துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

புதன், 29 ஜூன், 2011

தூய எண்ணம்

அறிவிப்பாளர் : உமர் பின் கத்தாப் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:
சீர்திருத்தத்திற்கும், ஒழுக்கப் பயிற்சிக்கும் மிகத் தேவையான, முக்கியமானதொரு நபிமொழியாகும் இது. நபியவர்களின் இந்தப் பொன்மொழிக்குப் பொருள் இதுதான். நற்செயல்களின் விளைவுகள், எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எண்ணம் சரியானதாக இருப்பின், அந்க நற்செயலுக்கான கூலி கிடைக்கும். இல்லையெனில் கிடைக்காது அச்செயல் பார்ப்பதற்கு எவ்வளவு நல்லதாகாத் தோன்றினாலும் சரியே.

அச்செயல் இறைவனின் திருப்திக்காகச் செய்யப்பட்டு இருந்தால்தான் மறு உலகில் அதற்கான நற்கூலி கிடைக்கும். அந்தச்செயலை அவன் செய்வதற்கு உலக ஆசை தூண்டுகோலாய் இருக்குமானால், உலகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவன் அதனைச் செய்திருந்தால். மறுஉலகில் அச்செயல் விலை போகாது; அதற்கு மதிப்பு இருக்காது. ஆவனுடைய இந்தச் செயல் அங்கு செல்லாக்காசாகத்தான் கருதப்படும்.

இந்த உண்மையைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தை எடுத்துக்காட்டாகக் கூறி தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஹிஜ்ரத் என்பது எவ்வளவு பெரிய நற்செயல்! இருப்பினும் எவராவது இந்த நற்செயலை இறைவனுக்காகவும், இறைத்தூதருக்காகவும் புரிந்திடாமல் தம் உலகாதாய நோக்கங்களைப் பெற்றிட இதனைச்செய்வாராயின் வெளிப்படையாகப் பார்த்தால், அது மிகப் பெரிய நற்செயலாகத் தென்படும். ஆனால், இந்தச் செயலால் மறுஉலகில் எவ்விதப் பலனும் கிட்டாது. இதற்கு நேர்மாறாக அச்செயல் புரிந்தவர் போலித்தனம், மோசடி ஆகிய குற்றங்களுக்குத்தான் ஆளாவார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்:

நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?
அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறைநீதிமன்றத்தில்; நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள்நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்:
இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?
இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருற்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில்; நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான்.

அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருற்தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன்

இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப் புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசிவிடுங்;கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். (முஸ்லிம்)

விளக்கம்:
மேற்சொன்ன மூன்று அறிவிப்புகளும் தெளிவுபடுத்தும் உண்மை இதுதான்: மறுமை வாழ்வில் ஒரு நற்செயலின் புறத்தோற்றத்தைக் கொண்டு எந்த வெகுமதியும் கிடைத்துவிடாது. அங்கு இறைவனின் திருப்திக்காகவும் உவப்புக்காகவும் செய்யப்படும் நற்செயலே நற் கூலிக்கு உரியதாய் கணிக்கப்படும். ஏக இறைவனை விடுத்து மற்றவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவோ மக்களிடம் உயர் மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ ஒரு செயல் செய்யப்பட்டிருந்தால் அதற்கு இறைவனின் பார்வையில் எள்ளளவும் மதிப்பில்லை, அது எவ்வளவு பெரிய நற்செயலாகத் தென்பட்டாலும் சரியே! மறுஉலகில் அச்செயலுக்கு எந்த மதிப்பும் இருக்காது. இறைவனின் துலாக்கோலில் அது செல்லாக் காசாகத்தான் கணிக்கப்படும்.
மேற்சென்ன தன்மைகள் கொண்ட இறைநம்பிக்கை அங்கு ஒருவனுக்கு எந்தப் பலனையும் தராது. அத்தகைய வணக்கங்கள் எந்த புண்ணியமும் ஈட்டித் தராது.

யதார்த்த நிலை இதுதான். இதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. நிலைமை இவ்வாறிருக்க வெளிப்பகட்டுக்காகவும், புகழாசைகளுக்காகவும் செயல்படும் உணர்வுகள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவை பெரும் நாசத்தை விளைவிக்கக்கூடாது. இல்லையெனில் நம் உழைப்பு, முயற்சி அனைத்தும் வீணாகிவிடும். நம்முடைய இந்த முதலீடு வீணாகிவிட்டதே என்று நாம் மறுமையில் கை பிசைந்து நிற்போம். சின்னஞ்சிறு நற்செயலும் நமக்கு துணை செய்யாதா என்று தவித்து நிற்கும் அந்த மறுமைநாளில், நம்முடைய வாழ்வின் முதலீடு முழவதும் முற்றிலும் வீணாகிவிட்டிருப்பது தெரியவரும்.