துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

சனி, 25 பிப்ரவரி, 2012

நாவின் விபரீதம்

அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சிசை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றுதான் நாவும். நாவைக் கொண்டு சுவர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.

மனிதனின் உயர்வுக்கும்;, தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை, சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ''சிறப்பிடத்தைப்'' பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ''மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்'' பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நாவைப்பற்றி திருக்குர்ஆனும், நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.

எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப்பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும். (17:36)

ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50:18)

நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்;மிதி)

அரைகுறை ஞானமுள்ள எந்த விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தக்கூடாது! ஏனெனில் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும்.

நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.

நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

1. புறம் பேசுதல்
மனிதர்கள் கூட்டமாகக் கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலரும் அடுத்தவரைப்பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.

சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம் இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அத்தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? எனத் தோழர்களிடம் வினவினார்கள். அதற்குத் தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப்பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (முஸ்லிம்)

புறம் பேசுவது தனது சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.

மேலும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். (49:12)

புறம் பேசுதலைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும் என்றார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களாலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை, கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும், நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே இவர்கள் யார்? என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

இப்படிப்பட்ட பெரும் பாவமான புறம் பேசுதலை நாமும் தவிர்ந்து கொண்டு, அவை பேசப்படும் இடத்தை விட்டு விலகி விடவும் வேண்டும்.

(முஃமீன்கள்) வீணானதைச் செவியுற்றால் அதைப்புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள். (28:55)

(ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். (23:3)

புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1. முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ''எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப்பிடித்துக் கொள்ளத்தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ''எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி! பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இதுதான் என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி). ஆதாரம் : திர்மிதி

2. அவதூறு
நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு, கடுமையான வேதனையும் உண்டு. (24:23)

3. கோள்
''ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை'' சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப் பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்லாமல் சுவர்க்கம் செல்லவே முடியாது. கப்ரில் கடுமையான வேதனையுமுண்டு என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது.

குறை சொல்லி புறம் பேசித்திரியும், ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:1)

கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தக் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள் அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. ஏன்றாலும், அது பெரும் பாவம்தான். ஆவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றொருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

4. பொய் சாட்சி
அவர்கள் (அல்லாஹ்வின் அடியார்கள்) பொய் சாட்சி சொல்லமாட்டார்கள். மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (25:72)

பெரும் பாவங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ''அல்லாஹ்விற்கு இணைவைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, பொய் சாட்சி சொல்லுவது'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

5. தர்மம் செய்ததை சொல்லிக்காட்டுதல்
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழாக்கி விடாதீர்கள். (2:264)

மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு, கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன், (தனது) கீழாடையை (பெருமைக்காக, கரண்டை காலுக்கு கீழ்) தொங்க விடுபவன், (தான் செய்த தர்மத்தை) சொல்லிக்காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள். (முஸ்லிம்)

6. சபித்தல்
ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அபூதாவூத்)

ஒருவர் இன்னொருவரை ''பாவி'' என்றோ, ''காஃபிர்'' என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

7. இறந்தவர்களை ஏசக்கூடாது
இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதை பெற்றுக் கொண்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

8. பக்கத்து வீட்டுக்காரருக்கு துன்பம் தருதல்
யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும், இல்லையெனில் மௌனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

9. காலத்தைத் திட்டுதல்
காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள், காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும், பகலையும் மாறி வரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இதுவரை நாம் நாவினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றைப் பற்றிய திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் எச்சரிக்கைகளையும் கண்டோம்.

சொர்க்கம் செல்வதற்கு நாவு தடையாகிறது என்பதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் நாவை சரியாக பயன்படுத்துவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்.

எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பெற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
இதுவரை நாவின் விபரீதத்தைப் பற்றித் தெரிந்தோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.

நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம்;, குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகiளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

1 . குர்ஆன் ஓதுதல்·
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ''அலிஃப்,லாம்,மீம் என்பது ஓர் எழுத்து'' என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

2 . தஸ்பீஹ் செய்தல்
இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3 . நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்
(விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (3:110)

நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதைத் தெரிந்தோம்.

ஆகவே நரகம் செல்லக்கூடிய (சொல்) செயல்களிலிருந்து நம் நாவைப்பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவம்

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ


அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை. அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்;. சாந்தியளிப்பவன் தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (59:23)


மேலே கண்ட வசனத்தில் அஸ்ஸலாம் என்ற சொல்லானது, இறைவனது திருப்பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது. எனவே, இங்கு அந்த அஸ்ஸலாம் என்ற சொல்லினுடைய அர்த்தம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி நாம் இங்கு காணவிருக்கின்றோம்.


இஸ்லாம் இந்த மண்ணில் தோன்றுவதற்கு முன்னாள், அந்த பாலைப் பெருவெளியில் வாழ்ந்த அந்த அரபுக்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் (ஸலாம்) கூறும் போது, ஹய்யாக்கல்லாஹ் - இறைவன் உங்களுக்கு ஆயுளை நீட்டித்தருள்வானாக! என்று கூறுவார்களாம். ஆனால் இஸ்லாம் அதனை விட வித்தியாசமான முறையில், அஸ்ஸலாமு அலைக்கும்! என்ற வார்த்தையை முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றது.


இதனுடைய அர்த்தம் என்னவென்றால், உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! இதனை இன்னுமொரு வார்த்தையில் சொல்வதென்றால், அனைத்து வித கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை விட்டும் நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்களாக!


திருமறைக் குர்ஆன் விரிவுரையாளராகிய இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன்னுடைய அஹ்காமுல் குர்ஆனில், அஸ்ஸலாம் என்பது அல்லாஹ்வினுடைய ஒரு பண்புப் பெயராகவும் இருக்கின்றது, (அல்லாஹு ரகீபுன் அலைக்கும்) அதாவது, அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலனாகவும் இருக்கின்றான்.


இன்றைக்கு உலக மொழிகளில் வழக்கில் இருக்கின்ற அனைத்து வித முகமன்களிலும், இஸ்லாம் கற்றுக் கொடுத்திருக்கின்ற அஸ்ஸலாமு அலைக்கும் என்ற முகமன் மிகவும் வித்தியாசமானதொன்றாக இருந்து கொண்டிருக்கின்றது.


மற்ற சமுதாயங்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவதற்காக உபயோக்கின்ற வார்த்தைகளை விட, இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற அந்த வாசகங்கள் தர்க்கம் மற்றும் காரண காரிய அடிப்படையில் மிகவும் சிறந்ததொரு பிரார்த்தனையாக அமைந்திருக்கின்றது. அந்தப் பிரார்த்தனையின் மூலமாக, மற்றவருக்கு அன்பை வெளிப்படுத்திக் காட்டுவதோடு, அவரைச் சூழ்ந்திருக்கும் அனைத்து வித துன்பங்கள், துயரங்கள், இழப்புகள் ஆகியவற்றிலிருந்தும் அவரைப் பாதுகாத்தருளும்படி, தன்னைப் படைத்த இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்றார் என்பதைக் குறிக்கின்றது. அன்றைய அரபுக்கள் மாற்றாருக்கு வாழ்வை மட்டும் வழங்குமாறு தான் பிரார்த்தித்தார்கள், ஆனால் இஸ்லாம் கற்றுத் தந்திருக்கின்ற அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வாசகமோ, அவரை அனைத்து வித நலன்களும் சூழ்ந்திருக்கப் பிரார்த்திக்கக் கற்றுத் தந்திருக்கின்றது.


மேலும், நாம் அனைவரும் அல்லாஹ்வினுடைய அருளை நம்பி வாழ்பவர்கள் என்பதையும், இன்னும் அவனையன்றி யாரும் நமக்குத் தீங்கிழைத்து விட முடியாது என்பதையும் நமக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கின்றது. இன்னும் இதுவும் ஒரு வகையில், வணக்க வழிபாடாகவும் இருக்கின்றது அல்லது தன்னைச் சூழ உள்ள முஸ்லிம்களுக்கு இறைவனது ஞாபகத்தை ஊட்டக் கூடியதான வணக்கமாகவும் இருக்கின்றது.


இன்னும் ஒன்றை இங்கே நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கது என்னவென்றால், உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக என்று ஒருவர் உங்களை நோக்கி கூறுகின்றார் என்றால், அவர் உங்களுக்காக பிரார்த்தனை மட்டும் புரியவில்லை, மாறாக, என்னிடமிருந்து ஏற்படும் துன்பங்கள், துயரங்களிலிருந்தும், மற்றும் நாவிலிருந்தும், கரங்களிலிருந்தும் நீங்கள் பாதுகாப்புப் பெறுகின்றீர்கள் என்பதையும் அவர் பிரகடனப்படுத்துகின்றார் என்பதாகும். இதன் மூலம் உங்களது கௌரவம், வாழ்வு, மரியாதை ஆகியவற்றையும் அவர் கண்ணியப்படுத்துகின்றேன் என்றும் அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார் என்பதையும் குறிக்கின்றது.


இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன்னுடைய அஹ்காமில் குர்ஆனில்,
இஸ்லாம் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா?


ஒருவர் உங்களுக்குச் ஸலாம் உரைப்பதன் மூலம், என்னிடமிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்து நீங்கள் முழுவதும் பாதுகாப்புப் பெறுகின்றீர்கள் என்று உங்களுக்குச் ஸலாம் உரைக்கக் கூடியவர் அறிவிக்கின்ற அறிவிப்பாகும்.


இன்னும் ஸலாம் என்பது, அல்லாஹ்வை நினைவு கூரக் கூடியதாகவும், அல்லாஹ்வை நினைவுபடுத்தக் கூடியதாகவும், சக முஸ்லிம்களின் மீது அன்பு பாராட்டுவதாகவும், இன்னும் அது ஒரு மிகச் சிறந்த பிரார்த்தனையாகவும், இன்னும் முக்கியமாக ஒருவரது கரங்கள் மற்றும் நாவிலிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாப்பைப் பிரகடனப்படுத்தக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது.


இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களது பொன்மொழி ஒன்று இவ்வாறு மெய்ப்பித்துக் கூறுகின்றது :


தன்னுடைய சக முஸ்லிமுக்கு கரத்தாலும், நாவாலும் துன்பம் இழைக்காதவரே உண்மையான முஸ்லிமாவார்.


இந்த ஒரு ஹதீஸை மட்டும் நாம் கவனத்தில் கொள்வோமானால், இன்றைக்கு முழு உலகில் வாழக் கூடிய முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டிருக்கின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு விடலாம். எனவே தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்பிக் கொள்ளுங்கள் என்று, தன்னைப் பின்பற்றுகின்ற சமுதாயத்தினரை வேண்டியதோடு மட்டுமல்லாமல், மிகச் சிறந்த நல்லமல்களில் மிகச் சிறந்ததொன்றாக ஸலாம் இருக்கின்றது என்பதனையும் குறிப்பிட்டுக் கூறிச் சென்றுள்ளார்கள்.


இன்னும் ஏராளமாக நபிமொழிகள், இந்த ஸலாத்தின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்கப்படுத்தி இருக்கின்றன.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :


நீங்கள் நம்பிக்கைளாராக ஆகாதவரை சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. உங்களில் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை நீங்கள் முழுமையான (பூரணமான) நம்பிக்கையாளராக ஆக முடியாது. உங்களுக்கு ஒன்றை நான் ஏவுவதாக இருந்தால், உங்களுக்கிடையில் ஸலாத்தை பரப்பவும், இன்னும் அன்பு செலுத்தும்படியும் தான் நான் கூறுவேன். ஸலாத்தைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவருக்கு முகமன் கூறுங்கள், நீங்கள் ஸலாம் உரைக்கக் கூடிய நபர் அறிந்தவராகவோ அல்லது அறியாதவராகவே இருப்பினும் சரியே!


ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதாக, அப்துல் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :


இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது?


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலிறுத்தார்கள். மக்களுக்கு உணவளியுங்கள், இன்னும் உங்களில் அறிந்தவருக்கும் இன்னும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள் என்றார்கள்.


அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைவனுக்கு மிக நெருக்கமானவர் யாரென்றால், உங்களில் யார் முதலில் ஸலாம் கூறுகின்றவரே இறைவனுக்கு மிக நெருக்கமானவர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஸலாம் என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது, அதனை இறைவன் இந்தப் பூமியின் மீது இறக்கி வைத்தான். எனவே, அந்த ஸலாத்தை நாம் இந்தப் பூமியில் பரப்ப வேண்டும். ஒருவர் மற்றவருக்கு ஸலாம் உரைக்கும் பொழுது, இறைவனிடத்தில் அவரது தகுதி உயர்த்தப்படுகின்றது. சபையில் உள்ளவர்கள் ஸலாம் உரைப்பவரது ஸலாத்திற்குப் பதிலுரைக்கவில்லை என்று சொன்னால், அங்கிருக்கின்ற மனிதர்களை விட மிகச் சிறந்த படைப்பான (மலக்குமார்கள் - வானவர்கள்) அவரது ஸலாத்திற்குப் பதில் கூறுகின்றார்கள். (முஸ்னது பஸ்ஸார், தப்ரானி)


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :


உங்களில் கஞ்சத்தனமிக்கவர் யாரென்றால், ஸலாத்தைப் பரப்பாமல் கஞ்சத்தனம் செய்கின்றவரே!


திருமறைக் குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :


وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيْءٍ حَسِيبًا


(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (4:86)


மேலே உள்ள வசனத்தின்படி, ஒருவர் உங்களுக்கு ஸலாம் உரைப்பாரேயானால், அவருக்கு அதைப் போன்ற அல்லது அதனை விடச் சிறப்பான முறையில் பதில் கூறுங்கள் என்று இறைவன் நமக்கு அறிவுறுத்துகின்றான்.


ஒருவர் மற்றவருக்கு ஸலாம் சொல்வது என்பது சடங்கு போலப் பின்பற்றப்படுவது அல்ல. மாறாக, அது இயல்பாகவும், வழக்கமானதொன்றாகவும் பின்பற்றபடவும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது பின்பற்றப்பட வேண்டியதுமாகும். இதில் யார் முதன் முதலில் ஸலாத்தை உரைக்கின்றாரோ, அவரே இறைவனுக்கு மிகவும் நெருக்கமான அடியார் என்பதையும் நாம் உணர்ந்து, பிறருக்கு ஸலாம் உரைப்பதற்கு முந்திக் கொண்டு, இறைவனது நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


ஹஸன் பஷரி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
ஸலாம் சொல்வது இயல்பாக தானே முன்வந்து உரைக்கக் கூடியது, அதற்குப் பதிலுரைப்பது கடமையானதாகும்.


துஃபைல் பின் அபீ பின் காப் அவர்கள் அறிவித்ததாக இமாம் மாலிக் அவர்களின் முஅத்தா வில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது,


அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள், எந்தவித பொருள்களும் வாங்கவோ அல்லது விற்கும் நோக்கமின்றி, மக்களுக்கு ஸலாம் சொல்வதற்கென்றே கடைத் தெருப்பக்கம் வரக் கூடியவர்களாக இருந்தார்கள்.


இதன் மூலம் மக்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்வதன் சிறப்புப் பற்றி அவர்கள் அறிந்து, அவர்கள் அதற்கு அளித்திருக்கக் கூடிய முக்கியத்துவத்தை நாம் உணர முடிகின்றது.


அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் சூரா அந்நிஸாவின் 86வது வசனத்தின் இறுதிப் பகுதி இதற்கான விளக்கத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.


நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான். (4:86)


ஒருவருக்கு ஸலாம் உரைப்பதும், அதற்குப் பதில் சொல்வதும் சிறப்பானது தான் எனினும், ஸலாம் சொல்வதற்கு முந்திக் கொள்வது சிறப்பானதாகும். ஸலாம் சொன்னவர்களுக்கு சிறப்பான முறையில் பதில் அளிப்பதன் மூலம், நமக்கிடையே அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


மேலும், ஸலாத்தின் முக்கியத்துவம் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்கள் :


1)வாகனத்தில் அமர்ந்திருப்பவர் நடந்து செல்பவர்களுக்குச் ஸலாம் சொல்ல வேண்டும்


2) நடந்து சென்று கொண்டிருப்பவர் உட்கார்ந்திருப்பவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டும்


3) சிறிய குழுக்கள் பெரிய குழுக்களுக்கும்


4) விடைபெற்றுச் செல்பவர் தங்கி இருந்து கொண்டிருப்பவர்களுக்கும்


5) வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுதும், வீட்டினுள் நுழையும் போதும் அங்கு எவரும் இல்லையெனினும் ஸலாம் சொல்வது (வானவர்கள் உங்களது ஸலாத்திற்குப் பதிலுரைப்பார்கள்)


6) உங்களது சந்திப்பு மீண்டும் மீண்டும் தொடர்ந்தாலும், மீண்டும் மீண்டும் ஸலாம் சொல்லுங்கள்


ஸலாத்திற்கு பதில் உரைக்க அவசியமில்லாத நேரங்கள் :
1) தொழுது கொண்டிருப்பவர், ஸலாத்திற்குப் பதில் கூறுவது அனுமதிக்கப்பட்டதல்ல


2) தொழுகைக்கான அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பவர் (முஅத்தின்) ஸலாத்திற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை.


3)) கழிப்பிடத்தில் அமர்ந்திருப்பவரும் ஸலாத்திற்குப் பதிலுரைக்க வேண்டியதில்லை.


மேலும் அல்லாஹ், ஸலாம் சொல்வதன் முக்கியத்துவம் பற்றிக் கூறும் பொழுது,


وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ ۖ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِن بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَّحِيمٌ


மேலும், நம்முடைய வசனங்களை விசுவாசித்தோர் (நபியே!) உம்மிடம் வந்தால், (நீர் அவர்களுக்கு ஸலாமுன் அலைக்கும்) - உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! உங்களுடைய இரட்சகன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (யாதொரு) தீமையைச் செய்து விட்டு, பிறகு அதன் பின்னர் அதற்காகப் பச்சாதபப்பட்டு (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக் கொண்டாரோ (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான் ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன், என்று நீர் கூறுவீராக! (6:54).


மேற்கண்ட வசனத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் எப்பொழுதும் உடனிருந்து கொண்டிருந்த தோழர்களைக் கௌரவிக்கும் முகமாக, அது பற்றி விளக்குகின்றான். என்னவென்றால், மக்காவின் மிகப் பணக்கார முஸ்லிமல்லாதவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருக்க விரும்பி, அவரிடமிருந்து கொண்டிருந்த அந்த ஏழைத் தோழர்களை விலகிச் செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள்.


ஆனால் அல்லாஹ் தன்னுடைய நபிக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றான். உங்களுடன் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த ஏழைத் தோழர்களுக்கு என்னுடைய ஸலாத்தைக் கூறுங்கள். அவர்களது வருகை நல்வரவு ஆகட்டும் என்று நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுங்கள் என்று கூறுவதன் கருத்து இருவிதமானதாகும்.


முதலாவது, இறைவன் தன்னுடைய ஸலாத்தை அந்த ஏழைத்தோழர்களுக்குத் தெரிவிக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கூறுகின்றான். இந்த ஸலாமானது அவர்களுக்கு, நேர்மையான முறையில் இஸ்லாத்தைப் பின்பற்றியொழுகுகின்ற அந்த ஏழைகளுக்கு இறைவன் கொடுத்த கௌரவமாகும். இது அவர்களுடைய இதயத்தைப் பலப்படுத்துகின்றது, இன்னும் அவர்களது ஆன்மீகத் தேட்டத்தை அதிகரிக்கின்றது.


இரண்டாவதாக, இறைவனது அனுமதி கொண்டு அவர்கள் மிகவும் சாந்தியும், சமாதானத்துடனும் நிம்மதியாகவும் வாழ்வதோடு, இன்னும் அவர்கள் செய்கின்ற சிறு சிறு பாவங்களை மன்னிக்கப்படக் கூடியதாகவும் இருக்கின்றது என்று இறைவன் அவர்களுக்கு இதன் மூலம் நற்செய்தியையும் வழங்குகின்றான்.


எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸலாத்தினைப் பரப்பி, உலகம் சுபிட்சமான அமைதியான, சாந்திமயமிக்கதாக மாற்றியமைப்பதற்கு நாம் அனைவரும் முன்வருவோமாக! அதற்கான தகுதியை இறைவன் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக! ஆமீன்!!

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் என்ன?
வணங்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வினுடைய சட்ட திட்டங்களை ஏற்று அவனுக்குப் பணிந்து பின்பற்றுவதும், அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதுமாகும்.

இஸ்லாத்தின் முக்கியமாக கடமைகள் ஐந்து :
1. அல்லாஹ்வைத் தவிர (வணங்குவதற்கு, வழிபடுவதற்கு, சட்டம் இயற்றுவதற்கு, கீழ்படிவதற்கு) வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் திருத்தூதருமாவார் என்று சான்று பகர்வது

2. தொழுகையை நிலைநாட்டுவது,

3. ஜகாத் கொடுத்து வருவது

4. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது

5. ஹஜ்ஜை நிறைவேற்றுவது
(இவை ஷஹாதா என்றழைக்கப்படுகின்றன.)

முதலாவது பகுதிஆதாரங்கள் :
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (அத்தாரியாத் : 56)

நிச்சயமாக என்னுடைய தொழுகையும், அறுப்பு (குர்பானியும்) என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல் அன்ஆம்:162)

இபாதத் என்றால் என்ன?
இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமையும் மனிதனின் சொல், செயல் அனைத்தும் இறைவழிபாடேயாகும். அதாவது இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காக ஒரு மனிதன் கூறும் ஒவ்வொரு சொல்லும் ஆற்றும் ஒவ்வொரு செயலும் இறைவழிபாடேயாகும்.

அஷ்ஷஹாதா :
அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்தன் ரஸுலுல்லாஹ்.

இரண்டாவது பகுதி (தொழுகை)

1 நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனையை அல்லாஹ் குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான் :

என்னுடைய இரட்சகனே என்னையும் என் சந்ததியிலுல்ளோரையும் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக ஆக்கி வைப்பாயாக! (எங்களுடைய இரட்சகனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக) சூரா இப்றாஹீம் : 40

2 என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையையும் நிறைவேற்றுவீராக என்று மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சொன்னான். சூரா : மர்யம் :31

3 அல்லாஹுத்ஆலா கூறுகின்றான் : நபி ஈஸா (அலை) அவர்கள் சொன்னார்கள் : நான் ஜீவித்திருக்கும் காலமெல்லாம் தொழுகையை நிறைவேற்றுவது கொண்டும் ஸகாத் கொடுத்து வருவது கொண்டும் அவன் எனக்கு உபதேசம் செய்திருக்கிறான். அல்அன்கபூத் : 45

இன்னும் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் கட்டளையிடுகிறான் : நபியே! குர்ஆனாகிய இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதவீராக. தொழுகையையும் (அல்லாஹ் விதியாக்கியவாறு) நிறைவேற்றுவீராக
பின்பு அனைத்து முஃமீன்களையும் தொழுகையைக் கொண்டு ஏவினான். அன்னிஸா : 103

நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

தொழுகையின் முக்கியத்துவம்
நிச்சயமாக தொழுகை மானக் கேடான செயலிலிருந்து மார்க்கத்தில் மறுக்கப்பட்டதில் இருந்தும் தடுக்கும். நிச்சயமாக தொழுகையின் மூலம் அல்லாஹ்வை நினைவு கூறுவது எல்லாவற்றையும் விடப் பெரியதாகும். (அல் மஆரிஜ் : 34-35)

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையின் மீது அதை முழுமையாக நிறைவேற்றவதற்குரிய முறைகளைப் பேணிப்பாதுகாத்துக் கொள்வார்கள். மேற்கூறப்பட்ட தகுதிகளுடைய அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ரசூல் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பிரயாணத்தின் போது ஐம்பது நேரத் தொழுகை கடமையாக்கப்பட்டது. பின்பு ஐந்து நேரத் தொழுகை வரை குறைக்கப்பட்டது. பின் முஹம்மதே! என்று அழைக்கப்பட்டு என்னுடைய சொல் மாற்றப்பட்டது. இந்த ஐந்து நேரத் தொழுகை ஐம்பது நேரப் பலனை அடையும் என்று கூறப்பட்டது. (புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சொல்லநான் கேட்டேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உங்களில் ஒருவருடைய வீட்டு வாசலுடன் ஒரு நதி ஓடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் அவர் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் குளிக்கின்றார். அவர் உடம்பில் அழுக்குகள் எதுவும் எஞ்சியிருக்குமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் உடம்பில் எந்த அழுக்கும் இருக்காது என ஸஹாபாக்கள் பதிலளித்தார்கள். பின்பு (ஸல்) அவர்கள் சொன்னார்கள், இதே போன்று தான் ஐந்து நேரத் தொழுகை இதைக் கொண்டு அல்லாஹ் பாவங்களைப் போக்குகிறான். (புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அப்துல்லாஹ் இப்னு கிர்த் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : மறுமை நாளில் ஒரு அடியானிடம் முதன் முதலாக கேட்கப்படுவது தொழுகையைப் பற்றியதாகும். எனவே தொழுகையை அவன் சிறப்பாக நிறைவேற்றியிருந்தால் அவனுடைய எல்லா அமல்களும் சிறப்பாக ஆகிவிடும். இன்னும் அவன் தொழுகையை சிறப்பாக நிறைவேற்றாமல் இருந்திருந்தால் அவனுடைய எல்லா அமல்களுமே பாலாகி விடும். (அத்தபரானி)

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக புரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையாகும். யார் அதை விடுகிறாரோ அவர் இறைவனை நிராகரித்து விட்டார். (அஹ்மத்).

மூன்றாவது பகுதி ஜகாத் கொடுத்தல்
இன்னும் விசுவாசிகளே) தொழுகையை (முறையாக) நிறைவேற்றுங்கள். ஜகாத்தையும் கொடுங்கள். மேலும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவற்றின் மூலம்) நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்.

ஜகாத்தின் விளக்கம்
ஜகாத் என்றால் கட்டாயமான ஒரு நன்கொடையாகும். அது குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பொருட்களில் இருந்து கொடுக்கப்பட வேண்டும்.

ஜகாத்தின் பலன்கள்
1. இறைவனை வழிபடுதல்
2. ஏழை, எளியோருக்கு உதவி செய்தல்
3. மனிதனை உலோபித்தனத்தில் இருந்து தூய்மைப்படுத்துதலும், அவனுக்கு நன்கொடை பற்றி கற்றுக் கொடுப்பதும், ஜகாத்தின் பலன்களாகும்.

ஜகாத் விதியாகும் பொருட்கள்
1. தங்கம், வெள்ளி (நாணயம்)
2. வியாபாரப் பொருட்கள்
3. கால்நடைகள்4. கனிப்பொருட்கள்

ஜகாத் பெறத் தகுதியுடையோர்
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)

நான்காவது பகுதி - ரமழான் மாத நோன்பு
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் (உளத் தூய்மையுடையோராகி) பயபக்தியுடையவர்களாக ஆகலாம். (2:183)

நோன்பின் பொருள் (விளக்கம்)
பஜ்ர் தொடக்கம் சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கக் கூடிய அனைத்துக் காரியங்களை விட்டும், மேலும் உண்ணல், பருகலை தடுத்து இறைவனை வணங்குவதே நோன்பாகும்.

நோன்பின் சிறப்புகள்
அல்லாஹ் சொன்னதாக ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஆதமுடைய மகனின் எல்லாச் செயல்களும் அவனுக்குரியதே. நோன்பைத் தவிர நோன்பு எனக்குரியது. அதன் கூலியை நானே கொடுப்பேன். இன்னும் நோன்பு ஒரு கேடயமாகும்.

மேலும் யாராவது நோன்பாளியைத் திட்டினால் அல்லது கொலை செய்ய நாடினால் நான் நோன்பாளி என்று சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயின் வாடை கஸ்தூரி வாடையை விட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று அவன் நோன்பு திறக்கும் போது மற்றது நோன்பு நோன்பு மூலம் இறைவனைச் சந்திக்கும் போது.

நோன்பின் பலன்கள்
1. இறைவனை வழிபடுதல்
2. தக்வா (இறையச்சம்) ஏற்பட ஒரு பயிற்சியாக அமைதல். இறைவன் ஏவியவைகளை ஏற்றும் தடுத்தவைகளை விலகி வாழவும் ஒரு பயிற்சியாக நோன்பு அமைகிறது. மேலும் பொறுமை தூய எண்ணம் போன்ற நல்ல பண்புகளையும் இந்த நோன்பு கற்பிக்கிறது.

நோன்பை முறிக்கும் காரியங்கள்
1. உண்ணல் பருகல், புகைத்தல். (மறதியாக ஒருவன் செய்தால் நோன்பு முறியாது)
2. வாந்தி எடுத்தல வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். சுயவிருப்பமின்றி வாந்தி எடுத்தால் நோன்பு முறியாது
3. இரத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துதல் (உடம்பிலிருந்து நரம்பு வழியாக இரத்தத்தை வெளிப்படுத்துதல். இரத்தப் பரிசோதனைக்காக எடுக்கும் குறைவான இரத்தத்தால் நோன்பு முறியாது).
4. மாதவிடாய், பிரசவ இரத்தம் வெளிப்படுதல்
5. இந்திரியத்தை ஒருவன் தானாக வெளிப்படுத்துதல்
6. மனைவியோடு உடலுறவு கொள்ளுதல்

நோன்புப் பெருநாள் தர்மம்
1. ஒரு ஸாஉ கொடுக்கப்பட வேண்டும். அதாவது கோதுமை, அரிசி, பேரீத்தம் பழம். தான் வசிக்கும் நாட்டில் பொதுவாக உட்கொள்ளக் கூடிய உணவிலிருந்து இதனை வழங்க வேண்டும். ஸாஉ என்பது கிராம் கணக்கில் (மூன்று கிலோ)வைக் குறிக்கும்.

2. ஒவ்வொரு முஸ்லிமும் ஏழைகளுக்காக கொடுக்க வேண்டும்

3. பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன் கொடுக்கலாம்.

ஐந்தாவது பகுதி - ஹஜ்ஜை நிறைவேற்றுதல்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (3:98)

ஹஜ்ஜின் நோக்கம்
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் கூறினார்கள் : நிச்சயமாக கல் எறிதல், ஸஃபா மர்வா இடையில் ஸயீச் செய்வதெல்லாம் இறைவனை ஞாபகப்படுத்துவதற்கே! என்று கூறினார்கள். எனவே ஹஜ்ஜின் உண்மையான நோக்கம் இறைவனை நினைவு கூறல் என்பது புலனாகிறது.

ஹஜ்ஜின் சிறப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார் பெண்களிடத்தில் உறவாடாமலும், பாவம் செய்யாமலும் இந்த வீட்டை ஹஜ்ஜுச் செய்கிறாரோ அவர் (பாவம் அழிக்கப்பட்டு) அன்று பிறந்த பாலகன் போலாகி விடுவார்.

மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இரண்டு உம்ராக்களுக்கு இடைப்பட்ட காலங்கள் சிறிய பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாகும். இன்னும் (எத்தகைய தவறும் ஏற்படாத) சிறந்த ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி கிடையாது.

ஹஜ்ஜின் பலன்கள்
1. இறைவனை வழிபடுதல்
2. இஸ்லாமிய ஒருமைப்பாட்டை உலகத்திற்கு எடுத்துக்காட்டல்
3. விசாரணை (இறுதி)நாளை நினைவு படுத்திக் கொள்ளுதல்