ, ஓடிப் பிடித்து விளையாடவோ இயலாது என்பதையும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிவாசல்களில் மட்டுமல்ல எந்த பொது இடத்திலும் பிள்ளைகள் தங்களது இஷ்டப் பிரகாரம் சுற்றித் திரிவது ஆபத்தானது. அவர்களது சுதந்திரமாக எதிலாவது ஏறிக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருக்கும் சமயத்தில், ஏதாவது காயம் அல்லது இரத்தம் வெளிப்படுவது அல்லது இரண்டு குழந்தைகள் சண்டை பிடித்துக் கொள்வதால் மண்டை உடைவது போன்ற காயங்கள் ஏற்பட்டால் மொத்த நிகழ்ச்சியும் பாதிக்கப்படும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு, தங்களது குழந்தைகளின் தன்மைக்கேற்றவாறு அறிவுரைகள், மற்றும் கண்காணிப்புடனும் இருக்க வேண்டும்.

இறைவன் குழந்தைகளை பெற்றோர்களிடம் அமானிதமாக அல்லாஹ் ஒப்படைத்திருக்கின்றான் என்பதையும், பொது இடங்களில் மட்டுமல்ல, தங்களது சொந்த வீட்டிலும் கூட அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில் பெற்றோர்கள் தவறி விடக் கூடாது.

சகிப்புத் தன்மை
பிள்ளைகள் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அங்குமிங்கும் ஓடுவது சப்தம் போடுவது என்பது சகித்துக் கொள்ள முடியாததது தான். இருப்பினும் இது குழந்தைகளுக்கே உரிய குணாதிசயங்கள் என்பதை பெரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அது மாதிரி சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் சற்று சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகள் அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டால், அழக் கூட ஆரம்பித்து விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.

நான் தொழுகைக்காக நின்று விட்டால், அதனை நீட்டிக்கவே விரும்புகின்றேன், ஆனால் குழந்தைகளின் அழு குரலைக் கேட்டு விட்டால், தொழுகையைச் சுருக்கிக் கொள்ள விரும்புகின்றேன். இதன் மூலம் (தொழுகையை நீட்டிப்பதன் மூலம்) அந்தத் தாய்க்கு நான் சிரமம் கொடுப்பதை விரும்பவில்லை என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் வந்த பொழுது பனு அப்துல் முத்தலிப் கோத்திரத்துச் சிறார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். அந்தக் குழந்தைகளில் ஒன்றை தன்னுடைய முதுகிலும், ஒன்றைக் கையிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூக்கிக் கொண்டார்கள். (புகாரீ)

எனவே, இது மாதிரியான சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் சற்று சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வது, பெற்றோர்களுக்கு முகச் சுளிப்பையும், சங்கடத்தையும் தராது என்பது மட்டுமல்ல, நிகழ்ச்சியும் கூட தன்னுடைய நோக்கத்தை எட்ட இயலும்.

நீங்கள் சங்கடத்தை வெளிப்படுத்துவீர்களானால், மறுமுறை அந்தக் குடும்பம் பள்ளிவாசலுக்கு வருவது கூட இந்தக் குழந்தைகளின் சேட்டைகளின் முன்னிட்டு தடைபடவும் கூடும். எனவே, சமுதாய நலன் கருதி இது விஷயத்தில் மிகவும் பொறுப்புடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டியது, சமுதாய மறுமலர்ச்சிக்குச் சிறந்ததாகும்.

புதன், 15 ஜூன், 2011

குழந்தைகள் பொய் பேசும் பொழுது

பொய் என்பது வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தருவதைக் குறிக்கும். ஒரு மனிதன் உண்மையல்லாத ஒன்றைக் கூறும் பொழுது, தான் கூறுவதை அவன் உண்மை என்று நம்புகின்றான் எனில், ஆனால் இங்கு அவன் ஒரு தவறைச் செய்து விடுகின்றான். இந்த விஷயத்தில் அவன் தவறான வழிகாட்டப்பட்டு விட்டான் அல்லது தவறான தகவல்களைப் பெற்று விட்டான் என்றே பொருள் கொள்ள வேண்டும், அவன் பொய்யானதைக் கூறவில்லை என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதிகமான குழந்தைகள் தங்களது நினைவுப் பகுதிகளில் எதனை நினைக்கின்றார்களோ அதனை அவர்கள் பேச ஆரம்பித்து விடுகின்றார்கள். அவர்கள் எதனை நினைத்தார்களோ அதனை அங்க அசைவுகளோடு, அதனை உண்மையிலேயே நடந்தவாறு அதனை விவரிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். விரிவான நம்முடைய பார்வைக்கு இவைகள் பொய்கள் அல்ல. ஒரு குழந்தையானது தன்னால் எதனையும் சரி எது அல்லது தவறு எது என்பதையும் இன்னும் எது கற்பனையானது அல்லது எது உண்மையானது எனப் பிரித்தறியக் கூடிய தன்மையைப் பெற்றிருக்கா விட்டாலும், அதற்கென ஒரு பார்வை, கனவு, எதிர்பார்ப்பு மற்றும் விருப்பு ஆகியவற்றைப் பெற்றிருக்கும். இதனடிப்படையில் அவை பேசக் கூடியவைகள் பொய்கள் என்பதை விட, பேசக் கூடியவர்கள் குழந்தைகள் என்றே கணிக்க வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமே இருக்கக் கூடிய இந்தத் தனித்துவமான இந்தக் குணங்கள், அவர்களுடைய வாழ்வில் ஒரு அங்கம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இருப்பினும், சில குழந்தைகள் உண்மைகளை மறைத்து விட்டு, வேண்டுமென்றே பொய்யைக் கூறக் கூடியவைகளாக இருக்கின்றன. இது பலவித காரணங்கள் அவைகளிடம் உருவாகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவையாவன : பயம், ஆளுமை, பிறருடைய கவனத்தைத் தன் பால் ஈர்த்தல், அல்லது விளையாட்டுக்காக.

பயம் அல்லது ஆளுமை
ஒரு குழந்தை பயம் கொள்ளும் பொழுது அல்லது தன்னிடம் எந்த சக்தியும் இல்லை என்று உணரும் பொழுது, மற்றவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் தரக் கூடிய தண்டனைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தை நினைக்கும் பொழுது, இதற்காகவே பொய் சொல்ல ஆரம்பிக்கின்றன. இது குழந்தைகளை மிகவும் அதிகமாக அடக்கி ஆளும் குடும்பங்களில் அதிகம் காணப்படக் கூடியதொன்றாகும். ஒரு குழந்தையானது தன்னுடைய குடும்பத்தவர்கள் மற்றும் சுற்றத்தவர்களிடமிருந்து பாராட்டுதல் மற்றும் அனுமதி ஆகியவற்றைப் பெற இயலாத பொழுது, இவற்றைக் கடந்து தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்த அந்தக் குழந்தை முயலும் பொழுது, அதற்காகவே பொய்யைப் பேச ஆரம்பிக்கின்றது. இவ்வாறு ஆரம்பிக்கின்ற இந்தப் பொய் பேசும் பழக்கம் தான், அது வளர்ந்து ஆளான பிறகும் தொடர ஆரம்பிக்கின்றது, மேலும் இது அதனிடம் பிறவிக் குணமாகவும் ஆகி விடுகின்றது. எனவே, குழந்தை பேசக் கூடிய பொய்யைத் தரம் பிரித்து, அது எதற்காகப் பொய் பேசுகின்றது என்பதை நாம் அதன் இளமைப் பருவத்திலேயே அறிந்து, அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, தவறு எங்கிருக்கின்றது என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையைச் செய்ய வேண்டும். சில வேளைகளில் இந்தத் தவறு பெற்றோர் மற்றும் சுற்றுப் புறத் தாக்கங்களினால் கூட ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கவன ஈர்ப்பு
தன்னால் எதுவும் இயலாத பொழுது, பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே சில வேளைகளில் குழந்தைகள் பொய் பேச ஆரம்பிக்கின்றன. சில வேளைகளில் தன் மீது பிறரது கவனம் விழாத பொழுது, தான் எதைச் செய்தால் பிறரது கவனம் தன் மீது திரும்பும் என்று அது ஆராய்கின்ற பொழுது, அதற்காகப் பொய்யைப் பேச ஆரம்பிக்கின்றது. அந்தப் பொய்யை பிறர் நம்பும் விதத்தில் அது வெளிப்படுத்துகின்றது. இது அநேகமாக சமுதாயத்தில் நிலவும் சூழ்நிலைத் தாக்கத்தால் உண்டாகின்றது. எந்தக் குழந்தையும் தான் ஒரு ஏழையின் ஓட்டு வீட்டிலிருந்து, சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து வருவதாக ஒப்புக் கொள்வதில்லை. இத்தகைய புறச் சூழ்நிலைத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களை சமுதாயத்தில் சம அந்தஸ்துடையவர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்ற பொழுது, பொய்யைத் தேர்ந்தெடுக்கின்றன. இன்னும் சில காரணங்கள் அதற்கு காரணமாக இருந்த போதிலும், குழந்தைகளின் குணாதிசயங்களை மாற்றுவதில், சமூகச் சூழ்நிலைத் தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன என்பதை நாம் மறுக்கவியலாது.

பொழுது போக்கிற்காக
இன்னும் சில குழந்தைகள் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்வதற்கும் இன்னும் பிறரை மகிழ்விப்பதற்காகவும் சில ஜோக்குகளை வெளிப்படுத்துவதுண்டு. உதாரணமாக, உங்களுடைய குளிர்சாதனப் பெட்டி ஓடுகின்றதா? என ஒருவர் கேட்டால், அந்தக் குழந்தை அது ஓடி விடுவதற்குள் சென்று போய்ப் பிடியுங்கள் என்று ஜோக் அடிப்பதைப் பார்க்கலாம். இன்றைய நவீன உலகத்தில் ஜோக்குகளும், ஹாஸ்யமானவைகளும் ஒரே மாதிரி, இயற்கையாக இல்லாமல் செயற்கையாக இருப்பதைக் காணலாம். ஆனால் சில நடைமுறைகளில் எதார்த்தமாக இது போல வரக் கூடிய ஜோக்குகள், வாழ்க்கையின் சில கஷ்டமான தருணங்களில் அந்தக் குழந்தைக்குக் கை கொடுக்கக் கூடும். இன்றைய அவசர உலகில், பல்வேறு சமயங்களில் ஏற்படக் கூடிய மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு இந்த மாதிரியான யாருக்கும் பாதிப்பில்லாத ஜோக்குகள், அந்தக் குழந்தையின் மன இறுக்கத்தைக் குறைத்து, ஒரே நேரத்தில் பல அலுவல்களைக் கவனிக்கக் கூடிய சக்தியை வழங்கக் கூடியவைகளாக இருக்கின்றன.

பொய் பேசும் குழந்தைகளைத் திருத்த சில யோசனைகள்

உங்கள் குழந்தைகளிடம் கடினத்தைக் காட்டாதீர்கள்
நடுநிலமையான போக்கு சிறந்தது. நீங்கள் குழந்தைகளிடம் அதிக கண்டிப்புக் காட்டுவீர்கள் என்றால், அந்தக் கண்டிப்பு அந்தக் குழ்நதையின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது, இவை அந்தக் குழந்தையின் ஒழுக்கப் பண்பாடுகளிலும் பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதையும், இத்தகைய மனநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தான் முதலில் பொய்யைப் பேச ஆரம்பிக்கின்றன என்பதையும் மறந்து விடாதீர்கள்.

பொய் பேசக் கூடிய குழந்தைகளை அதிகமாக விமர்சிக்காதீர்கள்
ஒரு குழந்தை பொய் பேசி விட்டால், அதனை எப்பொழுதும் பொய்யன் என்று அழைக்காதீர்கள். பெற்றோர்களாகிய உங்களது கடமை என்னவென்றால், அந்தத் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கின்றது என்று கண்டுபிடித்து, அந்தக் குழந்தை செய்யக் கூடிய அந்தச் செயல் சரியா அல்லது தவறா என்று அதற்கு பிரித்தறிவிப்பது ஒன்றே, அவர்களைச் சீர்திருத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும். இதன் மூலம் அந்தக் குழந்தை தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்கின்றது என்று சொன்னால், நீங்கள் அந்தக் குழந்தையிடமிருந்து பொறுப்பானதொன்றை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதையும், அந்தப் பொறுப்புடனேயே நாம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அது உணர்ந்து கொள்ளும். இது தான் அந்தக் குழந்தை பொய் பேசுவதனின்றும் தடுக்கக் கூடிய, நீங்கள் செய்கின்ற மிகப் பெரிய செயலாகும். இது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமிடையே இருக்கக் கூடிய பரஸ்பர புரிந்துணர்வு இல்லாததன் காரணமாகத் தான் இத்தகைய நிலைகள் ஏற்பட முடியும்.

ஒரு குழந்தை பொய் பேசுகின்றது என்று நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களென்றால், உங்களிடம் அந்தப் பொய்யை மறைக்க முடியாது, அதனை நீங்கள் அறிவீர்கள் என்பதை அந்;தக் குழந்தைக்கு நீங்கள் உணர்த்தி விடுங்கள், அதன் மூலம் நடந்த அந்தத் தவறு எதனால் ஏற்பட்டது என்பதனை அந்தக் குழந்தையாகவே வலிய வந்து உங்களிடம் விளக்கிட வேண்டிய வழிமுறையை அதற்குக் காண்பியுங்கள். இதன் மூலம் நம்முடைய நம்பகத் தன்மை பிறரிடம் பாதிக்கின்றதே என்று அந்தக் குழந்தை அறிந்து கொண்டு, வெட்கப்பட்டு, இனி நாம் உண்மையைத் தான் கூற வேண்டும் என்ற மன உந்துதலைப் பெற்று விடும்.

செய்த தவறுக்குத் தண்டனையா அல்லது மன்னிப்பா?
அந்தத் தவறைச் சுட்டிக் காட்டு முன் அந்தக் குழந்தையிடம் உள்ள நல்ல பழக்கங்களைப் புகழ்ந்து கூறி, இப்படிப்பட்ட நீ இத்தனை பெரிய காரியத்தைச் செய்யலாமா? என்று எடுத்துக் கூறுங்கள். இது பலரால் செய்ய முடியாதது தான். நீங்கள் அதனிடம் கடுமையைக் காட்டுவீர்கள் என்றால், அது தன்னுடைய தவறை மறைக்கத் தான் செய்யுமே ஒழிய, வெளிப்படுத்த முயலாது. ஏனெனில் வெளிப்படுத்தினால் எங்கே நாம் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவோமோ? என்ற மனநிலைப் பாதிப்புத் தான் அதற்குக் காரணமாகும். இதுவல்லாமல், அதனுடைய நல்லபழக்கங்களை எடுத்துக் கூறி, அது செய்திருக்கும் தவறின் காரணமாக அதனுடைய மதிப்பு எந்தளவு தாழ்ந்து போயிருக்கின்றது, அதன் மீது நீங்கள் வைத்திருந்த நம்பகத் தன்மை எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை எடுத்துக் கூறும் பொழுது, நம்முடைய மதிப்பும், மரியாதையும் குறைகிறதே என்று எண்ணி வருந்தக் கூடிய அந்தக் குழந்தை, பின் வரும் நாட்களில் அத்தகைய தவறு நிகழாமல் இருக்க முயற்சி செய்யக் கூடியதாக மாறி விடும். இத்தகைய மன்னிக்கும் பேர்க்கே உங்களுக்கும் குழந்தைக்கும் மிகச் சிறந்த வருங்காலத்தை ஏற்படுத்தித் தரக் கூடியதாக இருக்கும். இறைவன் நாடினால்..!

நீங்கள் முன்னுதாரணமாகத் திகழுங்கள்
உங்கள் குழந்தை பொய் பேசாத குழந்தையாக இருக்க வேண்டுமென்றால், அதற்குரிய முன்னுதாரணமாக நீங்கள் திகழுங்கள். நீங்கள் எப்பொழுதும் பொய் பேசாதவர்களாகத் திகழுங்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றது :

ஒரு பெண் தன்னுடைய குழந்தையை, உனக்கு ஒரு பொருள் வைத்திருக்கின்றேன், வா என்று அழைக்கக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்தக் குழந்தை உங்களிடம் வந்தால் நீங்கள் என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டு விட்டு, நீங்கள் ஒன்றைத் தருவதாக உங்கள் குழந்தையிடம் வாக்களித்து விட்டு, அதற்குத் தருவதாக வாக்களித்ததை தரவில்லை என்று சொன்னால், நீங்கள் ஒரு பொய்யைக் கூறி, ஒரு பாவத்தைச் செய்து விட்டீர்கள் என்று கூறினார்கள்.

ஒரு கடன் காரரோ அல்லது வேறு எதன் நிமித்தமோ ஒருவர் நம்மைத் தேடி வருகின்றார் எனில், நம்முடைய குழந்தைகளை அழைத்து, நான் வீட்டில் இல்லை எனச் சொல் என்று நம் குழந்தைகளிடமே நாம் கூறி, அவர்களை வலிய பொய் பேசக் கூடியவர்களாக, பொய் பேசுவதால் ஏற்படும் அவமானத்திற்குப் பயப்படாதவர்களாக நாமே ஆக்கி விடக் கூடிய சூழ்நிலையை பல பெற்றோர்கள் செய்வதுண்டு. இது உண்மையான முஸ்லிமிற்கு அழகானதல்ல. முன்மாதிரியாகக் கொள்ளக் கூடியதுமல்ல

உங்களது குழந்தைகளை வளர்ப்பதற்குரிய மிகச் சிறந்த சாதனம் எதுவெனில், நீங்கள் அவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழுங்கள். அது ஒன்றே உங்களுடைய முதுமைக் காலத்தையும், அவர்களது வருங்காலத்தையும், இஸ்லாத்தையும் சிறப்பாக்க வல்லது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

சனி, 11 ஜூன், 2011

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) கடற்கரைத் தெருவைச் சேர்ந்த O.K.M. நெய்னா முகம்மது அவர்கள் 09/06/2011 அன்று காலமாகிவிட்டார்கள்


إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ " நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' அன்னாரின் ஜனாஸா அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


பத்குதீன் அவர்களின் தகப்பனாரின் மறைவின் காரணமாக வாடும் நண்பருக்கும் குடும்பத்தாருக்கும் இறைவன் பொருமையையும் மண அமைதியையும் இறைவன் கொடுக்கவேண்டும் என இறைவனைப் பிறார்திக்கிறேன்


எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ் என்னும் மேலான சுவர்கத்தைக் கொடுப்பானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் கடற்கரைத் தெருவை O.K.. நெய்னா முகம்மதுஅவர்கள் 09/06/2011 அன்று காலமாகிவிட்டார்கள் ِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونநிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' அன்னாரின் ஜனாஸா அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதன், 8 ஜூன், 2011

உங்களின் ஒவ்வொரு நாளும்

(பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும்.. ..!)
நீங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வேண்டிக் கழிக்கின்ற ஒவ்வொரு விநாடியும், இறைவணக்கமாகவே செய்கின்ற வணக்கமாகக் கணக்கிடப்படுகின்றது. அத்தகைய இறைவணக்கங்களில் தொடர்ச்சியாக, விடாது செய்யக் கூடிய நல்லமல்கள் தான் மிகவும் சிறப்பு வாய்தவையாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் முஃமின்களின் தாயாருமாகிய ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : செய்யக் கூடிய அமல்களில் சிறியதாக இருந்தாலும், இறைவன் மிகவும் விரும்பக் கூடியது தொடர்ச்சியாக செய்யக் கூடிய அமல்களாகும். (புகாரி, முஸ்லிம்).


இதன் அர்த்தம் என்னவென்றால், மிகவும் பிரமிக்கத்தக்க அளவில் ஒரு அமலைச் செய்து விட வேண்டும் என்பதல்ல, மாறாக, நாம் செய்யக் கூடிய அமல்கள் சிறியதாக இருந்தாலும், அதனைச் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும் என்பதேயாகும். இவற்றை நம்முடைய அன்றாட வாழ்வில் விடாது கடைபிடிக்க வேண்டும் என்பதும் அவசியமாகும். அதாவது இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்யக் கூடியவற்றில் தொழுகையானது ஒன்றாக இருக்கின்றது எனினும், அதனுடன் திருமறையை வாசித்தல், அதன் பொருளை உணர்தல், திக்ர்-கள், துஆக்கள் இன்னும் நற்செயல்கள் ஆகியவைகளும் நாம் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய நற்காரியங்களில் அடங்கக் கூடியவைகளாகும். இவை யாவும் ஒரு இறையடியானிடத்தில் நல்லதொரு மாற்றத்தை, மன அமைதியை, உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இவ்வாறு நமது அன்றாட வாழ்வில், நாம் தொடர்ச்சியாகச் செய்யக் கூடிய நற்செயல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

பெண்களுக்குத் தேவையான பல்வேறு விசயங்களைப் பற்றி நாம் கொடுத்து வருகின்றோம். இறைவனுடைய உதவியால் இது பெண்களுக்கு மட்டுமல்ல ஒரு குடும்பத்திற்குத் தேவையான ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியது.

அதிகாலைப் பொழுது :

இருள் சூழ்ந்திருக்கும் நடுஇரவில் தஹஜ்ஜுத் தொழ எழுந்திருங்கள் :

கடமையாக்கப்பட்ட தொழுகைப் பிறகு, மிகவும் சிறப்பான (நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடிய) தொழுகை எதுவெனில் தஹஜ்ஜுத் என்ற இரவுத் தொழுகையாகும் என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமது, முஸ்லிம்).

இந்தத் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய மிகச் சிறந்த நேரம் எதுவெனில், இரவின் கடைசிப் பாகமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவின் கடைசிப் பகுதி எஞ்சியிருக்கும் பொழுது, நம்முடைய இரட்சகனான இறைவன், புகழுக்குரியவன் பூமியின் மிகச் சமீபமாக வந்து, என்னிடம் வேண்டுபவர்கள் யாரேனும் இருக்கின்றார்களா, நான் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி வைக்கின்றேன், என்று கூறுகின்றான். மேலும், என்னிடம் இறைஞ்சுபவர் யாரோ அவருடைய இறைஞ்சுதலை நான் நிறைவேற்றி வைக்கின்றேன்? என்றும், யார் என்னிடம் பாவமன்னிப்புத் தேடுகின்றார்களோ, அவருடைய பாவங்களை மன்னிக்கின்றேன்? என்றும் இறைவன் கூறுகின்றான். (புகாரி, முஸ்லிம்).

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த இரவுத் தொழுகையை, கணவனும், மனைவியும் இணைந்து தொழுவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு கணவன் இரவில் எழுந்து தன்னுடைய மனைவியையும் எழுப்பச் செய்து, இருவரும் இரண்டு ரக்அத் தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுவார்களானால், இறைவனை மிகச் சிறப்பாக ஞாபகம் செய்தவர்கள் பட்டியலில் அவர்களது பெயர் எழுதப்படும். (அபூதாவூது)

இந்த இரவுத் தொழுகையைத் தொழுது விட்டு ஒருவர் பஜ்ர் நேரத் தொழுகை வரை தூங்கவும் செய்யலாம்

காலையில் எழுந்திருக்கும் பொழுது :

நீங்கள் அதிகாலையில் உங்கள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இறைவனை இவ்வாறு புகழ்ந்து கொள்ளுங்கள்

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஃத மா அமாத்தனா வ இலைஹின்னுஸுர்
الحمد لله الذي احيانا بعد ما اماتنا واليه النشور
பொருள் : எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய அல்லாஹ்வுக்கே! என்னை மரணிக்கச் செய்த பின், அவனே என்னை உயிர்ப்பிக்கச் செய்தான், அவனிடமே என்னுடைய மீட்சியும் இருக்கின்றது (புகாரி).

இன்னுமொரு அறிவிப்பில்,
அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ ஃபீ பதனீ வரத்த அலய்ய ரூஹி வஅதின லீ பிதிக்ரிஹ்.
الحمد لله الذي عافاني في بدني ورد علي روحي وأذن لي بذكره
பொருள் : எனது உயிரைத் திருப்பித் தந்து, எனது உடலுக்கு சுகத்தை வழங்கி, அவனையே நினைவு கூர அனுமதியளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (திர்மிதி).

உங்கள் வீட்டினருக்குச் ஸலாம் சொல்லுங்கள் :

இன்னும் உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களை எழுப்பியவுடன், அவர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களது அறைகளுக்குள் நுழையும் பொழுது, அவர்களுக்கு ஸலாம் சொல்வதும் மிகச் சிறப்பானதாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்னருமை மகனே (அனஸ் (ரலி) அவர்களை நோக்கி), உனது குடும்பத்தினர்கள் இருக்கும் பகுதியில் நீ நுழையும் பொழுது, அவர்களுக்கு ஸலாம் சொல்வீராக. (அந்த ஸலாமானது) உனக்கும் உன்னுடைய குடும்பத்தவர்களுக்கும் அசீர்வாதமாக இருக்கின்றது. (திர்மிதி).

ஒளுச் செய்தல், அல்லது குளிப்புக் கடமையை நிறைவேற்றுதல் : (மாதவிடாய் மற்றும் குழந்தைப் பேற்றுக்குப் பின் உள்ள இரத்தப் போக்கு உள்ளவர்களைத் தவிர)

குளியலறை அல்லது கழிவறைக்குள் நுழைவதற்கு முன்பாக, உங்களது இடது பாதங்களை வைத்து உள்ளே நுழையுங்கள். அவ்வாறு நுழைவதற்கு முன் கீழ்கண்ட துஅவை ஓதிக் கொள்ளுங்கள் :

அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் குபுதி வல் கபாஇதீ (அபூதாவூது).

اللهم اني اعوذ بك من الخبث والخبائث

பொருள் : அல்லாஹ்வே! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

புதன், 1 ஜூன், 2011

இறையச்சமுள்ள பிள்ளைகளைப் பெற

நீங்கள் கர்ப்பிணியாக இருக்கின்றீர்களா? நீங்கள் கர்ப்பிணியாக உள்ள காலத்தில் அதிக அளவில் நல்லமல்களில் ஈடுபடுங்கள். அதன் பயனாக அல்லாஹ் உங்களுக்கு இறையச்சமுள்ள மழலையை வழங்குவான். உங்களது நல்லமல்கள் மூலமாக கருவிலே இருக்கும் உங்களது குழந்தைகளை ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

உங்களது பர்ளான தொழுகைகளுடன், சுன்னத்தான, நபிலான வணக்கங்களை அதிகமதிகம் சேர்த்துத் தொழுது கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு உள அமைதி கிடைப்பதுடன், உங்களது உடலுக்கும் நல்லதொரு உடற்பயிற்சியாகவும் இருப்பதும், உங்களது பிரசவம் எளிதாகவும் இருக்கும்.

மேலும் ஊட்டச்சத்து நிறைந்த சுத்தமான உணவுகளை நீங்கள் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றுக் கொள்ளலாம். குழந்தை பிறந்த பின் அவர்களுக்கு கருத்தாழமிக்க, ஸாலிஹான பெயர்களைச் சூட்டி அழகுற அழையுங்கள். அன்போடு தாய்ப்பாலைப் புகட்டி அணைத்து அரவணையுங்கள். குழந்தையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அவர்களோடு விளையாட உங்கள் வேலைகளில் இருந்து சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அதிகளவான அரபுச் சொற்களையும் குர்ஆன் ஆயத்துக்களையும் நிறைய கேட்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுங்கள். இஸ்லாமிய வரலாறுகளை இனிமையான முறையில் சொல்லிக் கொடுங்கள்.

உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்லும் காலம் ஏற்படும் போது அவர்களுக்கு மார்க்கக் கல்வியோடு ஏனைய கல்விகளையும் திறம்பட கற்றுக் கொடுங்கள். நீங்கள் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் போது பிள்ளைகைள அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் அவர்கள் உங்களைப் பின்பற்ற முயல்வர். அவர்களின் ஓய்வு நேரங்களை இஸ்லாமிய புத்தகங்களை வாசிக்க ஒதுக்குங்கள். அவர்களது நாள்தோறும் செயல்படுவதற்கான நேர அட்டவணையை தயார்படுத்திக் கொடுங்கள். குடும்பத்தோடு ஒன்றிணையவும் நல்ல நண்பர்களோடு பழகவும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து வாருங்கள்.

பெற்றோர்கள் தங்களது வீடுகளுக்குள் நுழையும் ஒவ்வொரு தடவையும், வீட்டில் உள்ளோருக்கு ஸலாம் கூறி நுழையுங்கள். குறிப்பாக, ஆண்கள் தங்களது ஐங்காலக் கடமைதனை முடித்து விட்டு வீட்டுக்குள் நுழையும் பொழுது, வீட்டில் உள்ளவர்களுக்கு தான் தொழுகையை முடித்து விட்டு வருகின்றேன் என்பதனை உணர்த்துமுகமாக நடந்து கொள்ளுங்கள். அதன் மூலம் வீட்டில் உள்ள மனைவியும், இன்னும் பருவ வயதை எட்டாத பிள்ளைகளும் நீங்கள் தொழுது விட்டு வருகின்றீர்கள் என்ற உணர்வைப் பெற்று, அவர்களும் தொழுகைகாகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு, உள ரீதியான பயிற்சியை உங்களது அந்தப் பழக்கம் அவர்களுக்கு வழங்கும்.

எதிர்காலத்தில் சமூகத்தில் இஸ்லாமிய அறிவு நிறைந்த உயர் அந்தஸ்தில் உள்ள மனிதனாக உங்கள் பிள்ளை வர பாடுபடுங்கள். குறைந்தளவு உங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக் கூடிய ஒரு குழந்தையை உருவாக்குங்கள்.