துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மறுமையின் மீது நம்பிக்கை


அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'நான் நிம்மதியான, கவலையற்ற வாழ்க்கை எப்படி வாழ முடியும்? ஸூர் எனும் எக்காளத்தை ஊதும் பொறுப்புடைய வானவர் (இஸ்ராஃபீல் (அலை) அவர்கள்) எக்காளத்தை வாயில் வைத்துக்கொண்டு செவி சாய்த்து, தலைதாழ்த்திய வண்ணம் - எப்போது ஊதும்படி கட்டளை பிறக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். (இராணுவத்துக்கு அபாய அறிவிப்பு தரப்படுகின்ற அல்லது இராணுவத்தக்கு திரட்டுவதற்காக ஊதப்படுகின்ற ஊதுகுழலுக்கு ஸூர் - எக்காளம் என்பர். இறுதித் தீர்ப்புநாளில் ஊதப்படும் குழலின் எதார்த்த நிலையை எவரால் அறிந்திட முடியும்?) மக்கள் வினவினார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றீர்கள்? அதற்கு அண்ணலார் பதிலளித்தார்கள்: 'அல்லாஹ்வே நமக்குப் போதுமானவன், அவன் சிறந்த பாதுகாவலன் (ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் ) என்று சொல்லிக் கொண்டிருங்கள்! (திர்மிதி)

விளக்கம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய நிம்மதியின்மையும், கவலையையும் கண்டு மக்கள் இன்னும் அதிகமாகத் திகைப்புற்றார்கள். 'தாங்களே இப்படி நினைக்கிறீர்கள் என்றால் அந்த நாளில் எங்களுடைய நிலை என்னவாகுமோ தெரியவில்லையே? என்று கேட்டார்கள். மேலும் அந்த நாளில் வெற்றியடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குக் காண்பியுங்கள் என்று கோரினார்கள். அண்ணலார் அவர்களுக்கு விளக்கிக் கொடுத்தார்கள், அதாவத, இறைவனையே முழவதும் சார்ந்திருங்கள், அவனது உதவியிலும் பாதுகாப்பிலும் வாழ்க்கையைக் கழியுங்கள்! அவனை வணங்கி அடிபணந்து வாழ்பவர்கள்தாம் வெற்றியடைவார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவன் மறுமை நாளை தன் கண்களால் காண விரும்பினால், அவன் இதஷ் ஷம்ஸுகுவ்விரத் (அத்தியாயம் 81), இதஸ்ஸமாஉன் ஃபதரத் (அத்தியாயம் 82),  இதஸ்ஸமாஉன் ஷக்கத் (அத்தியாயம் 84), ஆகிய மூன்று அத்தியாயங்ளையும் ஓதட்டும்! நெஞ்சில் பதியும் வண்ணம், மறுமை நாள் குறித்து இந்த மூன்று அத்தியாயங்களிலும் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. (திர்மிதி)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'யவ்ம இதின் துஹத்திஸு அக்பாரஹா' (அந்த நாளில் பூமி தன் நிலைமைகள் அனைத்தையும் எடுத்துரைக்கும்) என்னும் வசனத்தை ஓதினார்கள். பின் தம் தோழர்களை நோக்கி, 'தன் நிலைமைகளை எடுத்துரைக்கும் என்பதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று வினவினார்கள். 'அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்தாம் தெரியும்!!' என்று தோழர்கள் பதிலளித்தார்கள். அண்ணலார் கூறினார்கள்: 'இன்ன ஆண், இன்ன பெண் என் முதுகின் மீது, இன்ன நாளில், இன்ன நேரத்தில், இந்தக் கெட்ட செயலை அல்லது நல்ல செயலைச் செய்தார்கள்' என்று பூமி மறுமைநாளில் சாட்சியளிக்கும். இதுதான் இந்த வசனத்தின் பொருளாகும். மக்களின் செயல்களையே நிலைமைகள் என்று இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (திர்மிதி)

அறிவிப்பாளர்: அதீ (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: 'உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் நேரடியாகப் பேசுவான். (கணக்கு வாங்குவான்) அங்கு பரிந்துரை செய்பவர்  எவரும் இருக்கமாட்டார், அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான், பரிந்துரை செய்பவர், உதவுபவர் யாராவது உள்ளனரா என்று! அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது. பின்னர் இடப்பக்கம் நோட்டமிடுவான். அங்கும் அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் தென்படாது பின்னர் முன்பக்கம் பார்வையினை செலுத்;;;;துவான். அங்கு (தனக்கே உரிய பயங்கரங்கள் அனைத்துடனும் தென்படும்) நரகத்தை மட்டுமே காண்பான். எனவே மக்களே! நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலுங்கள், பாதி பேரீத்தம் பழத்தை தருமம் செய்தேனும்!'

விளக்கம்:

இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணலார் (ஸல்) அவர்கள், மக்களுக்கு இறைவழியில் செலவிடுதல் பற்றி (இறைநெறிக்காகவும், ஆதரவற்ற மக்களுக்காகவும் செலவிடுவது பற்றி) அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். எனவே, அதனைப் பற்றி மட்டும் குறிப்பிட்டார்கள். ஒரேயொரு பேரீத்தம் பழம் ஒருவனிடம் இருந்து அதில் பாதியை மடடுமே அவன் இறைவழியில் செலவிட்டாலும் அதுவும் இறைவனின் பார்வையில் விலை மதிப்பு மிக்கதாகும். செலவிடப்பட்ட செல்வம் அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்று இறைவன் பார்ப்பதில்லை. மாறாக, செலவிடுபவரின் உணர்வுகளைத்தான் பார்க்கின்றான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '(மறுமைநாளில்) ஒரு மனிதன் இறைவன் முன்னால் வருவான். இறைவன் அவனிடம் கூறுவான்: 'நான் உனக்கு கண்ணியத்தையும் சிறப்பையும் வழங்கவில்லையா? உனக்கு மனைவியை வழங்கவில்லையா? நான் உனக்கு அவகாசம் கொடுத்திடவில்லையா? அந்த வாய்ப்பை பயன்படுத்தி நீ மக்கள் மீது ஆட்சி செலுத்தவில்லையா? அவர்களிடம் வரி வசூலிக்கவில்லையா?' அதற்கு மனிதன் இறைவன் அளித்த அருட்கொடைகளை எல்லாம் ஒப்புக்கொள்வான். பின்னர் அல்லாஹ் அவனிடம் கேட்பான்: 'ஒருநாள் என் முன்னால் நீ நிறுத்தப்படுவாய் என்று நினைக்கவில்லையா?' அகற்கு அவன் 'இல்லை! நினைக்கவில்லை' என்று பதிலளிப்பான். அல்லாஹ் அவனிடம் கூறுவான்: 'நீ எப்படி என்னை உலகில் மறந்திருந்தாயோ அவ்வாறே இன்று நான் உன்னை மறந்து விடுவேன்.'

பின்னர் இவ்வாறே இரன்டாம் மனிதன் (மறுமையை மறுத்தவன்) இறைவனின் முன்னால் வருவான். அவனிடமும் இவ்வாறே வினவப்படும். பின்னர் மூன்றாமவன் வருவான். (இறைமறுப்பாளர்களான) முந்திய இருவரிடமும் கேட்ட அதே கேள்விகளையே அல்லாஹ் அவனிடமும் கேட்பான். இந்த மூன்றாமவன் பதில் கூறுவான்: 'என் இறைவனே! நான் உன் மீதும், உன் வேதத்தின் மீதும், உன் திருத்தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். நான் தொழுது வந்தேன், நோன்பு நோற்று வந்தேன், உன் வழியில் என் செல்வத்தைச் செலவிட்டு வந்தேன்'. (அண்ணலார் கூறினார்கள்:) இவ்வாறே முழு வலிமையுடன் தன்னுடைய இன்னும் பல நற்செயல்களை எண்ணிக் காட்டுவான். அப்போது அல்லாஹ் அவனிடம் கூறுவான்:

'போதும் நிறுத்து!' பின்னர் மீண்டும் இறைவன் 'நாம் இப்போதே உனக்கெதிராக சாட்சியம் சொல்பவரை அழைக்கிறோம்' என்று கூறுவான். அப்போது 'எனக்கெதிராக சாட்சியம் அளிப்பவன் எவனாயிருப்பான்?'என்று அந்த மனிதன் தன் மனத்திற்குள் எண்ணுவான். பின்னர் அவனது வாய்க்கு முத்தரை வைத்து அடைக்கப்பட்டுவிடும்! (ஏனெனில் உலகில் இவன் எப்படி இறைத்தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் முன்னால் வெட்கமின்றி தன்னைத் தூய்மையானவன் என்று பொய்யாக பறைசாற்றி வந்தானோ, அவ்வாறே அல்லாஹ்வின் முன்னால் கூட பொய் சொல்ல வெட்கப்படமாட்டான்) அவனது தொடை, சதை, எலும்புகள் ஆகியவற்றிடம் வினவப்படம். அவையனைத்தும் இந்த மனிதனின் சூழ்ச்சிகரமான செயல்களை மிகச்சரியாக எடுத்துரைத்துவிடும். இவ்விதம் புனைந்து பொய் பேசும் வழியை அல்லாஹ் அடைத்துவிடுவான். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இவன்தான் உலகில் நயவஞ்சகம் புரிந்த மனிதன் ஆவான்: இவன்தான் அறைக் கோபத்திற்குரியவனாகிவிட்ட மனிதன் ஆவான்.'(முஸ்லிம்)

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில தொழுகைகளில், 'இறiவா! என்னிடம் இலேசான கணக்கு வாங்குவாயாக!' என்று இறைஞ்சுவதை நான் கேட்டிருக்கின்றேன்.

'இலேசான கணக்கு என்பதன் பொருள் என்ன?' என்று நான் வினவினேன். அதற்கு அண்ணலார் பின்வருமாறு பதிலளித்தார்கள்: 'அல்லாஹ் மனிதனின் வினைச் சுவடியைப் பார்த்து, அதில் பதிக்கப்பட்டிருக்கும் தீய செயல்களைப் புறக்கணித்து விடுவதே இலேசான கணக்காகும். ஆயிஷாவே! கணக்கு வாங்கப்படும்போது எவனுடைய ஒவ்வொரு செயலும் துரவி ஆராயப்படுகின்றதோ, அவன் அழிந்துவிட்டான் என்றுதான் பொருள்!'  (முஸ்னத் அஹமத்)

விளக்கம்:

எவர்கள் இறைவழியில் நடைபோடுகின்றார்களோ, தீய சக்திகளுடன் போரிட்டுக் கொண்டே இருக்கின்றார்களோ, அவ்வாறு போரிட்ட வண்ணமே அவர்களுடைய ஆயுட்கால தவணையும் முடிவடைந்து விடுகின்றதோ அவர்களடைய தவறுகளை இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ் மன்னித்துவிடுவான் என்னும் நற்செய்தி திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுடைய நற்செயல்களை மதித்து அவர்களை சுவனத்தில் புகுத்துவான்.

அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருச்சமூகம் சென்று நான் கேட்டேன்: 'மக்கள் கேள்வி கணக்குக்காக அகிலங்களின் அதிபதியின் முன்னால் நிற்கக்கூடிய அந்த நாளைச் சற்று சிந்திப்பாயாக' என இறைவன் கூறியுள்ளானே - அந்த நாளில் இறைவன் திருமுன் எவர்தான் நிற்க முடியும்? அந்த நாள்தான் ஆயிரம் நாட்களுக்குச் சமமானதாயிற்றே!' என்று வினவினேன். அண்ணலார் பதிலளித்தார்கள்: '(அந்த நாள் குற்றவாளிகளுக்கும், இறை துரோகிகளுக்கும் கடுமையான நாளாய் இருக்கும். அது அவர்களுக்கு ஒராயிரம் ஆண்டாகத் தோன்றும். துன்பத்திற்குள்ளான மனிதனின் நாள் நீளமானதாக இருக்கும். அது தள்ளினாலும் நகர்வதில்லை.) அந்த நாள் இறைநம்பிக்கையாளனுக்கு இலேசானதாக இருக்கும். இலேசானதாக மட்டுமல்ல, கடமையான தொழுகை கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதுபோல் அந்தநாள் அவன் கண்களுக்கு குளிர்ச்சியாக அமையும்!' (மிஷ்காத்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'அல்லாஹ் கூறுகின்றான்: எந்தக் கண்ணும் காணாத, உந்தக் காதும் கேட்காத, எவருடைய உள்ளத்திலும் தோன்றாத அருட்கொடைகளை என் நல்லடியார்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன். நீங்கள் விரும்பினால் குர்ஆனின் பின்வரும் வசனத்தை ஓதுங்கள்: நல்லடியார்களுக்காக எத்தனைக் கண்குளிர் சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன - ( மறுமைநாளில் அவர்களுக்குக் கிடைக்க இருக்கின்றன) என்பது பற்றி எந்த மனிதனும் அறியமாட்டான்.'   ( புகாரி, முஸ்லிம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'சுவனத்தில் ஒரு சாட்டை வைக்கின்ற சிறிதளவு இடம்கூட உலகம் மற்றும் உலகின் பொருட்களைவிடச் சிறந்ததாகும்.'    (புகாரி, முஸ்லிம் )

விளக்கம்:

சாட்டை வைக்கின்ற இடம் என்பது, மனிதன் தன் படுக்கையை விரித்து படுத்துக் கொண்டிருக்கின்ற சிறிய இடத்தைக் குறிக்கின்றது. இதன் கருத்து: இறைநெறியின்படி வாழ்வதனால் ஒருவருடைய உலக வாழ்வு அழிந்துவிட்டாலும், அவர் வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் இழந்துவிட்டாலும் அதற்குப் பகரமாக சுவனத்தில் சிறிய இடமொன்று கிடைத்துவிட்டால், இது மிக இலாபகரமான வியாபாரமாகும். ஏனெனில் அழிந்துவிடக்கூடிய ஒரு பொருளை தியாகம் செய்ததன் பயனாக, அல்லாஹ் அவருக்கு என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு பொருனை அளித்துவிட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

(இறுதித் தீர்ப்புநாளில்) உலகில் அனைவரையும்விட வளமாக வாழ்ந்த நரகவாசி ஒருவன் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவான். நெருப்பு அவனது உடம்பில் தனது பாதிப்பு முழவதையும் ஏற்படுத்தி விடும்போது, அவனிடம் 'எப்போதேனும் நீ நிம்மதியான காலகட்டத்தை அனுபவித்ததுண்டா?' என்று வினவப்படும். அவன் பதிலளிப்பான்: 'இல்லை! என் இறைவா, உன் மீதாணையாக! ஓருபோதும் கண்டதில்லை.'

பின்னர் உலகில் மிகவும் கடினமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த சுவனவாசி ஒருவன் கொண்டு வரப்படுவான். சுவனத்தின் அனைத்து இன்பங்களின் செழிப்பும் அவன் மீது நன்கு பிரதிபலிக்க ஆரம்பித்துவிடம்போது அவனிடம் 'நீ எப்போதாவது வறுமையை - கடினமான நிலையில் கண்டதுண்டா? எப்போதாவது நீ துன்பம் அனுபவித்ததுண்டா?' என்று வினவப்படும். அவன் கூறுவான்: 'என் இறைவா! நான் வறுமையிலும் வசதியின்மையிலும் ஒருபோதும் சிக்கியதில்லை. நான் துன்ப நிலையை என்றுமே பார்த்ததில்லை.' (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'இன்பங்கள், ஆசாபாசங்கள் ஆகியவற்றால் நரகம் சூழப்பட்டிருக்கிறது. கஷ்டங்கள், துன்பத் துயரங்கள் ஆகியவற்றால் சுவனம் சூழப்பட்டிருக்கிறது.' (புகாரி, முஸ்லிம் )

விளக்கம்:

எவன் தன் மனஇச்சைகளின்படி நடந்து, உலகத்தின் இன்பங்களிலேயே நிலையித்திருக்கின்றானோ அத்தகையவனின் இருப்பிடம் நரகமாகும். சுவனத்தை அடைய வேண்டும் என்னும் ஆசையுள்ளவன் முட்கள் நிறைந்த வழியினைத் தேர்ந்தெடுத்து, மனஇச்சைகளுடன் போராடி, அவற்றைத் தோல்வியுறச் செய்ய வேண்டும். எல்லாவித கஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் மனோதிடத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கஷ்டம் சூழ்ந்த மேடுபள்ளங்களைக் கடந்து செல்லாதவன் சுகமும் சொகுசு வாழ்வும் உள்ள சுவனத்தை எங்ஙனம் அடைவான்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்:

'நான் நரக நெருப்பைவிட பயங்கரமான ஒன்றைப் பார்த்ததில்லை. ஆனால், அதனை விட்டு வெருண்டோட வேண்டியவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான். நான் சுவனத்தைவிட உயர்ந்த ஒன்றைப் பார்த்ததில்லை. ஆனால், அதனை விரும்பக்கூடியவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான்.' (திர்மிதி)

விளக்கம்:

பயங்கரமான ஒன்றைப் பார்த்த பிறகு மனிதனுக்கு தூக்கம் பறந்தோடிவிடுகிறது. அதிலிருந்து  வெருண்டோடுகின்றான்! அது குறித்து அவனுக்கு நிம்மதி ஏற்படாதவரை அவன் உறங்குவதில்லை. இதேபோன்று ஒருவனுக்கு ஒரு நல்ல பொருளின் மீது நாட்டம் ஏற்பட்டுவிட்டால் அதனை அடையாத வரை அவன் உறங்கவும்மாட்டான், நிம்மதியுடன் அமரவும் மாட்டான். எதார்த்த நிலை இவ்வாறு உள்ளபோது சுவனத்தை அடைய நினைப்பவர்கள் ஏன் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்? நரகத்தை விட்டுத் தப்பித்து ஓடும் நினைப்பு ஏன் இவர்களுக்கு வருவதில்லை?

ஒருவனுக்கு ஒன்றைக்குறித்து அச்சம் ஏற்படுமாயின் அதைப்பற்றி அவன் அலட்சியமாகவும், ஒன்றும் தெரியாதது போலவும் இருக்கமாட்டான். நல்லவற்றில் ஆர்வம் கொண்ட ஒருவன் எப்பொழுதும் துடிப்புடன் இருப்பான். கொஞ்சம் நேரம்கூட அமைதியுடன் அமரமாட்டான்.

அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தவரை நோக்கிக் கூறினார்கள்:

'நான் (கவ்ஸர் எனும்) தடாகத்தை உங்களுக்கு முன் சென்றடைந்து உங்களை வரவேற்பேன், உங்களுக்குத் தண்ணீர் புகட்டுவதற்கான ஏற்பாட்டினைச் செய்வேன். என்னிடம்  வருபவர்கள் (கவ்ஸரின் நீரை ) அருந்துவார்கள். அதனைப் பருகியவர்களுக்கு இனி ஒருபோதும் தாகம் ஏற்படாது. சிலர் என்னிடம் வருவர். அவர்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன். அவர்களும் என்னை யார் என்று புரிந்துகொள்வார்கள். ஆயினும், அவர்கள் என்னை அடையமுடியாதவாறு தடுக்கப்படுவார்கள். அப்போது நான் 'இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்தாம்(என்னிடம் வர அனுமதியுங்கள்!) என்று கூறுவேன். அதற்கு 'இவர்கள் உங்களின் மரணத்திற்குப்பின் நீங்கள் கொண்டுவந்த தீனில் (வாழ்கை நெறியில்) எத்தனை எத்தனையோ புதிய பித்அத்களை (அநாச்சாரங்களை) நுழைத்துவிட்ட செய்தியினை தாங்கள் அறியமாட்டீர்கள்!' என்று என்னிடம் சொல்லப்படும். 'அவ்வாறாயின் எனக்குப் பின்னால் தீனுடைய அமைப்பையே சீர்குலைத்த அவர்கள் தொலைந்து போகட்டும்! தொலைந்து போகட்டும்!' என்று நான் கூறுவேன்.'

விளக்கம்:

இந்த ஹதீஸ் தன்னுள் ஒரு மகத்தான நற்செய்தியினையும் மிகப்பெரிய அச்சுறுத்தலையும் கொண்டு திகழ்கிறது. நற்செய்தி இது: தாம் கொண்டு வந்த தீனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயலாற்றியவர்களைப் பெருமானார் (ஸல்) அவர்கள் அங்கு வரவேற்பார்கள். எச்சரிக்கை இது: எவர்கள் வேண்டுமென்றே தீனுக்கு முற்றிலும் எதிரான புதுப்புது விஷயற்களை தீன் என்ற பெயரிலேயே நுழைய வைக்கின்றார்களோ, அத்தகையோர் பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களின் திருக்கரங்களால் 'கவ்ஸர்' என்னும் தண்ணீரைப் பருகும் பேற்றனை இழந்துவிடுவார்கள்!

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: 'தூய்மையான எண்ணத்துடன் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவை மொழிந்தவன் மறுமைநாளில் என்னுடைய பரிந்துரையைப் பெறுவான்.' (புகாரி)

விளக்கம்:

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் இரத்தினச்சுருக்கமானவை. ஆயினும் பொருட்செறிவு மிக்கவை. இதன் கருத்து: எவன் ஓரிறைக் கொள்கையை மேற்கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லையோ, எவன் இறைவனுக்கு இணைவைக்கும் அருவருக்கத்தக்க மாசுகளில் உழல்கின்றானோ அத்தகையவனுக்கு பெருமானார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிட்டாது. இதே போன்று ஒருவன் நாவினால் மட்டும் திருக்கலிமாவை மொழிந்து, உள்ளத்தால் அதனை அவன் மெய்யென்று உறுதிகொள்ளவில்லையென்றால், அவனும் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிந்துரையைப் பெறும் வாய்ப்பினை இழந்துவிடுவான்.

'உள்ளத்தில் ஏகத்துவத்தைக் குறித்து உறுதி கொண்டவனாக' - என்று வேறு ஹதீஸ்களில் காணப்படுவது போல் - உள்ளத்தால் ஈமானில் உறுதி கொண்டவர்களுக்கும், ஓரிறைக் கொள்கை உறுதியானது, தலைசிறந்தது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மட்டுமே பெருமானார் (ஸல்) அவர்கள் பரிந்துரை வழங்குவார்கள். உள்ளத்தின் உறுதிதான் மனிதனைச் செயலின் பக்கம் ஊக்குவிக்கின்றது என்பது தெளிவு. தன் குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது என்ற செய்தி ஒருவனுக்கு கிடைத்துவிட்டாலே போதும் - அலறி அடித்து ஓடுகின்றான்! உள்ளத்தில் ஈமான் கொள்வதன் நிலையும் இது போன்றதுதான். இது மனித உள்ளத்தில் ஈடேறும் கவலையைத் தோற்றுவித்து செயலாற்ற அவனை ஊக்குவிக்கின்றது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: 'உங்களில் மிக நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்' எனும் அஷ்ஷுஅரா அத்தியாயத்தின் திருவசனம் இறங்கிய போது, பெருமானார் (ஸல்) அவர்கள் (குறைஷிகளை நோக்கி) 'குறைஷிக் கூட்டமே! உங்களை நீங்களே நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்! அல்லாஹ்வின் வேதனை உங்கள் மீது வருவதை என்னால் இம்மியளவும் தடுத்திட முடியாது.

அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அல்லாஹ்வின் வேதனை உங்கள் மீது வருவதை கொஞ்சமும் என்னால் போக்கிட முடியாது. அப்பாஸ்பின் அப்துல் முத்;தலிபே!(இவர் பெருமானாரின் சொந்த சிற்றப்பா) அல்லாஹ்வின் வேதனை எங்கள் மீது வருவதை என்னால் சிறிதளவும் அகற்றிட முடியாது. என் மாமியான ஸஃபிய்யாவே! அல்லாஹிவின் தேனையிலிருந்து உம்மை சிறிதளவும் என்னால் காப்பாற்ற முடியாது. என் மகளான பாத்திமாவே! நீ என்னுடைய பொருளிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கேள்! கேட்பதை அளிக்க சக்தி பெற்றுள்ளேன். ஆயினும், அல்லாஹ்வின் வேதனை உன் மீது வருவதை என்னால் தடுத்திட முடியாது! (எனவே நீங்களே உங்களைக் காத்துக் கொள்ள கவலைப்படுங்கள்! நன்னம்பிக்கையும், நற்செயல்களுமே மறுமையில் பயனளிக்கும்')

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடையே ஒருநாள் உரையாற்றினார்கள். அதில், போரில் கிடைக்கும் பொருட்களைத் திருடும் பிரச்சனையைக் குறித்து பெரும் முக்கியத்துவத்துடன் எடுத்துரைத்தார்கள். பின்னர் அண்ணலார் கூறினார்கள்:

1. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் ஒட்டகம் ஒன்று அமர்ந்து உரக்க அழுதுகொண்டு இருக்க, அவர் 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிடுங்கள்!' (இப்பாவத்தின் மீது விளைவிலிருந்து காப்பாற்றுங்கள்) என்று மன்றாட, நானோ 'சிறிதும் உனக்கு உதவிட முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு எடுத்துக் கூறிவிட்டேன்' என்று நான் சொல்லுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

2. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் குதிரை ஒன்று அமர்ந்து கனைத்துக்கொண்டிருக்க, அவர் 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிட விரைந்து வாருங்கள்!'என்று கூறிட, நானோ 'உனக்காக எதுவும் என்னால் செய்ய முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு நான் அறிவித்து விட்டேன்' என்று கூறுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

3. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் ஆடு ஒன்று அமர்ந்து கத்திக்கொண்டிருக்க, 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிட வாருங்கள்!'  என்று கூவியழைத்துக் கொண்டிருக்க, அப்போது நான் அவரது முறையீட்டிற்கு பதிலளிக்கும் வகையில், 'உனக்காக எதுவும் செய்ய முடியாது. உலகில் உன்னிடம் இறைக்கட்டளைகளைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன்' என்று கூறுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

4. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் ஒரு மனிதர் அமர்ந்து கொண்டு மனங்கிக் கொண்டிருக்க, அவரோ'அல்லாஹ்வின் தூதரே!, எனக்கு உதவிட வாருங்கள்!'  என்று முறையிட்டுக் கொண்டிருக்க, அதற்கு நான் பதில் தரும் வகையில், 'இங்கு நான் உனக்காக எதுவும் செய்திட இயலாது. உலகில் உன்னிடம் இந்தச் செய்தியை நான் எடுத்துரைத்துவிட்டேன்' என்று கூறுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

5. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் துண்டுத்துணிகள் பறந்து கொண்டிருக்க, அவர் 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவி செய்யுங்கள்' என்று அழைத்திட, அதற்கு நான் பதிலளிக்கும் வகையில், 'நான் உனக்காக எதுவும் செய்திட இயலாது. நான் உலகிலேயே உனக்குச் செய்தியை சமர்ப்பித்து விட்டேன்' என்று கூறுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

6. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காண வேண்டாம் அதாவது, அவருடைய கழுத்தில் தங்கமும் வெள்ளியும் சவாரி செய்ய 'தூதரே எனக்கு உதவிடுங்கள்!' என்று கூவிக்கொண்டிருக்க, அவருக்கு பதில் அளிக்கும் வகையில் 'உன் பாவத்தின் கோர விளைவுகளை இம்மியளவும் நான் அகற்ற இயலாது, இச்செய்தியை உலகிலேயே உனக்கு அறிவித்து விட்டேன்' என்று சொல்லும் நிலைமை ஏற்பட வேண்டாம். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:

பிராணிகள் பேசுவதாகவும் துணிகள் அசைந்து பறப்பதாகவும் கூறப்பட்டிருப்பதன் கருத்து இதுதான்: போரில் கிடைக்கும் பொருட்கள் தொடர்பான இந்தத் திருட்டுகளை இறுதித் தீர்ப்புநாளில் மறைக்க முடியாது. ஒவ்வொரு பாவமும் கூவிக்கூவியழைத்துக் கூறும், அவன் குற்றவாளி என்பதை அறிவிக்கும்! இது போரில் கிடைக்கும் பொருட்களைத் திருடும் விஷயத்தில் மடடுமல்ல, எல்லாப் பெரிய பாவங்களின் விஷயத்திலும் இதே நிலைதான் ஏற்படும். அல்லாஹ் இந்தத் தீய கதியிலிருந்து ஒவ்வொரு முஸ்லிமையும் காப்பாற்றட்டும்! மரணம் வருவதற்கு முன்னாரேயே பாவமன்னப்புக் கோருவதற்கான நற்பேறு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கிட்டட்டும்!

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

விதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'உங்களில் ஒவ்வொருவரின் சொர்க்கமும் நரகமும் முன்னரே எழுதப்பட்டுவிட்டன.' மக்கள் வினவினார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால் நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை நம்பிக்கொண்டு செயல்படுவதை விட்டுவிடலாமல்லவா?' அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அண்ணலார்: 'இல்லை! செயல்படுங்கள்! ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளானோ அகற்கான தவ்ஃபீக் (இறைவன் அருளும் பேறு) அளிக்கப்படுகிறது. எவன் பாக்கியவானோ அவனுக்குச் சுவனத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் இறையுதவி அளிக்கப்படுகிறது. மேலும், எவன் துர்ப்பாக்கியவானோ (நரகவாசியோ) அவனுக்கு நரகத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் பேறு அளிக்கப்படுகிறது.'

இதன் பின் அண்ணலார் திருக்குர்ஆனிலுள்ள 'அல்லைல்' அத்தியாயத்தின் பின்வரும் இரு வசனங்களை ஓதினார்கள்: எவனொருவன் பொருளைச் செலவு செய்து இறையச்சத்தின் பாதையை மேற்கொண்டு, இன்னும் நன்மையானதை உண்மைப்படுத்தினானோ (அதாவது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானோ) அவனுக்கு நாம் நல்ல வாழ்க்கைக்குரிய (சுவனத்துக்குரிய) பாதையில் செல்வதற்கு பேறு அளிப்போம். எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் புரிந்து, இறைவனைக் குறித்து அலட்சியமாக வாழ்ந்து, நல்லதொரு வாழ்வைப் பொய்யென்று கூறினானோ அவனுக்கு நாம் துன்பமிகு வாழ்க்கைக்குரிய (நரகத்துக்குரிய) பாதையில் செல்வதற்கு பேறு அளிப்போம்.' (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:
மனிதன் என்னென்ன செயல்களின் காரணத்தால் நரகம் செல்வான், மேலும் என்னென்ன செயல்களின் காரணத்தால் சுவனம் செல்வான் என்பது அல்லாஹ்விடம் தீர்மான்க்கப்பட்டுவிட்டது. இறைவன் இந்த விதி நிர்ணயத்தை மிகவும் விளக்கமாக திருக்குர்ஆனில் எடுத்துரைத்துள்ளான். மேலும், அண்ணலாரும் இவ்வுண்மையைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். இனி, நரகத்தின் பாதையில் நடைபோடுவதா, சுவனத்தின் பாதையில் நடைபோடுவதா என்பதை முடிவு செய்வது மனிதனின் வேலையாகும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவனது பொறுப்பேயாகும். ஏனெனில், சுயவிருப்பப்படி தேர்ந்தெடுக்கும் ஆற்றலை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான். பாதையைத் தேர்ந்தெடுத்திட அவனைச் சுதந்திரமாக விட்டுவிட்டான். இந்தச்சுதந்திரந்தான் அவனுக்கு தண்டனையை வாங்கித் தரும், அதுவே, அவனுக்கு சுவனத்தைப் பெற்றுத் தரும். ஆனால், விவரம் புரியாத பலர் தமது பொறுப்பை இறைவனின் மீது சுமத்திவிட்டு தம்மைத்தாமே கட்டாய நிலையிலுள்ளவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.

அறிவிப்பாளர்: அபூ கிஸாமா (ரலி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து.

எனது தந்தை கூறினார்கள்: நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், 'நாங்கள் எங்களுடைய நோய்கள் குணமாவதற்கு ஓதி ஊதி பிரார்த்தனை செய்வதும், எங்களுடைய நோய்களை நீக்கிக்கொள்வதற்காக நாங்கள் மருந்துகளைப் பயன்படுத்துவதும், துன்பங்களிலிருந்து தப்பித்திட நாங்கள் மேற்கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் விதியைக் கொஞ்சமாவது தடுத்திடுமா?' என வினவினேன். அதற்கு 'இவையனைத்தும் கூட அல்லாஹ்வின் விதியே ஆகும்' என அண்ணலார் கூறினார்கள்.

விளக்கம்:
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய பதிலின் சாரமாவது: எந்த இறைவன் இந்த நோயை நம் விதியில் எழுதினானோ, அதே இறைவன்தான் இந்த நோயை இன்ன மருந்தினால் அல்லது இன்ன வழிமுறையினால் போக்கிவிட முடியும் என்று தீர்மானித்துள்ளான். நோயைக் கொடுத்தவனும் இறைவனே, அதனை நீக்கும் மருந்தைப் படைத்தவனும் அவனே! அனைத்துமே அவனால் தீர்மானிக்கப்பட்ட நியதிகள், சட்டங்களின்படியே நடைபெறுகின்றன.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நான் ஒருநாள் வாகனத்தில் அண்ணலாரின் பின்னால் அமர்ந்திருந்தேன். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மகனே! உனக்கு சில விஷயங்களைக் கூறுகின்றேன் ( கவனத்தடன் கேள்!) நீ இறைவனை நினைவு கூறு, இறைவன் உண்னை நினைவுகூறுவான். நீ இறைவனை நினைவில் வைத்தால், அவனை உன் முன்னாலேயே காண்பாய். கேட்டால் இறைவனிடமே கேள்! ஏதேனும் துன்பத்தில் நீ உதவி கோரினால் இறைவனிடமே உதவி கேள்! இறைவனை உனக்கு உதவியாளனாக ஆக்கு! மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உனக்கு நன்மையேதும் செய்திட விரும்பினாலும் அல்லாஹ் உனக்காக எழுதி வைத்த அளவே கிடைக்கும். அதைத் தவிர வேறு எவராலும் உனக்கு எதுவும் அளித்திட இயலாது (அதாவது, கொடுப்பதற்கென எவரிடத்திலும் எதுவுமில்லை. அனைத்தும் இறைவன் வழங்கியவைதாம். எவருக்கு எந்த அளவு கொடுக்க வேண்டுமென அவன் முடிவு செய்கின்றானோ அந்த அளவுதான் அவருக்குக் கிடைக்கும். அது எந்த வழியில் - எவர் மூலமாக கிடைத்தாலும் சரியே!) மேலும் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி உனக்குத் தீங்கு விளைவிக்க நாடினாலும், அல்லாஹ் உனக்கு விதித்து வைத்ததைத் தவிர வேறெந்தத் தீங்கினையும் அவர்களால் உனக்கு விளைவித்திட முடியாது. (எனவே, அல்லாஹ்வை மட்டுமே நீ உனக்கு ஒரே துணைபுரிபவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்)'. (மிஷ்காத்).

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலவீனமான இறைநம்பிக்கையாளனை விட வலிமையான இறைநம்பிக்கையாளன் சிறந்தவனும், இறைவனுக்கு மிகவும் விருப்பமானவனும் ஆவான். இருவருக்கும் நன்மையும், பயனும் உண்டு. மேலும், நீ (மறுமையில்) பயனளிக்கும் விஷயத்தையே ஆசைப்படு! உன் சிரமங்களில் இறைவனிடம் உதவி கேள்! ஊக்கம்மிழக்காதே! உனக்கு துன்பம் ஏதும் வந்தால், 'நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்கும்' என்றெண்ணாதே! மாறாக, அல்லாஹ் இதனை விதித்துள்ளான், அவன் விரும்பியதைச் செய்தான் என்று கருது! ஏனெனில் இப்படிச் செய்திருந்தால் - அப்படிச் செய்திருந்தால் என்றெண்ணுவது ஷைத்தானின் செயல்பாட்டுக்கு வழி திறந்துவிடும்.' (மிஷ்காத்)

விளக்கம்:
இந்த நபிமொழியின் முதல் பகுதியின் கருத்து இது: ஓர் இறைநம்பிக்கையாளன் இருக்கின்றான், அவன் உடல்பலமும், சிந்தனை வலிமையும் அதிகம் பெற்றிருக்கின்றான். இப்படிப்பட்டவன் தன் வலிமை அனைத்தையும் இறைவழியில் செலவிடுவானாயின் - பலவீனமான, ஆரோக்கியம் சீர்கெட்டிருக்கின்ற நம்பிக்கையாளனைவிட அல்லது சிந்தனை ரீதியாக உயர்ந்திராத நம்பிக்கையாளனைவிட அதிகமாக மார்க்கப் பணியாற்றிட அவனால் முடியும். பலவீனமான இறைநம்பிக்கையாளனும் இறைவழியில் தன் ஆற்றல்களைக் செலவிடத்தான் செய்வான் என்றாலும், முதலாமவன் அளவிற்கு அவனால் பணியாற்றிட முடியாது. எனவே, அவனுக்கு இரண்டாமவனை விட அதிகமாகவே வெகுமதி கிடைக்க வேண்டும். ஆனால், இருவரும் ஒரே பாதையில் - இறைவழியில் - நடைபோடும் பயணிகளாய் இருப்பதால் பலவீனமான அந்த இறைநம்பிக்கையாளனுக்கு அவனது பணி சிறிதளவில் இருக்கும் காரணத்தால் வெகுமதி மறுக்கப்படாது. உண்மையில், இந்த நபிமொழியின் நோக்கம், வலிமையுள்ள இறைநம்பிக்கையாளனுக்கு 'உன் வலிமையின் மதிப்பை உணர்ந்துகொள், அதன் வாயிலாக எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவு முன்னேறு, பலவீனம் வந்துவிட்ட பின்னால் மனிதன் எதனையாவது செய்ய நினைத்தாலும் அவனால் செய்ய முடியாது' என்று உணர்த்துவதேயாகும்.

இறுதிப்பகுதியின் கருத்தாவது: இறைநம்பிக்கையாளன் தனது புத்திக்கூர்மை, அறிவாற்றல், தனது திட்டமிடும் திறன், வலிமை ஆகியவற்றைத் தன் துணையாகக் கொள்வதில்லை. மாறாக, அவனுக்குத் துன்பம் நேர்ந்தால் அவனது உள்ளம் இவ்வாறு சிந்திக்கும்:

'இந்தத் துன்பம் என் இறைவனிடத்திலிருந்து வந்திருக்கின்றது, எனக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது.' மேலும், இவ்வாறு அந்தத் துன்பம் - இறைநம்பிக்கையாளனின் 'தவக்குலை' - முற்றிலும் இறைவனைச் சார்ந்து வாழும் பண்பினை வளர்க்கும் கருவியாக அமைந்து விடுகின்றது.

புதன், 10 ஏப்ரல், 2013

மரண அறிவிப்பு - (கமருல் ஜமான் கடல்கரைத்தெரு (மரணம் சவுதி தம்மாம்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடல்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹீம் அப்துல்லதீப் அவர்களின் மகனும் முத்தலிப், அய்யூப், அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரருமாகிய கமருல் ஜமான் அவர்கள் இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஃபஜ்ருக்குமுன்னால் சவுதிஅரேபியா தம்மாமில் வஃபாத்தாகிவிட்டார்கள்

انا لله وانا اليه راجعون
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக

தொடர்பு : சகோதரர் அப்துல் முத்தலிப் -  தம்மாம்
0501109822