துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 23 பிப்ரவரி, 2011

இறையச்சமுள்ள ஒழுக்கமான பெண்கள் மீதுஅவதூறு கூறுதல்

ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு ஒர் ஆணுடன் தன் இச்சையைப் பூர்த்தி செய்து கொண்டாலோ, அல்லது திருமணமான பெண் தன் கணவனை விடுத்து மற்றொருவனிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டாலோ அவள் உலகில் அனைவரிடமும் இழிவாகவே கருதப்படுவாள். இது உண்மையில் இழிவான செயல்தான்.

இந்த இழிவான செயலைச் செய்த பெண்கள் பிறருடைய குத்தலான பார்வைக்குட்பட்டுத் தினமும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஓர் ஆண் மீது இவ்வாறான களங்கத்தைச் சுமத்தினாலும் அது நாளடைவில் மறைந்து விடுவதுண்டு. ஆனால் ஒரு பெண் மீது இக்களங்கம் சுமத்தப்படுமானால் அவள் மண்ணறைக்குச் சென்று விட்டாலும் கூட பேசப்படாமல் இருப்பது இல்லை. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையைக் கெடுக்க நினைப்போர் அவள் மீது கற்பில்லாதவள் என்ற ஒரு பழியைப் போட்டால் போதுமானது. அன்று முதல் அவள் நிம்மதி அனைத்தும் அடியோடு அழிந்து விடும்.

கிராமப்பகுதிகளில் தெருக்களிலும், வீடுகளிலும் இன்னும் இதுபோன்ற பல இடங்களிலும் ஒன்று கூடி அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள், அவள் அப்படி இவள் இப்படி என்று பிற பெண்களின் கற்பைக் களங்கப்படுத்தும் விதமாகப் பேசுகின்றனர். பெண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் கொஞ்சமும் நாணமின்றி ஒருத்தி மற்றொருத்தியின் கற்பைக் களங்கப்படுத்தித் திட்டுவதையும், நாம் காண்கின்றோம். இந்நிலை நகரங்களிலும் காணப்படுவதுண்டு.

இவர்கள் இவ்வாறு பேசுவது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதை உணரவில்லை போலும்!

''உங்களுக்கு (திட்டமாக அறிவில்லாத) ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித்திரிகின்றீர்களா? இன்னும் நீங்கள் இதை இலேசானதாகவும் எண்ணிவிட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ் விடத்தில் மிகப் பெரிய (பாவமான)தாக இருக்கிறது.'' (அல்குர்ஆன் 24:15)

''கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறியவர்கள் (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.'' (அல்குர்ஆன் 24:4)

அவதூறு கூறி பூமியில் குழப்பங்களை உண்டாக்கி அநியாயம் செய்யப்படுவதைத் தடை செய்வதற்காகவும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்காகவும் இறைவன் இச்சட்டத்தை மனித சமுதாயத்திற்குப் பெரும் பரிசாகக் கொடுத்துள்ளான்.

இச்சட்டம் கடுமையான சட்டமாக இருப்பதால் இதைச் சற்று விரிவாகவே நாம் காண்போம்!

திருமணமாகாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.

''விபச்சாரம் புரிந்த பெண், விபச்சாரம் புரிந்த ஆண் ஆகிய இவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் (படிப்பினை பெறுவதற்காகவும் சாட்சியாகவும்) மூஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.'' (அல்குர்ஆன் 24.2)

திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்பது மார்க்கச் சட்டம்.

நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் என்றும் என்னை அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறிய முஸ்லிம் ஒருவனை மூன்று காரணங்களுக்காக அன்றி, கொலை செய்வது ஆகுமானதல்ல.

1. திருமணமான பின்பும் விபச்சாரம் செய்தல்

2. ஒரு (மனித) உயிரை கொலை செய்தல்

3. இஸ்லாத்தை விட்டு விலகி முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

விபச்சாரத்திற்கு இந்தளவிற்குச் சட்டம் கடுமையாக இருப்பதால் ஒருவன் ஒருவனைக் கொல்ல நினைத்தால் அல்லது ஒரு பெண்ணைக் கொல்லவோ களங்கப்படுத்தவோ நினைத்தால், இப்பழியை அவர்கள் மீது போட்டு இலகுவாக முடித்து விடலாமல்லவா? அவ்வாறு ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற் காகவே அவதூறு கூறுபவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்; இல்லை என்றால் அவதூறு கூறிய குற்றத்திற்காக அவருக்கு எண்பது கசையடி கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

அவதூறு கூறுபவர்களுக்கு எண்பது கசையடி என்று இறைச்சட்டம் இருப்பதால் பொய் சாட்சி சொல்வதற்கு எவரும் துணிய மாட்டார். அப்படியே துணிந்து நான்கு பேர் பொய் சாட்சி கூறிவிட்டாலும் நிச்சயம் அவர்கள் உலகிலேயே ஒருநாள் பிடிபடுவார்கள்.

எப்படி என்றால், கெட்டவர்கள் என்றும் ஒற்றுமையாக இருக்கவே முடியாது; என்றாவது ஒருநாள் பிரச்சினை வந்து தான் தீரும். அன்று அவர்கள் பிரிந்து விடுவார்கள். அவர்கள் இவ்வாறு இந்த விஷயத்தில் பொய் சாட்சி கூறியிருந்தால் பிரிந்த பின்பு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும் போது உண்மை வெளியாகி விடும்; அன்று அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அவதூறு கூறியவர்களுடைய சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற மற்றொரு சட்டமும் 24:4 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அவதூறு கூறியவர்களுக்குத் தண்டனை கொடுத்து விட்டால், அதைக் காண்போர் மற்றவர் மீது அவதூறு கூறமாட்டார்கள். அநியாயம் எவ்விதத்திலும் ஏற்படாது.

அன்னியப் பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள், அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். தன் மனைவியின் மீது ஒருவன் களங்கத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது என்பதையும் நாம் காண வேண்டும்.

தன் மனைவி மீது அவதூறு கூறும் ஒருவன், அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. அவளுக்குத் தக்க தீர்ப்பை வழங்கி விடலாம். தன் மனைவியைத் தவறான செயலில் கண்ட ஒருவன் சாட்சிகளைக் கொண்டு வந்து நிரூபிக்கவில்லை என்ற காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டால் அது நியாயமாகாது; அல்லது அவன் கொண்டு வரும் வழக்கைச் சாட்சிகள் இல்லை என்ற காரணத்திற்காக நிராகரித்தாலும் நியாயமில்லை. ஏனெனில் இவ்வாறு நிராகரித்து அவனைத் தன் மனைவியுடன் வாழச் செய்வதால் பல தீய விளைவுகள் உண்டாகும் சாத்தியங்கள் உள்ளன.

தன் மனைவி தனக்குச் செய்த துரோகத்தை ஜீரணிக்க முடியாத காரணத்தால் இவன் தன் மனைவியை எந்த நிமிடமும் கொன்று விடலாம். கொன்று விட்டுக் கொலை குற்றத்திற்காக இவன் மரண தண்டனைக்குள்ளாக நேரிடலாம்; அல்லது இவன் அமைதியாக இருந்து விட்டாலும் அவளுக்குத் தான் செய்த துரோகத்தைக் கணவன் பார்த்தது உறுத்திக் கொண்டே இருக்கும். கணவன் தன்னைக் கொன்று விடுவானோ என்ற அச்சத்தில் அவள் தன் கணவனை எந்த நிமிடமும் கொன்று விடலாம். அப்படி அவள் அவனைக் கொன்று விட்டால் அது மிகப் பெரும் அநியாயமாக ஆகிவிடும். இப்படி ஒரு செயல் நடந்து விட்டால் அங்கு நியாயம் அழிந்து போகிறது. கணவன் சொன்ன சாட்சி மட்டும் போதும் என்று அவனுடைய மனைவிக்கு தண்டனை கொடுத்தாலும் அநியாயமாகி விடும். ஏனென்றால் தன் மனைவியைப் பிடிக்காத காரணத்திற்காகவோ, அல்லது வேறு ஏதாவது கோபத்தின் காரணமாகவோ கூட அவளைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்ட கணவன் இவ்வழியைக் கையாளலாம்.

இப்படிப்பட்ட இக்கட்டான சசூழ்நிலையிலும் கூட இருவரில் யாருக்கும் அநியாயம் ஏற்படாத வகையில் தீர்ப்பளிக்குமாறு இறைவன் தன் சட்டத்தை விவரித்துள்ளான்.

''எவர்கள் தங்கள் மனைவிமார்கள் மீது அவதூறு கூறி(அதை நிரூபிக்க) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமல் இருந்தால், அவன் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து ஐந்தாவது முறை (இதில்) நான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகட்டும்! என்றும் (அவன் கூற வேண்டும்)'' (அல்குர்ஆன் 24:6-7)

இவ்வாறு அவன் சத்தியம் செய்து கூறியவுடன் அவன் சொல்வது உண்மை என்று தீர்ப்பளித்து விட முடியாது. அவனுடைய மனைவியிடமும், அவ்வாறே சத்தியம் செய்யக் கட்டளையிட வேண்டும்.

''இன்னும் (அவனுடைய மனைவி) தன் மீதுள்ள தண்டனையை விலக்க அவன் கூறிய குற்றத்தை மறுத்து ''நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி ஐந்தாவது முறை அவன் உண்மையாளர்களில் உள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்)'' (அல்குர்ஆன் 24:8-9)

இவ்வாறு இருவரும் சத்தியம் செய்த பின்பு, விவாகரத்து(தலாக்) செய்யாமலேயே நிரந்தரமாகப் பிரிந்து விடுவார்கள். இதற்கு லிஆன் என்று சொல்லப்படும்.

அவர்கள் செய்யும் சத்தியம் தாங்களாக வீட்டில் அமர்ந்து கொண்டு செய்து கொள்வதில்லை. மாறாக, இஸ்லாமிய நீதிமன்றத்தில் தான் இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவதூறு கூறுதல் இவ்வளவு பெரும் விளைவுகளையெல்லாம் உண்டாக்கி விடுவதால்தான் மனிதனை அழிக்கக் கூடிய ஏழு பாவங்களில் இதுவும் ஒன்று என்று இஸ்லாமியக் குற்றவியல் சட்டம் கூறுகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பாவங்கள் மட்டுமல்லாமல், எவை எல்லாம் பாவமோ அவை அனைத்தையும் விட்டு அல்லாஹ் மனிதர்களைக் காத்து நேர்வழியில் செலுத்துவானாக. அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அருள்புரிவானாக அமீன்.