துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

திங்கள், 20 அக்டோபர், 2014

அறிவார்ந்த அறவுரைகள் சில

   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَىٰ أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاءٌ مِّن نِّسَاءٍ عَسَىٰ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
;முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49: 11)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலறைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49:-12)

மேற்கூறிய இரண்டு வசனங்களும் இடம் பெற்றிருக்கும் அல் ஹுஜ்ராத் அத்தியாயம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறங்கிய ஒழுக்க போதனைகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு இறைவிசுவாசிக்கு அவசியம் இருக்க வேண்டிய குணநலன்களைக் கற்றுத் தருவது இந்த அத்தியாயத்தின் கருப்பொருளாகக் காணப்படுகிறது. இப்போதனைகள் மதீனாவில் ஒரு கட்டுக் கோப்பான இஸ்லாமிய சமூகம் உருவாக்கப்பட்டதன் பின்னர் இறக்கப்பட்டன. அந்த சமூகத்தில் காணப்பட்ட ஜாஹிலிய்யாக் கால பண்புகளை மாற்றுவிக்க இவ்வத்தியாயத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் முனைகின்றன. அந்த வகையில் இங்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் 11 மற்றும் 12 ஆம் வசனங்கள் ஒரு சமூகத்தின் பரஸ்பர ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைத்து விடக் கூடிய மோசமான குணங்கiயிட்டு எச்சரிக்கை செய்கின்றது.

விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஒருவேளை அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம்.

இங்கு இவ்வசனத்தில் இடம் பெற்றிருக்கும் ஸகிர எனும் பதம் ஒருவரை சிறுமைப்படுத்தி தாழ்த்தி நோக்குவதைக் குறிக்கும். இன்னும் ஒருவரையொருவர் பரிகசிப்பதையும் இப்பதம் குறிக்கிறது. ஒருவன் நடத்தைகள், தோற்றம், பொருளாதார நிலை போன்றவற்றைக் கவனத்தில் கொண்டே பெரும்பாலும் தாழ்த்தப்படுகின்றன. பரிகசிக்கப்படுகின்றன. ஒரு முஸ்லிம் எப்பொழுதும் சகோதர முஸ்லிம்களை மதித்து நடக்க வேண்டும். அவர்களின் மானம் மரியாதை என்பன பங்கப்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு முஸ்லிம் சகோதரனின் மரியாதையில் ஏற்படும் களங்கம் தனது உள்ளத்தையும் வருத்த வேண்டும். இத்தகைய உணர்வுகளை தன்னகத்தே கொண்ட மனிதர்களினால் உருவான ஒரு சமூகத்தையே முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவில் தோற்றுவித்தார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிமின் குருதியும் (உயிரும்) மானமும், செல்வமும், இன்னொரு முஸ்லிமின் பார்வையில் புனிதமானவையாகும். (முஸ்லிம்)

சகோதரர்களே! இஸ்லாம் கூறும் ஈமானியப் பண்புகளுக்கும் நமக்கும் இடையில் எவ்ளவு இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதை நினைக்கும்
போது நாம் வெகுதூரம் விலகிச் சென்றுள்ளோம் என்பது தெளிவாகப்படுகிறது. நமக்கு மத்தியில் ஒருவர் ஒரு வார்த்தை தவறுதலாகப் பேசி விட்டால் அவரைப் பல வகையில் பரிகாசம் செய்து சிரித்து மகிழ்கின்றோம். உடல் உறுப்புக்களில் ஏற்படும் வித்தியாசங்களை அல்லது தோற்றங்கள் நடை, பேச்சு, பழக்க வழக்கங்களைப் பார்த்து கிண்டல் செய்கிறோம். இன்னும் சிலர் வயோதிகர்களைக் கண்டு விட்டால் அவர்களின் மனம் புண்படும் அளவுக்கு அவர்களை நையாண்டி செய்கின்றனர்.

இன்னும் நமக்கு மத்தியில் ஒருவர் இஸ்லாமியப் பண்புகளை ஏற்று நடக்கும் போது அல்லது ஒரு குறையை நமக்கு மத்தியில் சுட்டிக் காட்டும் போது அவரை நாம் பரிகசிக்கின்றோம். கண்சாடை செய்து அடுத்தவர்களின் கவனததையும் திருப்பி சிரிக்க வைக்கின்றோம். அடுத்து, சில சகோதரர்கள் மற்றும் சிலரின் குரல் வன்மையை பழித்துக் காட்டுவதை அவதானிக்கின்றோம். இவ்வாறான மோசமான செயல்களைப் புரியம் ஒருவர் அடுத்த சகோதரர் ஒருவரின் மனோநிலை பாதிக்கப்படுகின்றது. மனம் வேதனையடைகின்றது என்பதைச் சற்றும் கவனத்தில் கொள்வதில்லை.

பரிகாசத்தைத் தமது தொழிலாகக் கொண்டு செயல்படும் சகோதரர்கள் தாம் பரிகசிக்கும் சகோதரர் அல்லாஹ்விடத்தில் உயர்வான அந்தஸ்தில் இருக்கலாம் என்பதை மறந்து விடுகின்றனர். பரிகசிக்கப்படுபவர் அல்லாஹ்வின் பார்வையில் மறுமையின் நற்பேறுகளைப் பெறுவதற்கு மிகவும் அருகதையுடையவராகக் காணப்படலாம். ஆனால் வெளித்தோற்றத்தில் அவர் ஒரு பரதேசியைப் போன்று காட்சியளிக்கலாம். இறைத்தூதரின் வாக்கு இதனை உண்மைப்படுத்துகிறது.

நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடற்கட்டுகளையோ தோற்றங்களையோ பார்க்க மாட்டான். மாறாக உங்களின் உள்ளத்தையே பார்க்கின்றான்
(முஸ்லிம்)

பரிகசிப்பவர்கள் இவ்வுலகில் தமது செயல்களுக்கான விளைவுகளைக் காணாத போதும் மறுமையில் கண்டு கொள்வார்கள். அவர்கள் கண்சாடையின் மூலம் ஒருவரை பரிகசிக்கும் போது அச்செயல் பதிவு செய்யப்படுகின்றது.

ஓ! எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம் (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும் விடாது இதில் வரையப் பெற்றிருக்கின்றதோ! என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர். (18:19)

இந்த வசனத்தில் வந்திருக்கும் சிறிய பாவங்கள் என்பது பரிகாசத்தைக் குறிக்கின்றது என இமாம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இங்கு ஆண்கள், ஆண்களையும், பெண்கள் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம் என வந்துள்ள போதும் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் பரிகசிப்பதையும் இவ்வசனங்கள் தடை செய்கின்றன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். மானின்  உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் இச்செயல்களையிட்டு எப்போதும் தங்கள் உறுப்புக்களை எச்சரிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேச வேண்டாம்

மக்கள் தங்களுக்கு மத்தியில் ஒருவர் இன்னொருவரைக் குத்திப் பேசுதல், ஏளனஞ் செய்தல், குறை கூறித் திரிதல் போன்ற செயல்களை இவ்வசனம் குறித்துக் காட்டுகிறது. இன்னும் மக்களைப் பழித்தல் போன்ற செயல்களையும் குறிக்கும். மக்களை நேருக்கு நேர் ஏளனஞ் செய்து கொண்டும் மறைமுகமாக மக்கள் மத்தியில் ஏனையோரின் குறைகளை கூறித்திரிபவனையும் அல்குர்ஆன் சபிக்கிறது. ஒருவர் ஏதேனும் ஒரு தவறைச் செய்து விட்டால் அவருடன் நேரடியாகப் பேசி அவரின் தவறை திருத்த முனைய வேண்டும். மாறாக அவரின் தவறை ஏனைய மக்களிடம் கூறித் திரிவதில் எந்த நலனும் ஏற்படப் போவதில்லை. அன்றி மக்கள் மத்தியில் பகையுணர்வுகளையே வளர்த்து விடுகின்றது. அல்குர்ஆன் ஏற்படுத்த விரும்பும் உயர்ந்த சமூக அமைப்பைச் சீர்குலைக்கும் பண்புகளில் ஒன்றாக இது காணப்படுகின்றமையினாலேயே அல்குர்ஆன் இதனைக் கண்டனம் செய்கிறது.

நீங்கள் ஒருவரையொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்.

இவ்வசனம் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் மக்கள் மத்தியில் பரவிக் காணப்பட்ட மோசமான பண்பு ஒன்றினை கண்டித்தே இறக்கப்பட்டது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு சென்ற போது அங்கு ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. இறைத்தூதர் அவர்கள் மதீனாவை அடைந்த போது மக்கள் சிலர், சிலருக்கு பட்டப் பெயர் கூறி அழைக்கின்றனர் என்ற விசயத்தைக் கூறினர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே இவ்வசனம் இறக்கப்பட்டது.

இந்த ஜாஹிலிய்யப் பண்பு இன்றைய சமூகங்களில் மலிந்து காணப்படுகின்றது. சாதாரண முஸ்லிம்கள் பட்டப்பெயர் சூட்டுவது ஒரு புறமிருக்க இஸ்லாத்தோடு மிகவம் நெருக்கமான, அல்குர்ஆனை சுன்னாவைக் கற்பவர்களுக்கு மத்தியிலும், இஸ்லாமியக் கருத்துக்களை மரிமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியிலும் இப்பண்பு பரவி இருப்பது கவலைக்கிடமானதாகும். இன்று சாதாரணமாக தடியான், மொட்டையன், கிழவன், நொண்டியன் போன்ற மோசமான பண்புகளைக் கூறி மக்கள் அழைக்கப்படுகின்றனர். மேலும் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரை முன்னைய மதத்தைக் கூறி தமிழன், யூதன் என்று அழைக்கப்படுவதுமுண்டு. இவ்வாறு பட்டப் பெயர் சூட்டுவது ஒருவர் இன்னொருவருக்குப் புரியும் அநியாயமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவன் தனது சகோதரனுக்கு அநீதி இழைக்கவோ, அவனை இழிவு படுத்தவோ மாட்டான்.

இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமா பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட செயலாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவாகள் தாம் கொடுமைக்காரர்கள்.

ஒரு விசுவாசி பட்டப் பெயர் கூறி ஒருவரை அழைப்பது மிகவும் மோசமான ஒரு பாவச் செயலாகும் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகின்றது. அத்தோடு இவ்வசனத்தில் மேலே கூறப்பட்ட பண்புகளும் ஈமானுக்கு புறம்பானவைகளாகும். தொடர்ந்து இந்த இழிச் செயல்களைப் புரிந்து வரும் ஒருவன் விசுவாசியாக இருக்க முடியாது. அவரை இப்பண்புகள் ஈமானிய கூட்டத்தை விட்டு வெளியேற்றி விடுகின்றன. இச்செயல்கள் ஒவ்வொன்றும் இஸ்லாம் பூண்டோடு அழித்தொழித்த ஜாஹிலிய்யாக் கால பண்புகள் என்பதைத் தெளிவாகப் புரிந்து அவற்றை விட்டும் ஒதுங்கி வாழ்வதன் மூலமே ஒருவரின் ஈமான் பசுமையானதாகக் காட்சியளிக்கும்.

விசுவாசிகளே! அதிகமாக சந்தேகங் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன.

பொதுவாக ஒருவர் மற்றவரின் நடத்தைகள், பேச்சுக்கள் போன்றவற்றில் சந்தேகங் கொள்வதை ழன்னுஎன் பதம் விலக்குகின்றது. இவ்வசனத்தில் அதிகமாக என்று கூறப்பட்டிருப்பது அனைத்து விதமான யூகங்களில் (சந்தேகங்களில்) இருந்தும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும். ஏனெனில் சில யூகங்கள் பாவமாக அமைகின்றன.

ஒருவர் இன்னொருவரைப் பற்றி எக்காரணமுமின்றி சந்தேகப்படுதல், சிலரை எப்போதும் சந்தேக எண்ணத்துடன் அணுகுவது, வெளிப்படையாக நல்லவர்கள், கண்ணியமானவர்கள் என்று தோன்றுபவர்களையும் சந்தேக நோக்கோடு பார்ப்பது போன்ற வரையறைகளுக்குட்பட்ட சந்தேகங்கள் யூகங்கள் பாவமானவையாகக் காணப்படுகின்றன.

இஸ்லாம் சந்தேகங் கொள்வதை முற்றாக எச்சரிக்கின்றது. ஏனெனில் எந்த சந்தேகத்தில் தீங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாது.. (புகாரி) ஏதேனம் ஒரு விசயம் தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டால் அச்சந்தேகத்தின் நிழலில் நின்று கூட இறுதி முடிவு எடுக்கக் கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நல்லெண்ணம் கொள்ளுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். ஒருவரின் செயலில் நன்மைக்கும் தீமைக்கும் இடமிருக்கும் போது வீண் சந்தேகங் கொண்டு தீய முடிவுகளை எடுப்பது பாவமாக அமைகின்றது. ஒருவரின் செயல்களையிட்டு நல்லெண்ணம் கொள்வதே முஃமின்களின் பண்பாகும் என அல்குர்ஆன் பல இடங்களில் உணர்த்துகின்றது.

இங்கு இன்னுமொரு அம்சமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது ஒரு சமூகத்தில் மக்களுடன் இணைந்து வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஏனையோரின் உள்ளங்களில் சந்தேகங்களை எழுப்பி விடும் வகையில் செயல்படக் கூடாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனதுமனiவி ஸபிய்யாவை அழைத்துச் சென்ற போது, இரண்டு ஸஹாபிகள் (நபித்தோழர்கள்) அவர்களைக் கடந்து சென்ற பொது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் ஸலாம் கூறினார்கள். அப்போது அவர்களை நிறுத்தி தன்னுடன் இருக்கும் பெண் தன் மனைவி ஸபிய்யா என்று கூறி அவர்கள் இருவரையும் சந்தேகம் எனும் நோயில் இருந்து காப்பாற்றினார்கள். இது போன்ற முன்மாதிரிகளைக் கடைபிடிக்கும் போது பல தீமைகளைத் தடை செய்யலாம். சந்தேகம் எனும் நோய்க்கு உள்ளத்தில் இடமளிக்கும் போது இன்னும் பல கொடிய நோய்கள் தோன்றி சமூகத்தினை முழமையாக உருக்குலைத்த விடுகின்றன.

மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்.

ஒருவரின் சந்தேகம் ஏற்பட்டு விட்டால் மக்கள் அவரின் செயல்கள் ஒவ்வொன்றையும் துரவித் துரவி ஆராய முற்படுகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது மனித கண்ணியங்கள் உரிமைகள் என்பவற்றுக்கான உறுதியான பாதுகாப்பினை ஏற்படுத்தினார்கள். ஒரு முஸ்லிமின் சொத்துக்கள், மானம், உயிர் என்பன புனிதமானவைகளாகும். அவற்றில் களங்கம் ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகும். முஸ்லிம்களின் குறைகளைத் துரவித் தேடித் திரிவது, துரவித் துரவி ஆராய்வது போன்ற செயல்கள் மோசமான பாவங்களாகும். அவற்றுக்கான தண்டனைகள் கொடியவையாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவரின் வீட்டில் நடக்கும் செயல்கள் அவரின் அனுமதியின்றி யார் அறிந்து கொள்ள முனைகின்றானோ அவனின் கண்களைக் பிடுங்கி விடுவது அவரின் மீது குற்றமாகாது (புகாரி)